முரசொலி தலையங்கம்

பரந்தூர் விமான நிலையம் ரத்து : த.வெ.க-வின் சூழலியல் அல்ல சூழ்ச்சியியல் - முரசொலி கண்னடம்!

விவசாயிகளுக்காக இல்லை. வேறு அரசியல் உள்நோக்கத்தோடு தான் த.வெ.க. அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது.

பரந்தூர் விமான நிலையம் ரத்து : த.வெ.க-வின் சூழலியல் அல்ல சூழ்ச்சியியல் - முரசொலி கண்னடம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29-08-2026)

சூழலியல் அல்ல சூழ்ச்சியியல்!

பரந்தூர் விமான நிலைய ரத்து விவகாரத்தில் சூழலியல்வாதி பட்டத்தை தனக்குத் தானே சூட்டிக் கொள்கிறது த.வெ.க. அரசு. அவர்கள் சூழ்ச்சியியலையே செய்ய நினைக்கிறார்கள் என்பதை சட்டசபையில் வெளிப்படையாக ஒப்புக் கொண்டு விட்டார் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா.

‘‘பரந்தூர் விமான நிலையமா? விவசாயிகளின் கண்ணீரா என்றால் எங்கள் தலைவர் விவசாயிகளின் கண்ணீர் பக்கம் தான் நிற்பார்’’ என்று கனைக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.பரந்தூர் விமான நிலையத்துக்காக விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட நிலங்கள் விவசாயிகளிடமே தரப்போகிறோம் என்று சொல்லி விட்டாரா முதலமைச்சர் விஜய்? இல்லை. இல்லவே இல்லை.

‘விவசாயிகள் பக்கம் நிற்பதற்காகவே நாங்கள் பரந்தூர் விமான திட்டத்தை ரத்து செய்திருக்கிறோம்’ என்று சொல்லும் த.வெ.க. அரசு, விவசாயிகளுக்காக என்ன செய்தியைச் சொல்லி இருக்கிறது? உங்கள் நிலம் உங்களிடமே வந்து சேரும் என்றா? முதலமைச்சர் அறிவிப்பிலும் விவசாயிகளுக்கு எந்த செய்தியும் இல்லை. அமைச்சர்கள் சொன்னதிலும் விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லை.

‘’விரைவில் புதிய விமான நிலையத்துக்கான இடத்தை முதலமைச்சர் அறிவிப்பார்’’ என்று சொல்கிறார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா. புதிய விமான நிலையம் அமைக்க 5 ஆயிரம் ஏக்கர் இடம் சென்னைக்கு அருகில் இருக்கிறதா? அந்த இடம் விவசாயிகளின் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கிறதா? விவசாயிகளிடம் இருந்து வாங்காமல் 5 ஆயிரம் ஏக்கர் இடத்தை ஒரே இடத்தில் அடையாளம் காணமுடியுமா? கோடிக்கணக்கான மக்கள் காதில் ‘லாட்டரி’ சுற்றுகிறார் ஆதவ் அர்ஜூனா.

அமைச்சர்கள் யாருக்கும் இது ஒன்றிய அரசின் திட்டம் என்பதே தெரியவில்லை. இது ஏதோ மாநில அரசின் கட்டுப்பாட்டில் பேருந்து நிலையம் கட்டும் திட்டத்தைப் போல நினைத்துக் கொள்கிறார்கள். விமானநிலையம் என்பது ஒன்றிய அரசின் திட்டம். இடத்தை தேர்வு செய்வதும், ஒப்புதல் வழங்குவதும், விமானநிலையம் அமைப்பதும் ஒன்றிய அரசு தானே தவிர, மாநில அரசு அல்ல. இந்த குறைந்தபட்ச சிற்றறிவு கூட இல்லாமல், த.வெ.க. அமைச்சர்கள் பதில் அளிப்பதைப் பார்த்தால் எரிச்சல் தான் வருகிறது.

பரந்தூர், பண்ணூர், திருப்போரூர், படாளம் ஆகிய நான்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டது. முதல் கட்ட பரிசீலனையில் திருப்போரூரையும், படாளத்தையும் ஒன்றிய அரசு நிராகரித்தது. பின்னர் பண்ணூரைவிட பரந்தூரே பொருத்தமானது என்று ஒன்றிய அரசு தேர்வு செய்தது. பரந்தூர் அமைந்தால் அதுதான் இந்தியாவில் மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும். இது எதையும் தெரிந்து கொள்ளாமல் அமைச்சர்கள் விதண்டாவாதம் செய்கிறார்கள்.

‘சுற்றிலும் இடம் வாங்கிவிட்டார்கள்’ என்று சொல்வது எல்லாம் அமைச்சர்கள் சொல்லும் பதிலா? ‘ஒரு தனியார் நிறுவனத்தைச் சொல்லி அவர்களுக்கு அங்கு இடம் அதிகமாக இருக்கிறது. அவர்களுக்காகத் தான் தி.மு.க. பேசுகிறது’ என்கிறார் ஒரு அமைச்சர். அந்த நிறுவனம், ‘எங்களுக்கு ஒரு ஏக்கர் கூட இல்லை, இருக்கிறது என்று நிரூபித்தால் அதை இலவசமாகத் தருகிறோம்’ என்று உச்சந்தலையில் ‘நறுக்கு நறுக்கு’ என்று கொட்டி விட்டது. இதெல்லாம் த.வெ.க. அமைச்சர்களுக்கு உறைக்காது.

‘விவசாயிகளிடம் இருந்து பெற்ற இடத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?’ என்று முன்னாள் நிதி – தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்ட கேள்விக்கு வாய்மூடி முதலமைச்சர் விஜய் எந்த பதிலையும் சொல்லவில்லை. எல்லாவற்றுக்கும் எழுந்து பதில் சொல்லும் ஆதவ் அர்ஜூனாவும் பதில் சொல்லவில்லை. ‘கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் குறித்து முதல் அமைச்சரிடம் ஆலோசித்து முடிவு பின்னர் அறிவிக்கப்படும்’ என்று மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் சொல்கிறார்.

பரந்தூர் விமான நிலையம் ரத்து : த.வெ.க-வின் சூழலியல் அல்ல சூழ்ச்சியியல் - முரசொலி கண்னடம்!

அடுத்த நிமிடமே தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா எழுந்து, ‘’கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் மாற்றித் தொழில் திட்டங்கள் மக்களைப் பாதிக்காதவாறு செயல்படுத்தப்படும். இதன் மூலம் தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஏற்படும். இரண்டாவது விமான நிலையம் வேண்டும். மக்கள் பாதிக்கப்படாமல் அது அமைக்கப்படும். ‘சிப்காட்’டும் மக்கள், விவசாயம் பாதிக்கப்படாத வகையில் தான் இருக்கும்” என்று சொல்லி இருக்கிறார்.

‘இன்னும் முடிவெடுக்கவில்லை’ என்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். ‘மாறுத் தொழில் திட்டம் செயல்படுத்தப்படும். சிப்காட் கூட வரலாம்’ என்கிறார் அமைச்சர் கீர்த்தனா. பரந்தூர் நிலத்தை வைத்து சூழ்ச்சியியல் நடத்துகிறார்கள் என்பது இதன் மூலமாகத் தெரிகிறது.

‘கையகப்படுத்தப்படுத்தப்பட்ட நிலத்தை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது’ என்று முன்னாள் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சொன்ன போது, த.வெ.க. அரசின் முழுத்தந்திரமும் வெட்ட வெளிச்சம் ஆனது.

“ஒரு குறிப்பிட்ட திட்டத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலம் சில காரணங்களால் செயல்படுத்த முடியாத நிலையில் மற்ற பொதுத் திட்டங்களுக்கு அரசு ஒதுக்கீடு செய்து உத்தரவு வழங்கிட சட்டங்களில் வழிவகை உள்ளது” என்று சொல்கிறார் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா. அப்படியானால் இவர்கள் தந்திரத்தோடு தான் முடிவு எடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்காக இல்லை. வேறு அரசியல் உள்நோக்கத்தோடு தான் த.வெ.க. அரசு இந்த திட்டத்தை ரத்து செய்துள்ளது.

விமானநிலையம் அமைக்க பெறப்பட்ட இடத்தில் விமானநிலையம் அமைக்கப்படப் போவதும் இல்லை. திட்டம் ரத்து செய்யப்பட்டதால் விவசாயிகளுக்கும் அந்த இடம் திருப்பி அளிக்கப் போவதும் இல்லை. மாற்றுத் திட்டம் என்ற பெயரால் நிலத்தை அப்படியே போடப் போகிறார்கள். எந்த தொலைநோக்குப் பார்வையுமற்ற அரசு பிற்காலத்தில் இந்த நிலத்தை ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கூட தாரை வார்க்கும் என்பதையும் மறுக்க முடியாது.

banner

Related Stories

Related Stories