2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் நடைபெற்று வருகிறது.தமிழகத்திலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம்,பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.
இந்த நிலையில், இன்று மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது, எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து மதராஸா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் இது குறித்து முறையிட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது எதிர் அணியினருடன் சேர்ந்து நடுவர் வீராங்கனை தாக்கியதாக சொல்லப்படுகிறது.இதனால் இரு அணிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டு நாற்காலிகளை தூக்கி சண்டையிட்டனர்.
இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பஞ்சாபில் வீராங்கனைகள் தங்கியிருக்கும் பகுதிக்கு ஆட்சியர் மற்றும் காவல்துறை உதவியுடன் வீராங்கனைகள் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதோடு தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு நாளை ரயில் மூலம் டெல்லியிலிருந்து தமிழ்நாடு திரும்புவார்கள் என்று தமிழ்நாடு மேம்பாட்டு ஆணையம் சார்பில் கூறப்பட்டுள்ளது.