ஒன்றியத்தில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு அமைந்தது முதற்கொண்டு இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிப்பதிலும் செம்மொழி அங்கீகாரம் பெற்ற தமிழ் மொழியை ஒவ்வொரு சமயங்களிலும் புறக்கணிப்பதையே திண்ணமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடே கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி நீந்தி கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பெற்று வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசியே மிகப்பெரிய ஆயுதமாக கொண்டு மாநில அரசுகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இருப்பினும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வருமானம் ஈட்டும் வகையில் தடுப்பூசியை மாநில அரசுகளே நேரடியாக வாங்கும் வகையிலான செயல்களிலும் ஈடுபட்டது ஒன்றிய பாஜக அரசு. அதற்கும் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு எழுந்தது,
மாநிலங்களுக்கான தடுப்பூசியை ஒன்றிய தொகுப்பில் இருந்து விடுப்பதிலும் மோடி அரசு தொடர்ந்து மெத்தனமாக செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இப்படி இருக்கையில், கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இந்திய அரசின் கோவின் (COWIN) இணைய தளத்தில் இருந்து தொலைப்பேசி எண் மூலம் பெற்றுக்கொள்ளும் வகையில் வகை செய்யப்பட்டிருக்கிறது.
அதில் மொழிகளுக்கான தேடலில் புதிதாக ஒன்பது இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் செம்மொழியான தமிழ் மொழியை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டு வர பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் தங்களுடைய காழ்ப்புணர்ச்சியை கொரோனா தடுப்பூசி இணைய தளத்திலும் மோடி அரசு கையாண்டிருப்பது கடும் கண்டனத்திற்குள்ளாகி வருகிறது.
இப்படியான மனநிலையை ஒன்றிய பாஜக அரசு எப்போதுதான் விட்டொழிக்கப் போகிறது என்றும் கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.