
ஒன்றியத்தில் பா.ஜ.க ஆட்சி அமைத்தது முதல், ‘எங்கும் காவி, எதிலும் காவி’ என்ற எழுதப்படாத நடைமுறை திணிக்கப்பட்டு வருகிறது.
ஒன்றிய அரசு நிகழ்ச்சிகளில் காவி வண்ணம் என தொடங்கி, மெட்ரோ நிலையங்களில் காவி, வந்தே பாரத் என்ற தொடர்வண்டிகளில் காவி என நீடித்து, சாதி - மத பிளவுகளைக் கடந்த உலக பொதுமறையாளர் திருவள்ளுவருக்கும் காவி என பா.ஜ.க அட்டூழியம் வானத்தை எட்டி வருகிறது.
அதில் சிக்கிக்கொண்ட நிறுவனங்களாக, பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் இருக்கிற கல்வி நிறுவனங்களும் அமைந்துள்ளன. மத்தியப் பிரதெசத்தில் ஆட்சியமைத்திருக்கும் பா.ஜ.க, அங்கு வண்ணத்தில் காவி மயமாக்கல் செய்வதிலிருந்து ஒரு படி மேல் சென்று, கல்லூரி பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் புக்கங்களை உள்ளடக்கி கல்வியில் காவிமயமாக்கல் செய்துள்ளது.

இவ்வரிசையில், தற்போது ராஜஸ்தானில் ஆட்சிப்பொறுப்பேற்ற சில மாதங்களில், கல்லூரிகளில் காவி வண்ணம் பூச ஆணையிட்டிருக்கிறது மாநில பா.ஜ.க அரசு.
இது குறித்து காங்கிரஸ் வெளியிட்ட அறிக்கையில், “ராஜஸ்தான் கல்லூரிகள் பலவற்றில், அடிப்படை வசதிகள் கிடைக்கப்படாமல், மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். சரியான வகுப்பறைகள் இல்லை. கல்லூரியின் கட்டுமான சீரமைப்பின் தேவை அதிகரித்துள்ளது.
ஆனால், அந்த எவற்றையும் கண்டுகொள்ளாமல், காவி பூசுவதையே ஒற்றை நோக்கமாக வைத்து, கல்வியில் காவியை திணித்து வருகிறது பா.ஜ.க” என கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.








