முரசொலி தலையங்கம்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கலைஞரின் சட்டத்தால் கோவில்களிலும் சமூகநீதி தழைக்கட்டும் -முரசொலி !

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கலைஞரின் சட்டத்தால் கோவில்களிலும் சமூகநீதி தழைக்கட்டும் -முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கோவில் நீதியைக் காக்கும் தீர்ப்பு !

முரசொலி தலையங்கம் (30-06-23)

"வருணாசிரமத்தை எல்லா இடங்களில் இருந்தும் விரட்டிவிடப் போராடுகிறோம். அது இறுதியில் கோவில் கருவறைக்குள் போய் ஒளிந்து கொள்கிறது" - என்று சொன்னார் தந்தை பெரியார்.

அங்கிருந்தும் வருணாசிரமத்தைத் துரத்தும் திட்டமே, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது ஆகும். தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்த இந்தச் சட்டத்தை 'திராவிட மாடல்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற வைத்து நடைமுறையில் செயல்படுத்திக் காட்டி இருக்கிறார். உரிய பயிற்சி முடித்தவர்கள்ஆலயங்களில் அர்ச்சகர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டு அவர்களது திருப்பணியைச் செய்து வருகிறார்கள்.இதற்கு எப்படியாவது தடை போட, கோவிலை வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் ஏதாவது வதந்திச் செய்திகளைப் பரப்பிக் கொண்டு வருகிறது. ஆகமப் பூச்சாண்டிகளைக் காட்டிக் கொண்டு வருகிறது. சமூகநீதியைச் சீர்குலைக்கும் இந்த முயற்சிகளை தமிழ்நாடு அரசும் சட்டரீதியாகத் தடுத்தும் வருகிறது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அளித்துள்ள தீர்ப்பு, கோவிலிலும் சமூகநீதியைக் காக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பாக அமைந்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள அர்ச்சகர் மற்றும் ஸ்தானிகர் பணியிடங்களை நிரப்ப கோயில் செயல் அலுவலர் கடந்த 2018 ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டார். ஆனால் இந்த அறிவிப்பு ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை எனக்கூறி அந்தக் கோயிலில் பரம்பரை அர்ச்சகராகப் பணியாற்றி வரும் முத்து சுப்ரமணிய குருக்கள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கலைஞரின் சட்டத்தால் கோவில்களிலும் சமூகநீதி தழைக்கட்டும் -முரசொலி !

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்து வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் ஆர். சிங்காரவேலன், ‘ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்களில் ஆகம விதிகளின்படி அர்ச்சகர் நியமனம் நிச்சயம் நடைபெற வேண்டும் என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களை இனம் கண்டு, அறிக்கை சமர்ப்பிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழு இதுவரையிலும் அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பதால் இதுவரை அர்ச்சகர் நியமனங்களை தள்ளிப்போட வேண்டும். சேலம் சுகவனேஸ்வரர் கோவில் ஆகம விதிகளின்படி பாரம்பரியம், கோவில் மரபு மற்றும் வழக்கத்துக்கு உட்பட்டே அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் மேற்கொள்ள அர்ச்சகர்களை நியமிக்க முடியும்' என வாதிட்டார்.

அறநிலையத்துறை சார்பில் வாதாடிய சிறப்பு அரசு வழக்கறிஞர் என். ஆர்.ஆர்.அருண் நடராஜன், ஆகம விதிகளைப்பின்பற்றும் கோயில்களைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவின் செயல்பாடுகளுக்கு, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் அந்தக்குழு இன்னும் முழுவீச்சில் இயங்கவில்லை. எனவே ஆகம விதிகளைக் கடைபிடிக்கும் கோயில்களில் தலைமை அர்ச்சகர்கள் அளிக்கும் தகுதிச்சான்றின் அடிப்படையில் ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்க அனுமதியளிக்க வேண்டும். கோயில்களில் அர்ச்சகர், ஸ்தானிகர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியிட தக்கார் என்ற முறையில் கோயில் செயல் அலுவலருக்கு முழு அதிகாரமும் உள்ளது. அதேபோல பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாகப் பணிபுரிந்து வருபவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என தமிழக அரசின் திருத்தப்பட்ட புதிய விதிகளில் கூறப்படவில்லை' என வாதிட்டார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், கலைஞரின் சட்டத்தால் கோவில்களிலும் சமூகநீதி தழைக்கட்டும் -முரசொலி !

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள தீர்ப்பு மிகமிக முக்கியமானதாகவும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் அமைந்துள்ளது.“ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் எவை என்பதைக் கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழு இன்னும் தனது பணிகளைத் தொடங்கவில்லை. அந்தக்குழு அறிக்கை சமர்ப்பிக்கும் வரை அர்ச்சகர்களை நியமிக்கக்கூடாது என உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்படவில்லை. பல கோயில்களில் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அந்தக் குழுவின் அறிக்கைக்காகக் காத்திருந்தால் அன்றாடம் நடைபெறவேண்டிய பூஜை, அபிஷேகம் போன்றவற்றை தடையின்றி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படும். சேலம் சுகவனேஸ்வரர் கோயிலைப் பொறுத்தமட்டில் 'காரணம் ஆகமம்" பின்பற்றப்படுவதாக சொத்துப்பதிவேட்டில் உள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. எனவே ஆகம விதிகளில் தேர்ச்சி பெற்ற தகுதியான நபர்களை, குறிப்பிட்ட ஆகம விதிகளைப் பின்பற்றும் கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கலாம். அதற்கு எந்தவொரு ஜாதியும் தடையாக இருக்காது. அதாவது ஆகம விதிகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தகுதியான நபர்களை அர்ச்சகர்களாக நியமிக்கும்போது, பரம்பரை, பரம்பரையாக குறிப்பிட்ட ஜாதியினரை மட்டும்தான் அர்ச்சகர்களாக நியமிக்க முடியும் என உரிமை கோர முடியாது.

இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் புதிதாக அர்ச்சகர்களைத் தேர்வு செய்யும் வரை மனுதாரர் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். பின்னர் நடத்தப்படும் தேர்வில் மனுதாரரையும் பங்கேற்க அனுமதித்து முடிவு எடுக்க வேண்டும்" என தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார் நீதியரசர் அவர்கள். அனைத்து வகுப்பினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கான சட்ட அங்கீகாரமாக இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது.

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சாதி பேதம் மட்டுமல்ல, பால் பேதமும் இல்லை. பெண்களும் அர்ச்சகர் பயிற்சியைப் பெற்று வருகிறார்கள். அர்ச்சகர் பயிற்சி பெறும் மாணவி ஒருவர் இதுபற்றி பேட்டி அளித்துள்ளார். "அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின் கீழ் பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்ற வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டோம். ஸ்லோகங்கள், சூத்திரங்கள், சமஸ்கிருதம் படிக்க முடியுமா என்று தெரியாமல் இருந்தோம். இப்போது அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியின் மூலம் கற்றுக்கொண்டோம். எல்லாத் துறைகளிலும் பெண்கள் இருக்கி றார்கள். தற்போது இந்த அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியிலும் மூன்று பெண்கள் படித்து வருகிறோம். ஆண்களுக்கு இணையாக நாங்களும் எல்லா சூத்திரங்களும், ஸ்லோகங்களும், கற்று முடித்து விட்டோம். இன்னும் 15 நாட்களுக்குள் எங்கள் பயிற்சி நிறைவடைந்து விடும். இதன்பிறகு பயிற்சிக்குச் செல்ல உள்ளோம்" என்று சொல்லி இருக்கிறார் அவர்.

கோவில்களிலும் சமூகநீதி தழைக்கட்டும்.

banner

Related Stories

Related Stories