முரசொலி தலையங்கம்

“பெண் சக்தியைப் பற்றி பிரதமர் மோடி பேசலாமா?” - பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழித்த முரசொலி!

பெண் சக்தியின் நிலையை கேள்வி கேட்கும் முரசொலி; பா.ஜ.க ஆட்சியின் பாதுகாப்பு எங்கே?

“பெண் சக்தியைப் பற்றி பிரதமர் மோடி பேசலாமா?” - பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழித்த முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலத்துக்கு வந்த பிரதமர் நரேந்திரமோடி, பெண் சக்தியைப் பற்றி கதாகாலட்சேபம் நடத்திவிட்டுப் போயிருக்கிறார். தேர்தலுக்குப் பிறகு அவர் ஊர் ஊராகப் போய் கதாகாலட்சேபம் நடத்தலாம்.

பெண் சக்தியை இவர் போற்றுகிறாராம். பாரதியார் சக்தியின் வடிவில் இந்திய அன்னையைப் பாடினாராம். உருக்கமாகப் பேசி இருக்கிறார் பிரதமர். அவருக்கு இதை எல்லாம் பேசுவதற்கான உரிமை இருக்கிறதா? பெண் சக்தியை அவர் தனது ஆட்சிக் காலத்தில் என்ன மாதிரி போற்றினார்?

மணிப்பூர் நினைவுக்கு வருகிறது? பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண் சக்தி கதறிய கதறல் நரேந்திரமோடிக்கு கேட்டதா? போனாரா பிரதமர்? குக்கி இனப் பெண்களை ஆடை களைந்து ஒரு கும்பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவிய பிறகு, 'இது போல நிறைய நடந்துள்ளதே' என்று சொன்னவர்தான் பா.ஜ.க. முதலமைச்சர் பிரேன் சிங்.

‘இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிய பிறகுதான் இந்த சம்பவத்தின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோ வந்த பிறகுதான் 6 பேரை கைது செய்தோம்' என்று சொன்னார் பா.ஜ.க. முதலமைச்சர். அதாவது 2023 மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடூரத்துக்கு காரணமானவர்களை சூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல் தான் கைது செய்கிறார் பா.ஜ.க. முதலமைச்சர். அதன்பிறகுதான் பிரதமர் கண்டிக்கிறார். இந்தக் கொடூரம் நடந்ததுமே மாநில பா.ஜ.க. அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் அது தெரிந்திருக்கும்.

“பெண் சக்தியைப் பற்றி பிரதமர் மோடி பேசலாமா?” - பா.ஜ.க அரசின் முகத்திரையை கிழித்த முரசொலி!

'நாங்கள் இழுத்துச் செல்லப்பட்ட போது போலீஸ் வேடிக்கை பார்த்தது' என்று அந்தப் பெண்கள் பேட்டி அளித்துள்ளார்கள். "எங்களை வன்முறை கும்பல் புதருக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றார்கள். அப்போது போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்தது. அதில் நான்கு போலீஸ்காரர்கள் உட்கார்ந்து இருந்தார்கள். வன்முறை கும்பல் எங்களை இழுத்துச் செல்வதை அந்த நான்கு போலீஸ்காரர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்கள் எங்களுக்கு உதவவில்லை” என்று ஒரு பெண் பேட்டி அளித்துள்ளார். இதுதான் பெண்கள் பாதுகாப்பில் பா.ஜ.க.வுக்கு உள்ள அருகதை ஆகும்.

கைகட்டி வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. மாநில அரசு. அந்த மாநில அரசை இன்று வரை காப்பாற்றி வருபவர்தான் பெண் சக்தியைப் பற்றிப் பேசுகிறார். வேடிக்கையாக இருக்கிறது.

மல்யுத்த வீராங்கனைகள் போராடியது நினைவில் இருக்கிறதா பிரதமரே?

மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பா.ஜ.க. எம்.பி.மீது வழக்குப் பதியவே மல்யுத்தம் நடத்தவேண்டி இருந்தது. பா.ஜ.க. 2023 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகட், சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோர் பா.ஜ.க. எம்.பி.யான பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினர். பிரிஜ் பூஷண் சிங்கும், பயிற்சியாளரும், தேசிய முகாமில் பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக வினேஷ் போகட் அழுதுகொண்டே கூறினார். இந்த விவகாரம் பெரிதாக ஆனதும் உடனடியாக அவர் மீது வழக்குப் பதிந்திருக்க வேண்டும். அதனைச் செய்ய வில்லை ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ஏப்ரல் 21 ஆம் தேதி, பிரிஜ்பூஷண் சிங்குக்கு எதிராக கனாட் பிளேஸ் காவல் நிலையத்திற்கு புகார் செய்ய மல்யுத்த வீராங்கனைகள் சென்றார்கள். ஆனால் போலீஸார் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. ஏன் வழக்குப் பதியவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். போக்சோ சட்டத்தில் பதியப்பட்ட வழக்கை வாபஸ் வாங்க வைத்ததன் பின்னணி அனைவர்க்கும் தெரியும். பா.ஜ.க. எம்.பி.யை கைது செய்யாமலேயே வழக்கு விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு பெண்களைப் பற்றிப் பேச அருகதையோ, யோக்கியதையோ துளியும் உண்டா?

பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்ததாக மார் தட்டிக் கொள்கிறார் பிரதமர். உண்மையில், 33விழுக்காடு பெண்களுக்கு கிடைத்து விடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடு தான் - பா.ஜ.க. கொண்டு வந்துள்ளது. 'இனி நடைபெற இருக்கும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு' என்று இந்தச் சட்டம் சொல்லவில்லை. பிரதமர் மோடி அவர்கள், தடையே இல்லாமல் நிறைவேற்றும் வகையில் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை.

• மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு, அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு, என்ற இரண்டு மாபெரும் தடுப்புச் சுவர்களை எழுப்பி இருக்கிறார். இதுதான் பெண்களுக்கு எதிரான சதிச் செயல் ஆகும். மக்கள் தொகை கணக்கெடுப்பும் - தொகுதி வரையறையும் முடிந்த பிறகு என்றால் 2029 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்கும். 2029 ஆம் ஆண்டு -- அதாவது இன்னும் 6 ஆண்டுகள் கழித்து நிறைவேறப்போற சட்டத்தை - இன்று நிறைவேற்றி விட்டதாக கணக்குக் காட்டி - கண்கட்டி வித்தை காட்டுகிறார் பிரதமர்.

மணிப்பூரிலும் மல்யுத்த களத்திலும் பெண் சக்தி நசுக்கப்பட்டபோது கண்ணீர் விடாத பிரதமர்தான் இப்போது பெண் சக்தியைப் பற்றி பேசுகிறார். வேடிக்கையாக மட்டுமல்ல; வேதனையாகவும் இருக்கிறது.

banner

Related Stories

Related Stories