சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதி, வால்டாக்ஸ் சாலை, 57வது வார்டு, யானைக்கவுனி காவல் நிலையம் அருகில் உள்ள ஜக்காபுரம் பகுதியில் 13 வது நாள் மக்களைத் தேடி நடைபயணத்தை இன்று (ஜனவரி 22) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். அப்போது பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து அவற்றை உடனடியாக நிறைவேற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு, “வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தொலைநோக்கு பார்வையில் 24/7-ம் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் 248 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது சுமார் 6,000 கோடி செலவில் அப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம்.
அதிலும் குறிப்பிட்டு சொல்லக்கூடிய பல பணிகளின் நிறைவு இந்த ஆண்டுக்குள் வெளிவரும். வடசென்னை உருவான காலத்தில் இருந்து இதுவரையில் எத்தனையோ ஆட்சிகள் ஏற்பட்டு இருந்தாலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சியில் தான், வடசென்னைக்கு முக்கியத்துவம் தந்து அதற்கான அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன” என்றார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியின் அவதூறு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமிக்கு விமர்சிப்பதை தவிர வேறு என்ன வேலை இருக்கிறது. ஆனால், எங்களுக்கு மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பல பணிகள் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் மீது மக்களுக்கு அசராத, தளராத நம்பிக்கை ஏற்படுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். தொடர்ந்து மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை நிறைவேற்றி வருகிறோம்” என பதிலடி கொடுத்தார்.