அரசியல்

அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!

ஒரு சிறுபான்மையின சமூகத்தை குறிவைத்து தாக்கும் பா.ஜ.க.வின் பாசிச போக்கு; அடக்குமுறையால் அடிப்படை உரிமைகளை இழக்கும் இஸ்லாமியர்கள்.

அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன், இருந்த அடிமைவாதம், சிறுபான்மையினர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் அனைத்தும், தற்போதும் தலைதூக்கி வருகின்றன என்பது மோடியின் பேச்சுகள் வழி வெளிப்பட்டு வருகிறது.

பேச்சுகள் மட்டுமல்லாது தேர்தல் நடவடிக்கைகளிலும் அம்பலப்பட்டு வருகிறது.

அவ்வகையில், நேற்று (07.05.24) நடந்த 3ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் வாக்களிக்க சென்ற சிறுபான்மையின குறிப்பாக இஸ்லாமிய பெண்களை தடுத்து நிறுத்தி, ஆதார் அட்டையில் பிழை உள்ளதென வாக்குரிமையை பறித்துள்ளனர் உத்தரப் பிரதேச காவல் துறை.

அதே பகுதியிலேயே, சில இஸ்லாமிய வாக்காளர்களில் ஆதார் அட்டைகளை கிழித்தும் வீசியுள்ளனர் காவல் துறையினர். கூடுதலாக, சில இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல், அடித்து துறத்திய சம்பவமும் அரங்கேறியுள்ளது.

அதிகரிக்கும் இஸ்லாமிய வெறுப்பு : பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, “இன்று நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் என எல்லோரும் பாகுபாடுகளை அனுபவித்து வருகிறார்கள். பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.கவின் எண்ணங்களால் இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ளது.

எந்த விலை கொடுத்தாவது அதிகாரத்தைப் பெறுவதில் மட்டுமே பா.ஜ.க கவனமாக உள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக வெறுப்புணர்வை வளர்த்து வருகின்றனர். ஆனால் காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணியும் நாட்டை வலுப்படுத்துவதற்காக போராடி வருகிறது” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, “நம் முன்னோர்கள் இந்திய மண்ணிற்காக தங்களது இரத்தங்களை சிந்தியுள்ளனர். இன்று, அதே மண்ணிற்காக நாம் போராடுகிறோம். நம் உரிமைகளை மீட்டெடுக்க போராடுகிறோம். நம் முன்னோர்கள் எதெற்கெல்லாம் போராடினார்களோ, அவ்வனைத்திற்காகவும் தற்போது நாம் போராடுகிறோம்” என மக்களிடையே உரையாற்றினார்.

இந்நிலையில், “மகாராஷ்டிரத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, ‘பா.ஜ.க 400 இடங்களில் வென்றால் தான், பாபர் மசூதி பூட்டிலிருந்து ராமர் கோவிலை காப்பாற்ற முடியும்’ என மோடி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ஏன் இது போன்ற பொய்யான தகவல்களை மோடி பேசுகிறார்? முடிவுகாலம் நெருங்கி கொண்டிருக்கிறது என்பதாலா?” என்ற கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்வாறு அச்சத்தில், பல பொய்யான செய்திகளை பரப்பி, வெறுப்புகளை உண்டாக்கி வரும் மோடி அரசின் வீழ்ச்சி, நடந்து முடிந்த 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவின் வழியே வெளிப்பட்டுள்ளது என எதிர்கட்சி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

எனினும், அதற்கு வழக்கம் போல் பதிலளிக்காமல், தொடர்ச்சியான தேர்தல் விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகிறார் மோடி.

banner

Related Stories

Related Stories