தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நடத்துவது தொடர்பாக விரைவில் சுமூகத் தீர்வு காணப்படும் என சட்டமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார்.
தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஆதீனங்களுக்கென தெய்வீகப் பேரவையை உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான் என்று தெரிவித்தார்.
திருத்தேர் உருவாக்கும் பணி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளிட்டவற்றை ஆதீனத்தை வைத்தே தமிழ்நாடு அரசு தொடங்கியதாக குறிப்பிட்ட அமைச்சர் சேகர்பாபு, தருமபுரம் ஆதீனத்தில் பல்லக்கு பட்டணப் பிரவேசம் வரும் 22-ம் தேதி நடைபெறவிருப்பதால், அதற்குள்ளாக சுமூக தீர்வு காணப்படும் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், தருமபுரம் ஆதீனம் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் கேலிக்கு வழி வகுத்துள்ளது. ஏனெனில், தருமபுரம் ஆதீதனத்தை தர்மபுரி ஆதீனம் என பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவுக்கு தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பதிலளிக்கும் வகையில் நாரயணன் திருப்பதியின் பதிவை ரீ ட்வீட் செய்து, “இது என்ன எங்க ஊர் மக்களுக்கே தெரியாத🤔 தருமபுரி ஆதீன பட்டினப்பிரவேசம். நாராயணன் Sir, சும்மா ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக எந்த ஊருணு கூட தெரியாம பதிவிட கூடாது. அது தருமபுரம், தர்மபுரி இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.