முரசொலி தலையங்கம்

“ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு அதனை மறைக்க முயற்சிக்கிறார் மோடி” - முரசொலி விமர்சனம்!

'கருப்பு பணத்தை ஒழிப்பேன்' என்று உறுதி அளித்த பிரதமர் மோடி, ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு இப்போது அதனை மறைக்க முயற்சி செய்கிறார் என முரசொலி விமர்சித்துள்ளது.

“ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு அதனை மறைக்க முயற்சிக்கிறார் மோடி” - முரசொலி விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பத்திரங்களுக்குப் பின்னால்...!

தேர்தல் பத்திரங்களைத் தோண்டத் தோண்ட புது புது பூதம் கிளம்பிக் கொண்டே இருக்கிறது! காங்கிரஸ் கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் இது தொடர்பாக வைத்துள்ள பகிரங்க குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பா.ஜ.க. தலைமையோ உள்துறை அமைச்சர் அமித்ஷாவோ பதில் சொல்லவில்லை.

"மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க. தலைவர் நட்டாவை அமலாக்கத்துறை கைது செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

"மதுபான முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்ட அரவிந்தோ ஃபார்மா இயக்குனரிடம் பா.ஜ.க. ரூ.55 கோடி தேர்தல் நன்கொடை பத்திரத்தை பெற்றுள்ளது. ரூ.55 கோடிக்கு பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரம் வழங்கிய பின்னர் அரவிந்தோ ஃபார்மா இயக்குனர் ஜாமீனில் விடுவிக்கப் பட்டிருக்கிறார் . மதுபான வழக்கு குற்றவாளியிடம் இருந்து ரூ.55 கோடி நன்கொடை பெற்றது குறித்து பிரதமர் மோடியும், பா.ஜ.க. தலைவர் நட்டாவும் விளக்கம் அளிக்க வேண்டும். இது குறித்து அமலாக்கத்துறையும் விளக்கம் அளிக்க வேண்டும்” என்று - ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் 13 மாதமாக சிறையில் இருக்கிறார். ஆனால் அது தொடர்பாக குற்றம் சாட்டப்படும் நிறுவனத்திடம் இருந்து பா.ஜ.க. நன்கொடைப் பெற்றுள்ளதை ஆம் ஆத்மி கட்சி அம்பலப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் இதை விட பகிரங்கமானவை.

“ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு அதனை மறைக்க முயற்சிக்கிறார் மோடி” - முரசொலி விமர்சனம்!

“கருப்பு பணத்தை ஒழிப்பேன் என்று உறுதி அளித்த பிரதமர் மோடி, ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு இப்போது அதனை மறைக்க முயற்சி செய்கிறார். இந்த அப்பட்டமான ஊழல், நான்கு வழிமுறைகளில் நடந்துள்ளன.

* முதலாவதாக, ‘நன்கொடை கொடு, வாய்ப்பைப் பெறு'. அதாவது, ப்ரீப் பெய்டு லஞ்சம்.

* இரண்டாவதாக, ‘ஒப்பந்தம் பெறு, லஞ்சம் கொடு'. அதாவது போஸ்ட் பெய்டு லஞ்சம்.

* மூன்றாவது வழிமுறை என்பது 'ஹாஃப்தா வசூல்'. அதாவது ரெய்டுக்கு பின்னர் லஞ்சம். முதலில் நிறுவனங்களுக்கு சோதனை செய்ய அமலாக்கத் துறை, சி.பி.ஐ. அனுப்பப்படும், அதிலிருந்து தப்பிக்க அந்த நிறுவனம் தேர்தல் பத்திரங்கள் வழங்கும்.

* நான்காவது, ஷெல் நிறுவனங்களின் பயன்பாடு.

தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை வழங்கியதன் மூலம் 38 கார்ப்பரேட் நிறுவனங்கள், 179 முக்கியமான ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களை ஒன்றிய மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநில அரசுகளிடம் இருந்து பெற்றுள்ளது பகுப்பாய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலமாக ரூ.2,004 கோடி நன்கொடை வழங்கியதன் மூலமாக மொத்தம் ரூ.3.8 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன.

41 கார்ப்பரேட் நிறுவனங்கள் மொத்தமாக 56 முறை, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறை சோதனைகளுக்கு ஆளாகியுள்ளன. இந்நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு ரூ.2,592 கோடி கொடுத்துள்ளன. இதில் ரூ.1,853 கோடி விசாரணை அமைப்புகளின் சோதனைக்குப் பின்னர் கொடுக்கப்பட்டுள்ளது” என்று ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருக்கிறார்.

“இந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், தேர்தல் பத்திர ஊழலை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்படும். அதானி விவகாரத்தை விசாரிக்க கூட்டு நாடாளுமன்றக் குழு அமைக்கப்படும். அதேபோல், பி.எம். கேர்ஸ் ஃபண்ட் குறித்து சிறப்புக் குழு மூலம் விசாரிக்கப்படும்" என்றார் அவர். இவை அனைத்தும் பா.ஜ.க. வின் ஊழல் பாதைகள் ஆகும்.

“ஊழலைச் சட்டப் பூர்வமாக்கி விட்டு அதனை மறைக்க முயற்சிக்கிறார் மோடி” - முரசொலி விமர்சனம்!

வார்த்தைக்கு வார்த்தை பதில் சொல்லக் கூடிய பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர்கள் வாய்மூடிக் கிடக்கிறார்கள். பதில் அளிக்க முடியவில்லை.

கடந்த சனவரி மாதமே இது தொடர்பான ரகசியங்கள் ஆங்கிலச் செய்தி இணையதளங்கள் மூலமாகக் கசிந்தன. 2018-19 முதல் 2022-23 நிதியாண்டு வரையிலான தேர்தல் ஆணைய ஆவணங்கள், வழக்கு விவரங்கள், நிதி அறிக்கைளை ஆய்வு செய்து இதனை வெளிப்படுத்தியது.

"கடந்த 2018-19 முதல் 2022-23 நிதியாண்டு வரை பா.ஜ.க.வுக்கு நிதியளித்த நிறுவனங்கள் பட்டியலை பரிசீலித்ததில் அதில் 30 நிறுவனங்கள் மீது அதே காலகட்டத்தில் ஒன்றிய அரசின் ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. ரெய்டு நடத்தியுள்ளது. இந்த 30 நிறுவனங்களும் மொத்தம் ரூ.335 கோடியை பா.ஜ.க.வுக்கு தேர்தல் நிதியாக தந்துள்ளன. இதில் 23 நிறுவனங்கள் ரெய்டு நடத்தப்படும் வரை பா.ஜ.க.வுக்கு ஒரு பைசா கூட தேர்தல் நிதி தந்தது இல்லை. ரெய்டு நடத்தப்பட்டதும் அந்த 23 நிறுவனங்களும் பா.ஜ.க.வுக்கு நிதி தர ஆரம்பித்துள்ளன. மொத்தம் ரூ. 187. 58 கோடி நிதியை அந்த நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு வாரி வழங்கி உள்ளன.

4 கம்பெனிகளில் ரெய்டு நடத்தப்பட்ட 4 மாதத்துக்குள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்துள்ளன. பா.ஜ.க.வுக்கு ஏற்கனவே குறைவாக நிதி தந்த 6 நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களிலேயே அந்த நிறுவனங்கள் பல மடங்கு அதிக நிதியை பா.ஜ.க.வுக்கு கொடுத்துள்ளன. தொடர்ந்து பல ஆண்டுகளாக பா.ஜ.க.வுக்கு நிதி தந்த நிறுவனங்கள் திடீரென நிதி தருவதை நிறுத்திவிட்டால் கூட ரெய்டு நடத்தப்பட்டுள்ளது. இப்படி 6 நிறுவனங்களை ஈ.டி., ஐ.டி., சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போதே சில நிறுவனங்கள் பா.ஜ.க.வுக்கு நிதி தந்ததும் தெரியவந்துள்ளது. நன்கொடை தந்த 3 நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசிடம் இருந்து லைசென்ஸ் உள்ளிட்ட சலுகைகள் கிடைத்துள்ளது” - என்று அவை வெளியிட்டன. இவையும் இதுவரை பா.ஜ.க.வால் மறுக்கப்படவில்லை.

இதைப்பற்றி எல்லாம் கேள்வி கேட்டால், 'இவை அனைத்தும் கற்பனை' என்கிறார் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பா.ஜ.க.வின் முகத்திரையை கிழித்திருக்கிறது தேர்தல் பத்திரங்கள். கிழிக்கப்பட்ட பத்திரங்களுக்கு பின்னால் பா.ஜ.க.வின் ஊழல் முகம் கோரமாகத் தெரிகிறது.

banner

Related Stories

Related Stories