மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து மேற்கு வங்கத்தில் ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜிக்கு எதிராக பல அத்துமீறல் வேலைகளை பா.ஜ.க மற்றும் இந்துத்வா இயக்கங்கள் செய்து வந்தன. இதனால் வெளிப்படையாக மம்தா பானர்ஜி பல இடங்களில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
அதுமட்டுமின்றி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்ட பேரணியின்போது, மிகப்பெரிய வன்முறையை பா.ஜ.க அங்கு நிகழ்த்தியது. மேலும் மம்தா செல்லும் இடங்களில் பா.ஜ.க ஆதரவாளர்கள் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கங்களை எழுப்பினார்கள். இதன்மூலம் இந்துத்துவா கருத்துக்களை மக்கள் மத்தியில் புகுத்தும் வேலையை பா.ஜ.க செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் டாக்டர் அமர்த்தியாசென் கலந்துகொண்டார். அப்போது இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது, “வங்கத்தில் இதற்கு முன்பு ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று யாரும் கூறி, நான் ஒருபோதும் கேட்டதில்லை. ஆனால், இது மக்களை அடித்து, தாக்குவதற்குச் சமீப காலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
வங்க கலாச்சாரத்துடன் இதற்கு எந்தத்தொடர்பும் இல்லை என நான் நினைக்கிறேன். அண்மைக் காலத்தில் இங்கு ‘ராம நவமி’ அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையும் நான் இதற்கு முன் கேட்டறியவில்லை.
எனது 4 வயது பேத்தியிடம், உனக்கு பிடித்த கடவுள் எது? என்று கேட்டேன். அதற்கு அவள் ‘அன்னை துர்க்கை’ என கூறினாள். அன்னை துர்க்கையின் முக்கியத்துவம், ஒருபோதும் ‘ராம நவமி’யுடன் ஒப்பிட முடியாதது” இவ்வாறு டாக்டர் அமர்த்தியா சென் கூறியுள்ளார். வங்கத்தில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள், தற்போது வெளியில் நடமாடவே பயப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த கருத்துக்கு பதில் அளித்த மேற்கு வங்க பா.ஜ.க தலைவர் திலீப் கோஷ், “அமர்த்தியா சென்னுக்கு அநேகமாக வங்காளத்தை அறிந்திருக்க மாட்டார். அவருக்கு பெங்காலி அல்லது இந்திய கலாசாரம் பற்றி தெரியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திலீப் கோஷ், அமிர்திய சென் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கவேண்டும் என பலர் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.