முரசொலி தலையங்கம்

‘இந்தியா’ கூட்டணி மகிழ்ச்சியோடு இருக்க காரணம் இதுதான் : மோடிக்கு முரசொலி பதிலடி!

மோடியால் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையோ அதனால் தான் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுதான் உண்மை!

‘இந்தியா’  கூட்டணி  மகிழ்ச்சியோடு இருக்க காரணம் இதுதான் : மோடிக்கு முரசொலி பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (10-06-2024)

ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறோம்?

“தோற்ற காங்கிரஸ் கட்சி ஏன் மகிழ்ச்சியாக இருக்கிறது, ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்?” என்று கேட்கிறார் பிரதமர் மோடி. இது கூடவா அவருக்குப் புரியவில்லை? மோடியால் ஏன் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லையோ அதனால் தான் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுதான் உண்மை!

370 இடங்களைக் கைப்பற்றி இந்திய ஜனநாயகக் கட்டமைப்பை நாசப்படுத்த நினைத்திருந்தார் மோடி. அது இனி முடியாது அல்லவா? அதனால்தான் காங்கிரசும், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

'400 கிடைத்தால் தான் நாம் நினைத்ததைச் செய்ய முடியும்' என்று முழங்கினார் மோடி. ஒரே நாடு -–- ஒரே தேர்தல் என்று சொல்லி சர்வாதிகாரத் தன்மை கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நினைத்தார். அவரையே, இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகத்தை வைத்து வணங்க வைத்து விட்டார்கள் அல்லவா? இதுதான் ‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியாகும். அதனால் தான் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

‘பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம்’ என்று பா.ஜ.க. எம்.பி. இந்த தேர்தலில் பரப்புரை செய்தார். “400 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் மோடி ஏன் சொல்கிறார் என்றால், அரசியலமைப்பு சட்டத்தை நாம் மாற்றி அமைக்க வேண்டும் என்பதற்காகத்தான்” என்று பா.ஜ.க. எம்.பி.யும் முன்னாள் அமைச்சருமான அனந்த குமார் சொன்னார். ‘இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுமை பெறாத ஆவணம்” என்று தமிழ்நாட்டு ஆளுநர் ரவியும் அவ்வப்போது சொல்லிக் கொண்டு இருந்தார். ஆர்.என்.ரவி ஏதோ அல்லாடி கிருஷ்ணசாமி போல பேசித் திரிந்தார். சந்திரபாபு, நிதிஷ்குமார் தயவில் ஆளும் மோடியால் இனி இது எதையும் செய்ய முடியாது.

‘நானே ஆக்கவும் அழிக்கவும் வல்லவன்’ என்ற பெயரால் ‘மோடி கேரண்டி’ கொடுத்துக் கொண்டு இருந்தாரே மோடி, அவர் இப்போது கூட்டாட்சியைப் பற்றியும் கூட்டணி ஆட்சியைப் பற்றியும் பேசத் தொடங்கி இருக்கிறார் அல்லவா? அதனால் தான் ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். மோடி, மோடி என்று பேசிக் கொண்டிருந்தவர், ‘கூட்டணி, கூட்டணி’ என்று பேசுகிறார். இப்போதெல்லாம் ‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்று பேசத் தொடங்கி இருக்கிறார். பா.ஜ.க. அரசு என்று கூடச் சொல்வது இல்லை.

“மக்களவைத் தேர்தலில் அடைந்த வெற்றிக்காக தேசிய ஜனநாயக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணி. ஏற்கனவே மூன்று முறை முழுமையாக ஆட்சி நடத்தி உள்ள இக்கூட்டணி 4 ஆவது பதவிக் காலத்தில் நுழைகிறது.” என்று தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றியே பேசி தனது பலவீனத்தை பலமாக மாற்ற முனைந்துள்ளார் மோடி. இது முதல் திருப்பம் ஆகும்.

‘இந்தியா’  கூட்டணி  மகிழ்ச்சியோடு இருக்க காரணம் இதுதான் : மோடிக்கு முரசொலி பதிலடி!

இதுவரை தான் வைத்ததே சட்டம் என செயல்பட்டு வந்தார் மோடி. முதல் தடவையாக கருத்தொற்றுமை பற்றி அவர் பேசி இருக்கிறார். ‘ஆட்சி அமைக்க பெரும்பான்மை தேவை. அதேநேரம், அரசை நடத்த கருத்தொற்றுமை அவசியம். மத்தியில் அரசை நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு மீண்டும் வழங்கி உள்ளனர். எனவே அரசை நடத்துவதில் கருத்தொற்றுமையை உறுதி செய்ய தொடர்ந்து பணியாற்றுவேன்’ என்று சொல்லி தன்முனைப்பில் இருந்து கூட்டுப் பொறுப்புக்கு இறங்கி வந்துள்ளார் மோடி. இது இரண்டாவது திருப்பம் ஆகும்.

இசுலாமியர்களை முடிந்தவரை இழிவுபடுத்திப் பேசினார் மோடி. இப்போது அப்படியே பல்டி அடித்துவிட்டார். 'அனைத்து மதத்தினரும் சமம் என்ற அரசமைப்புச் சட்டத்தின் கொள்கைக்காக நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்' என்று இப்போது பேசி இருக்கிறார் மோடி. இது மூன்றாவது திருப்பம் ஆகும்.

* பொதுசிவில் சட்டம் கொண்டு வருவோம்.

* ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டு வருவோம் -–- இவை தான் பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையின் இரண்டு முக்கியமான கொள்கை பிரகடனங்கள். அதைப் பற்றியே மோடி பேசவில்லையே. இதுதான் நான்காவது திருப்பம்.

கடந்த பத்தாண்டு காலத்தில் மூன்று செயல்களில் தான் உறுதியாக இருந்தார். அந்த மூன்றைச் செய்வதற்காகத்தான் பிரதமராக வருவதைப் போலக் காட்டிக் கொண்டார். சங் பரிவார் இடித்த இடத்தில் கோவில் கட்டுவது, காஷ்மீருக்கு தரப்பட்ட 370 சிறப்புத் தகுதியை விலக்குவது, குடியுரிமைச் சட்டத்தை அமல்படுத்துவது – ஆகிய மூன்றையும் செயல்படுத்துவதில் அவர் காட்டிய உறுதியை வேறு எதற்கும் காட்டியது இல்லை. இதனைத் தனது சாதனையாக கூட்டணிக் கட்சிக் கூட்டத்தில் சொல்லவில்லை. அவரால் சொல்ல முடியவில்லை. இதுதான் ஐந்தாவது திருப்பம்.

இப்படி அவரை திருப்பித் திருப்பித் தாக்கத் தொடங்கி இருக்கிறது, நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள். ‘இந்தியா’ கூட்டணித் தலைவர்கள் மகிழ்ச்சியோடு இருக்க இதுதான் காரணம்.

banner

Related Stories

Related Stories