அரசியல்

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!

பாஜகவின் சித்தாந்தத்திற்கும், அரசியலுக்கும் ஒவ்வாத திரைப்படங்களை வெளியிட விடாமல் தடுக்கும் பாசிச நோக்கம் இதில் உள்ளடங்கியுள்ளது என ஒளிப்பதிவு திருத்தச் சட்டம் குறித்து மார்க்சிஸ்ட் சாடியுள்ளது.

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? பாஜக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கருத்து சொன்னால் பகிரங்கமாக மிரட்டுவதா? என பாஜகவின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிக்கையில், “அண்மையில் பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது நேரடியாக படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞர்களும் இத்தகையதொரு மிக மோசமான சட்டத்திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட திரையுலகினர் ஒன்றிணைந்த கடிதம் வாயிலாகவும் இக்கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுத்துள்ளனர். தணிக்கை குறித்த ஆட்சேபணை இருந்தால் படைப்பாளிகள் மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவை தன்னிச்சையாக கலைத்துவிட்டு, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசே சூப்பர் தணிக்கைக் குழுவாக செயல்பட்டு அவர்களது சித்தாந்தத்திற்கும், அரசியலுக்கும் ஒவ்வாத திரைப்படங்களை வெளியிட விடாமல் தடுக்கும் பாசிச நோக்கம் இதில் உள்ளடங்கியுள்ளது. ஏற்கனவே ஊடக சுதந்திரம் குறித்த தரப்பட்டியலில் 180 உலக நாடுகளில் இந்தியா 142வது இடத்தில் இருக்கிறது.

இப்பின்னணியில் தமிழக திரைக்கலைஞர் சூர்யா அவர்களும், “சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல்லாது, அதன் குரல் வளையை நெறிப்பதாக இருக்கக் கூடாது” என தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார். ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூக ஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த திரைக் கலைஞர் சூர்யாவிற்கு, பாஜக இளைஞர் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்திற்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. எனவே அரசியல் சாசனம் அனைவருக்கும் வழங்கியுள்ள எந்தவொரு உரிமையின் மீதும் யாரும் கைவைக்க அனுமதிக்க முடியாது என்பதோடு, பாஜகவின் இத்தகைய பாசிச நடவடிக்கைகளை கண்டிக்கவும், மேற்கூறிய சட்டத்திருத்தத்தை கைவிட வலியுறுத்தியும் அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து குரலெழுப்ப முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories