தமிழ்நாட்டில் உள்ள பத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 93 அஞ்சல் அலுவலகங்களை மூட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், அந்த உத்தரவை ஒன்றிய அரசு திரும்பபெறவேண்டும் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஒன்றிய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய எம்.சிந்தியாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், " இந்தியாவின் ரயில் அஞ்சல் அலுவலகங்கள் இந்திய மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவை. கடைசி நிமிடத்தில் தபால் அனுப்ப விரும்புபவர்கள் கூட ரயில் நிலையத்திற்கு ஓடிச் சென்று சேர்த்து விடுவது இந்திய மக்களின் இனிமையான அனுபவங்கள்.
தனியார் மயமும், தனியார் கூரியர்கள் வருகையும் இந்திய அஞ்சல் துறையை நோக்கி தொடர்ந்து தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன. படிப்படியாக மக்களை தனியார் நோக்கி தள்ளுகிற வேலையை ஒன்றிய அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.
அத்தாக்குதல்களின் ஒரு பகுதியாக ஆர் எம் எஸ் பதிவு அஞ்சல் அலுவலகங்களையும், விரைவு அஞ்சல் அலுவலகங்களையும் ஒன்றாக இணைக்க போவதாக இந்திய அஞ்சல் துறை 17.10.2024 ஆணையின் மூலம் அறிவித்து இருக்கிறது.இரண்டு சேவைகளும் வெவ்வேறு நோக்கங்களுக்காக வெவ்வேறு வகையிலான வாடிக்கையாளர்களுக்காக உருவாக்கப்பட்டவை.
இரண்டையும் இணைப்பது எந்த வகை வாடிக்கையாளர்களுக்கும் பயனளிக்காது. குறிப்பிட்ட சேவை மீதான கூர் கவனத்தையும் பாதிக்கும். சாமானிய மக்கள் மீது சுமையையும், வேகமான சேவை விரும்புகிற வாடிக்கையாளர்களுக்கு தாமதத்தையும் உருவாக்குகிற முடிவாகும் இது. இந்தியா முழு மையம் 93 அலுவலகங்கள் மூடப்படும் என்றும் அதில் பத்து அலுவலகங்கள் தமிழ்நாட்டில் உள்ளது என்றும் அறிய வருகிறோம். ஆகவே உடனடியாக தலையிட்டு இம்முடிவை நிறுத்த வேண்டும்" என்று அதில் கூறியுள்ளார்.