
தி.மு.கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், முரசொலி செல்வம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை - கோடம்பாக்கம் “முரசொலி” வளாகத்தில் அமைந்துள்ள முரசொலி செல்வம் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நேற்று (ஏப்.24) மாலை அணிவித்து திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்.பி., டாக்டர் எழிலன் நாகநாதன் எம். எல். ஏ., முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் செயலாளர் கே.இராஜமாணிக்கம், இ.ஆ.ப. (ஒய்வு), 'முரசொலி' பொது மேலாளர் எஸ்.இராஜசேகரன், 'முரசொலி' செய்தி ஆசிரியர்கள் கே.சேது, இள.மதியழகன், 'முரசொலி' துணை ஆசிரியர் மு.முத்தையா, ஆயிரம் விளக்கு மேற்குப் பகுதிக் கழகச் செயலாளர் வினோத் வேலாயுதம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு பின்வருமாறு,
திராவிட முரசொலித்த கொள்கைச் செல்வத்தின் பிறந்தநாள்!
தலைவர் கலைஞரின் நிழலில் வளர்ந்து, எனக்கு நிழலாய் இருந்தவர் அண்ணன் முரசொலி செல்வம் அவர்கள்!
பதவிகளையோ விளம்பரங்களையோ விரும்பியவரும் அல்லர், அதிகாரத்தைப் பயன்படுத்திச் சிறையிலடைத்த போது அஞ்சவும் செய்யாதவர். சிலந்தியாய் எழுத்துவலை பின்னி எதிரிகளைச் சிக்க வைத்தவர்.
என் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அண்ணனாக உடனிருந்து வழிகாட்டிய முரசொலி செல்வம் அவர்களது நினைவுகளைப் போற்றுகிறேன்.






