உத்திர பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது நன்மதிப்பை சீர்குலைப்பதற்காக ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ராகுல் காந்தி தன்னை குற்றம்சாட்டி வருவதாக தெரிவித்தார். உங்கள் (ராகுல் காந்தி) தந்தை ராஜீவ் காந்தி தன் வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் ஊழலில் ‘நம்பர் ஒன்’னாக திகழ்ந்தார் என்று விமர்சனம் செய்தார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி இன்று வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘உயிரிழந்த ராணுவ வீரர்களின் பெயரால் வாக்கு சேகரித்து பிரசாரம் செய்யும் பிரதமர் அடிப்படை ஆதாரமில்லாத குற்றச்சாட்டின் பேரில் நேர்மையான மனிதரை தனது பேச்சின் மூலம் அவமதித்திருக்கிறார்.
ராஜீவ் காந்தி தனது உயிரை கொடுத்து பாடுபட்ட அமேதி தொகுதி மக்கள் அவரது குற்றச்சாட்டுக்கு இந்த தேர்தலில் பதில் அளிப்பார்கள். ஆமாம் மோடி அவர்களே, இந்த நாடு மோசடிக்காரர்களை ஒருபோதும் மன்னிக்காது’ எனத் தெரிவித்துள்ளார்.