அரசியல்

"தமிழகத்தின் வளத்தை சூறையாடவே புதிததாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்" - வைகோ கண்டனம்

பா.ஜ.க. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும் என வைகோ தெரிவித்துள்ளார்.

"தமிழகத்தின் வளத்தை சூறையாடவே புதிததாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்" - வைகோ கண்டனம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக மேலும் 104 கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் துறை அனுமதிகோரி, ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களில் செயல்படுத்த உள்ள நாசகார ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கோரி பொதுமக்களும், விவசாயிகளும் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேளாண்மைத் தொழில் செழித்து, தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, நாட்டுக்கே உணவளித்து வரும் காவிரி டெல்டா, ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டங்களால் முழுமையாகச் சூறையாடப்பட்டுவிடும்.

கடந்த 2018 அக்டோபர் மாதம் காவிரிப் படுகையில் சுமார் 6000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்ற வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் இந்திய அரசின் பெட்ரோலியத்துறை ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா நிறுவனம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.

"தமிழகத்தின் வளத்தை சூறையாடவே புதிததாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்" - வைகோ கண்டனம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச் சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு சுற்றுச் சூழல் அனுமதி அளித்திருக்கிறது. வேதாந்தா நிறுவனம் இதற்கான அடிப்படைப் பணிகளை முடித்துவிட்டது. ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு 27 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்ட ஆய்வு செய்திட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 கிணறுகள், திருவாரூரில் 59 கிணறுகள், தஞ்சையில் 17 கிணறுகள், அரியலூரில் 3 கிணறுகள், கடலூரில் 7 கிணறுகள், இராமநாதபுரத்தில் 3 கிணறுகள் என்று மேலும் 104 கிணறுகள் அமைக்கவும், இதற்காக ஒரு கிணற்றுக்கு ரூ.15 கோடி வீதம் மொத்தம் ரூ.1560 கோடி திட்டச் செலவு ஆகும் என்றும், ஓ.என்.ஜி.சி. சுற்றுச் சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது.

காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்கக் கோரியும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை முற்றாக கைவிடக் கோரியும் ஜூன் 23 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தொடங்கி, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம் மாவட்டம் - இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு இலட்சக்கணக்கான மக்கள் மனிதச் சங்கிலியாக கரம் கோர்த்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

"தமிழகத்தின் வளத்தை சூறையாடவே புதிததாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள்" - வைகோ கண்டனம்

மக்கள் கொந்தளிப்பை அலட்சியப்படுத்திவிட்டு, காவிரி தீரத்தைப் பாலைவனமாக ஆக்கியே தீருவோம் என்று மோடி அரசு வரிந்துகட்டிக்கொண்டு நிற்பதும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அரசு துணைபோவதும் கடும் கண்டனத்திற்கு உரியது. பா.ஜ.க. அரசு செயல்படுத்த திட்டமிடும் ஹைட்ரோ கார்பன் திட்டம், ஒட்டுமொத்தத் தமிழகத்தையே சூறையாடி விடும்.

எனவே, மத்திய - மாநில அரசுகள் விபரீதத்தை விதைக்காமல், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.” என வைகோ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories