முரசொலி தலையங்கம்

பாஜக தேர்தல் அறிக்கை : “உள்நாட்டுக் குழப்பங்களை செய்ய நினைக்கிறது பாஜக” - முரசொலி தாக்கு !

பா.ஜ.க. திருந்தப் போவதும் இல்லை, வருந்தப் போவதும் இல்லை என்பதையே அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை காட்டுகிறது.

பாஜக தேர்தல் அறிக்கை : “உள்நாட்டுக் குழப்பங்களை செய்ய நினைக்கிறது பாஜக” - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

திருந்தாத பா.ஜ.க.!

தோற்கப் போகிறோம் என்று தெரிந்த பிறகும் பா.ஜ.க. திருந்துவதாகத் தெரியவில்லை என்பது அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலேயே தெரிகிறது. பா.ஜ.க.வுக்கு மக்களைப் பற்றி எப்போதும் கவலை இருந்தது இல்லை. மூன்றே மூன்று கொள்கைகள்தான் அவர்களுக்கு உண்டு.

* பாபர் மசூதியை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்டும்.

* காஷ்மீருக்கு இருக்கும் 370 சிறப்புத் தகுதியை விலக்க வேண்டும்.

* பொதுசிவில் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும்.

- இவை மூன்றும் தான் அவர்களது முழுமுதல் கொள்கைகள். இந்த மூன்றும் நடந்துவிட்டால் இந்தியா சுபிட்சம் அடைந்துவிடும். இந்தியாவில் சொர்க்கம் உருவாகி விடும். மற்ற எதைப் பற்றியும் கவலையில்லை. முதலில் சொன்ன இரண்டையும் நரேந்திர மோடி செய்துவிட்டார். மீதம் வைத்திருக்கும் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது 2024 ஆம் ஆண்டுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை.

பாபர் மசூதியை இடித்து விட்டு கோயில் கட்டுவோம், காஷ்மீருக்கு இருக்கும் 370 சிறப்புத் தகுதியை விலக்குவோம் - என்ற இரண்டை மட்டும்தான் மோடி நிறைவேற்றி இருக்கிறார். பொது சிவில் சட்டம் என்ற மூன்றாவதை நிறைவேற்றுவதற்காக மூன்றாவது முறை பிரதமர் ஆகத் துடிக்கிறார்.

பாஜக தேர்தல் அறிக்கை : “உள்நாட்டுக் குழப்பங்களை செய்ய நினைக்கிறது பாஜக” - முரசொலி தாக்கு !

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், வெளிநாட்டில் இருந்து கருப்புப்பணம் மீட்கப்படும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம், அவசியப் பொருட்களுக்கான விலையைக் கட்டுப்படுத்த தனிநிதியம், வரிவிதிப்பில் எளிய முறை, வடகிழக்கு மாநில வளர்ச்சிக்கு முக்கியத்துவம், அண்டை நாடுகள் அச்சுறுத்தினால் உறுதியான நடவடிக்கை, அரசியல் தலையீடு இல்லாமல் புலனாய்வு அமைப்புகள் செயல்படும், நாட்டில் உள்ள நதிகள் அனைத்தும் இணைக்கப்படும், நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் சுத்தப்படுத்துவோம், அனைத்து கிராமத்துக்கும் சுத்தமான தண்ணீர், அதிவேக புல்லட் ரயில்கள், எரிவாயு விலையைக் குறைப்போம், 50 சுற்றுலா பாதைகள் அமைப்போம், அனைத்து மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனைகள், கிராம சபைகள் வலுப்படுத்தப்படும், சிறுபான்மையினர் உள்பட அனைத்துச் சமூகத்தினருக்கும் சம வாய்ப்பு, கல்வி-வேலைவாய்ப்புகளில் சிறுபான்மையினருக்கும் வாய்ப்பு, மறைமுக வரி விதிப்பில் சீர்திருத்தம் செய்ய மாநில அரசுகளுடன் ஆலோசனை, சேதுசமுத்திர திட்டம் குறித்து விரைந்து முடிவு, தேசிய விவசாய சந்தைகள், மாநில முதலமைச்சர்களை சமமாகக் கருதி தேசக் கட்டமைப்பில் ஈடுபடுத்துதல், மாநில அரசுகளுக்கு அதிகளவில் நிதி அதிகாரம், மாநிலப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநில கவுன்சில்கள் அமைப்பு - இவை அனைத்தும் 2014 பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவை.

2024 வரையிலான பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றப்படாதவை. புதிய கேரண்டி கொடுப்பவர், பழைய கேரண்டிகளுக்கு பதில் சொல்ல வேண்டாமா? ‘தேர்தல் அறிக்கை என்பது வெறும் தேர்தல் சடங்கு அல்ல, அது எங்கள் பாதை' என்றார் மோடி. பிரதமர் ஆனதும் தேர்தல் அறிக்கை பாதையை அவரே மூடிவைத்துவிட்டு, மாற்றுப்பாதையில் அல்லவா போனார்?

“இன்னும் ஏழு ஆண்டுகளில் நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட இருக்கிறது. அந்த நேரத்தில் குடிநீர், மின்- சாரம், கழிவறை கொண்ட வீடுகளை அனைத்து மக்களும் கொண்டிருப்பார்கள். அனைவர்க்கும் கல்வி, சுகாதாரம் கிடைத்திருக்கும். இது அனைத்தையும் செய்வதற்கு என்னை ஆசீர்வதிக்கும் படி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்”- – என்று 2014 ஆம் ஆண்டு வேண்டினார் மோடி. இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தினம் போய்விட்டது. ஆனால் சொன்னது எதையும் மோடி செய்யவில்லை.

பாஜக தேர்தல் அறிக்கை : “உள்நாட்டுக் குழப்பங்களை செய்ய நினைக்கிறது பாஜக” - முரசொலி தாக்கு !

கோவில் கட்டியதும், ஜம்மு காஷ்மீரும் சாதனைகளாகச் சொல்லப்படுகின்றன. பொது சிவில் சட்டம் கொண்டு வருவோம் என்பதைத் தவிர முக்கியமான வாக்குறுதி எதுவும் இப்போது சொல்லவும் அவர்களுக்குத் தெரியவில்லை. குற்றவியல் சட்டம் அனைவருக்கும் பொதுவானதுதான். அதில் யாருக்கும் எந்த விதிவிலக்கும் இல்லை. பல்வேறு மதங்கள் உள்ள இந்த நாட்டில் அவர்களது பழக்க வழக்கங்கள் சார்ந்த கருத்துருக்களுக்கு மரியாதை தர வேண்டிய கடமை அனைவர்க்கும் உள்ளது. இசுலாமியச் சிறுபான்மையினருக்கு திருமணம் மற்றும் மணமுறிவுக்கு தனியாக ஒரு சட்டம் இருக்கிறது. இதன்படி திருமணம், வாரிசு, தத்து எடுத்தல், சொத்து அளித்தல், வக்பு சொத்து பாதுகாப்பு ஆகியவைக்கான தனிச் சட்டம் இது. இது 1937 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘முஸ்லீம் தனிநபர் சட்டம்' ஆகும். அதுதான் இவர்களது கண்ணை உறுத்துகிறது.

இசுலாமியர்க்கு மட்டுமல்ல; பழங்குடியினருக்கும் தனியான வாழ்க்கை முறைகள் இருக்கிறது. பழங்குடி மக்களின் வாழ்க்கை முறைகளையும் கட்டுப்படுத்துவதாக, அழிப்பதாக அமைந்திருப்பதாக

வடமாநில பழங்குடி அமைப்பினர் சொல்லி இருக்கிறார்கள். பார்சிக்கள், ஜெயின்கள், சீக்கியர்களது தனிப்பட்ட வழக்கங்களுக்கு எதிராக இந்த சட்டமானது அமைந்துவிடும். 2012 ஆம் ஆண்டு சீக்கியர்கள் தனிச் சட்டத்தை உருவாக்கிக் கொண்டார்கள்.

வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வருவதற்கு எதிராகவே இருந்தது. அன்றைய சட்ட அமைச்சர் அருண்ஜெட்லி இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறார். பொதுசிவில் சட்டத்தின் தொடர்ச்சி என்பது சிறுபான்மையினரின் உரிமையைப் பறிப்பதாகவும் - பட்டியல் இன, பழங்குடி மக்களது தனிச்சட்டங்கள் உரிமைகளைப் பறிப்பதாகவும் படிப்படியாகச் செல்லும். இதனால் இந்தியாவில் உள்நாட்டுக் குழப்பங்கள்தான் அதிகம் வரும். இதைத்தான் செய்ய நினைக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க. திருந்தப் போவதும் இல்லை, வருந்தப் போவதும் இல்லை என்பதையே அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை காட்டுகிறது

- முரசொலி தலையங்கம்

16.04.2024

banner

Related Stories

Related Stories