கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10-ம் தேதி 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தொடர்ந்து மே 13 -ம் தேதி இதன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிபெறும் என கூறப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என சமீபத்தில் வெளியான கருத்து கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது லோக்போல் (Lok poll) என்ற நிறுவனம் சார்பில் தெலங்கானா மாநிலத்தில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பிலும் அங்கு காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என கூறப்பட்டுள்ளது. மொத்தம் 60 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சி 41 சதவீதம் முதல் 44 சதவீத ஓட்டுக்கள் பெற்று 61 முதல் 67 தொகுதிகளில் வெற்றி பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. தெலங்கானாவில் ஆட்சியமைக்க 60 இடங்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல தற்போதைய ஆளும் கட்சியான பாரத ராஷ்டிரிய சமிதி 39 சதவீதம் முதல் 42 சதவீத ஓட்டுகள் பெற்று 45 முதல் 51 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிது 6 முதல் 8 தொகுதிகள் வெல்லும் என்றும், பாஜகவுக்கு அதிகப்பட்சம் 2 முதல் 3 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து 9 ஆண்டுகளுக்கு முன்னர் தெலங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது, அங்கு இந்த வருடன் டிசம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.