மணிப்பூரில் வன்முறை நீடித்து வரும் நிலையில், குகி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களைச் சிலர் நிர்வாணமாக அழைத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூர வீடியோ இணையத்தில் வெளியாகி நாட்டையே உலுக்கியது.
இந்த கொடூர சம்பவம் மே 04 ம் தேதி இம்பாலுக்கு அருகே உள்ள காங்போக்பி என்ற மாவட்டத்தில் நடந்துள்ளது. இணையம் முடக்கப்பட்டதால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் கூடிய நாடாளுமன்றத்திலும் மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். ஆனால் ஒன்றிய அரசு எந்த விளக்கமும் கொடுக்காமல் அவையை ஒத்திவைத்தது. இதையடுத்து 'இந்தியா' கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மணிப்பூர் சென்று ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளனர். குடியரசுத் தலைவரைச் சந்திக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தில் மவுனமாக இருக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து ஆங்கில ஊடகத்தில் பலரும் கட்டுரை எழுதி வருகின்றனர். அந்த வகையில் DNA INDIA தளத்தில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி அமித் பன்சால் ஒன்றிய அரசை விமர்சித்துக் கட்டுரை எழுதியுள்ளனர்.
அதில், மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையில் கொல்லப்பட்டவர்களில் 90% குகி இன பழங்குடியின மக்கள். அதேபோல் இவர்களின் 80% தங்களது சொந்த மாநிலத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர்.
ஆயுதப்படை சட்டம் மார்ச் மாதம் விலக்கிக் கொண்ட பிறகு, மெய்தெய் மக்களை பட்டியல் பழங்குடியாக்க வேண்டுமெனப் பிரசாரம் தொடங்கப்பட்டது. மே மாதம் 3ம் தேதி நடத்தப்பட்ட போராட்டம் கலவரமாக மாற்றப்பட்டது.
கலவரம் தொடங்கியதும் குகி அரசதிகாரிகள் அனைவரையும் ஆளுங்கட்சி அகற்றியது. அரம்பை தெங்கொல் மற்றும் மெய்தெய் லீபன் குழுக்கள்தான் குகிகளுக்கு எதிராக வன்முறைகளை நிகழ்த்தின.
காவலரிடமிருந்து ஆயுதம் பறிக்கப்பட்டால், அவரை சுடும் அதிகாரம் காவலருக்கு இருக்கிறது. எனினும் 4,000 ஆயுதங்களைத் திருடிச் செல்லப்பட்டிருக்கின்றன.
ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகள் கிட்டத்தட்ட 1500 பேர் மணிப்பூர் காவல்துறை மற்றும் அரசின் உதவியுடன் எந்த பயமுமின்றி வீதிகளில் உலவுகின்றனர். இவ்வளவு கொடூரம் நடந்தும் பாஜக முதலமைச்சர் பதவி விலகவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.