பாதாள சாக்கடை திட்டம், சுத்தகரிக்கப்படாத கழிவு நீர் மழைநீர் வடிகாலில் கலப்பது போன்ற காரணங்களால், தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2023ல் கூறப்பட்ட நூறு விழுக்காடு பாதுகாப்பான கழிவுநீர் அகற்றல் என்பதற்கான வாய்ப்பில்லை என்று 2019ம் ஆண்டு இந்திய கணக்காய்வு தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர பகுதியில் கழிவுநீர் கட்டமைப்பை விரிவுபடுத்துவதில் அரசு கணிசமான அளவில் முதலீடு செய்தது. இருப்பினும், திட்ட செயலகத்தில் இருந்த மந்தமான போக்கு, முழுமையான திட்டமிடல் இல்லாமை காரணமாக 100 விழுக்காடு பாதுகாப்பான கழிவுநீர் அகற்றுலுக்கான வாய்ப்பை சிதைத்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையுட் புதிதாக இணைந்த நகராட்சிகள், பேருராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் உரிய முறையில் செயல்படுத்தப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு , நாளொன்றுக்கு 242.73 மில்லியன் லிட்டர் என மதிப்பிடப்பட்டு சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் மழைநீர் வடிகால்களுக்குள் சட்டத்திற்குப் புறம்பான வகையில் கலந்து, அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், கூவம் ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்றதன் விளைவாக நீர்நிலைகளில் மாசு அதிகமாக ஏற்பட்டதாகவும் அறிக்கையில் சுடிக்காட்டப்பட்டுள்ளது.
சிக்கனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமை, குறைபாடுள்ள திட்டமிடல் மற்றும் திட்ட செயலாகத்தில் திறனின்மை காரணமாக செலவிடப்பட்ட நிதிக்கு உரிய பலன் அடைவதில் இருந்த பல்வேறு தவறுகளை தணிக்கை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை, டெண்டருக்கான ஒப்புதல் அளிப்பதில் காரணமற்ற காலதாமதங்கள், ஒப்பந்த மேலாண்மையில் பிரச்சினைகள் இருந்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் கழிவுநீர் கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்காக நடைபெறும் திட்டங்களை முடிப்பது இயல்பை மீறிய தாமதங்கள் ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரின் மறுசுழற்சி மற்றும் பயன்பாடு 20 விழுக்காடு இருக்க வேண்டும் என்ற அளவு நிலைக்கு மாறாக, 6.5 விழுக்காடு மட்டுமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.