முரசொலி தலையங்கம்

தேர்தல் ஆணையர்கள் : “பா.ஜ.க. பாணி செலக்ஷன் என்று இதற்குப் பெயர் சூட்டலாம்...” - முரசொலி தாக்கு !

தேர்தல்தான் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்றால் பா.ஜ.க.வின் காலத்தில் தேர்தல் ‘ஆணையமே' சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டது என முரசொலி தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

தேர்தல் ஆணையர்கள் : “பா.ஜ.க. பாணி செலக்ஷன் என்று இதற்குப் பெயர் சூட்டலாம்...” - முரசொலி தாக்கு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தேர்தல் ஆணையமே சர்ச்சைக்குரியது!

தேர்தல்தான் சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்றால் பா.ஜ.க.வின் காலத்தில் தேர்தல் ‘ஆணையமே' சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டது!

இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்தல் தேதியை எப்போது அறிவிப்பார்கள், தேர்தல் எப்போது நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கோடிக்கணக்கான மக்களிடம் எழுந்து நின்ற நிலையில் - இந்தத் தேர்தல்களை எல்லாம் நடத்த வேண்டிய தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென்று பதவி விலகினார். 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அருண் கோயலுக்கு, 2027ஆம் ஆண்டு டிசம்பர் வரைக்கும் பதவிக்காலம் இருக்கிறது. இன்னும் மூன்றரை ஆண்டு காலம் அவருக்கு பதவிக் காலம் இருக்கும் நிலையில் அவர் தனது பதவியை விட்டு விலகி இருக்கிறார். ஒன்றிய அரசாங்கத்தில் குழப்பம் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் அருண்கோயலின் பதவி விலகல்.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்கள் அனுப் பாண்டே, அருண்கோயல் ஆகிய மூவரைக் கொண்டதுதான் இந்திய நாட்டின் தேர்தல் ஆணையம் ஆகும். ஏப்ரல்- மே மாதங்களில் நடக்க இருக்கும் இந்திய நாட்டின் மிகப் பெரிய தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கடந்த ஓராண்டு காலமாகச் செய்து வந்தவர்கள் இவர்கள் மூவரும்தான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 324 ஆவது பிரிவு இந்த நாட்டின் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரத்தை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குகிறது.

தேர்தல் ஆணையர்கள் : “பா.ஜ.க. பாணி செலக்ஷன் என்று இதற்குப் பெயர் சூட்டலாம்...” - முரசொலி தாக்கு !

இத்தகைய அதிகாரம் பொருந்திய அமைப்பில் இடம்பெற்றிருந்த தேர்தல் ஆணையர் அனுப் பாண்டே, கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றுவிட்டு போய்விட்டார். இத்தகைய அதிகாரம் பொருந்திய அமைப்பில் இடம்பெற்றிருந்த தேர்தல் ஆணையர் அருண் கோயல், கடந்த 9 ஆம் தேதி பதவியை விட்டு விலகிவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் எந்தவொரு ஜனநாயக நாட்டிலும் இத்தகைய ஒரு செயல் நடக்காது. அப்படி நடந்தால் அந்த நாட்டில் ஜனநாயக நெறிமுறைகள் சிக்கலுக்கு உள்ளாகி இருக்கிறது என்று பொருள். சுதந்திரமாக - தனித்துச் செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையத்தை தன் வசப்படுத்தும் செயலை ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்தது. இதைப் போன்ற ஜனநாயக அறமற்ற செயல் இருக்க முடியாது.

தன்னிச்சையாக இயங்க வேண்டிய அனைத்து அமைப்புகளையும் தன்வசப்படுத்தும் வகையில் சட்டம் கொண்டு வருவதுதான் பா.ஜ.க.வின் பாணியாகும். அதுதான் தேர்தல் ஆணையர்கள் நியமனச் சட்டத்திலும் நடந்திருக்கிறது. சுதந்திரமாகச் செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம்பற்றி - உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, தன் வசதிக்கேற்ப சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தேர்தல் ஆணையம் என்பது ஜனநாயகத்தின் முகமாக இருக்க வேண்டியது ஆகும். அந்த தேர்தல் ஆணையத்தை தனது வசதிக்கு ஏற்ப வளைத்து விட்டது பா.ஜ.க. அரசு.

இந்த அருண் கோயல் நியமனமே சர்ச்சைக்குரியதாகத்தான் தொடக்கத்தில் அமைந்திருந்தது. பஞ்சாப் மாநில அதிகாரியான அருண் கோயல், 2022 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் நாள் திடீரென பதவி விலகினார். மறுநாளே இவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதாவது தேர்தல் ஆணையராக இவரை நியமிப்பதற்காகவே பதவி விலக வைத்துள்ளார்கள். அருண் கோயல் நியமனத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தாக்கல் செய்தார்கள். இது போன்ற முக்கியமான பணியிடத்துக்கான தேர்வை 'கொலிஜியம்' போன்ற அமைப்புதான் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அரசியல் சாசன அமர்வு தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. நீதியரசர் கே.எம். ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இத்தீர்ப்பை அளித்தது.

« பிரதமர்

« மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்

« உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகிய மூவர் அடங்கிய குழுதான் தலைமை தேர்தல் ஆணையரையும், தேர்தல் ஆணையர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது.

தேர்தல் ஆணையர்கள் : “பா.ஜ.க. பாணி செலக்ஷன் என்று இதற்குப் பெயர் சூட்டலாம்...” - முரசொலி தாக்கு !

உச்சநீதிமன்றத்தின் மீது மரியாதை இல்லாத பா.ஜ.க. அரசு 2023 டிசம்பர் 21ஆம் தேதி அன்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்பதற்குப் பதிலாக ஒன்றிய அமைச்சர் ஒருவர் என்று மாற்றி விட்டார்கள். இதன்படி பார்த்தால் தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் மூவர் குழுவில் இருவர், ஆளும் கட்சியைச் சேர்ந்தவராக இருக்குமாறு பார்த்துக் கொண்டார்கள். அதாவது தங்கள் வசதிக்கு ஏற்ப சட்டத்தை வளைத்துக் கொண்டார்கள். இப்படி உருவாக்கப்பட்ட எதேச்சாதிகார சட்டப்படி புதிய தேர்தல் ஆணையர்கள் இருவரை தேர்ந்தெடுத்து அறிவித்துவிட்டார்கள்.

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான சுக்பீர் சிங் சாந்து, ஞானேஷ் குமார் ஆகிய இருவரும் புதிய தேர்தல் ஆணையர்களாக நேற்றைய தினம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்கள். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதீர் ரஞ்சன் சௌத்ரி ஆகிய மூவர் கொண்ட கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

புதிய தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ஞானேஸ்குமார், அமித்ஷாவின் உள்துறையில் அவருக்குக் கீழ் பணியாற்றிய தகுதிக்குரியவர்! இந்த நாடகத்தை அதீர் ரஞ்சன் வெளிப்படுத்திவிட்டார். 212 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்கள் யார் யார் என்ற பட்டியலை அதீர் ரஞ்சனுக்குத் தரவில்லை. 212 பேரில் 6 பேர் பெயரை தனியாகப் பிரித்து - இவர்களில் 2 பேரை தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இந்த 6 பேரின் தகுதியை அவர் கேட்டுள்ளார். அதையும் தரவில்லை. சும்மா பெயரை மட்டும் கொடுத்துள்ளார்கள். 6 பேரில் இருந்து தேர்வு செய்யப்படும் 2 பேர் பெயரை 10 நிமிடத்துக்கு முன்புதான் அவரிடம் கொடுத்துள்ளார்கள்.

உலகத்தில் இந்த மாதிரி செலக்ஷன் எந்த நாட்டிலும் நடந்திருக்காது! பா.ஜ.க. பாணி செலக்ஷன் என்று இதற்குப் பெயர் சூட்டலாம்.

- முரசொலி தலையங்கம்

16.03.2024

banner

Related Stories

Related Stories