
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (3.1.2026) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை சார்பில் 2024-2025-ஆம் ஆண்டில் மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி இரகங்களில் சிறந்த நெசவாளர் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 8 விருதாளர்களுக்கு 20 இலட்சம் ரூபாயும், சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாயும், சிறந்த இளம் வடிவமைப்பாளர்கள் விருதிற்கு தெரிவு செய்யப்பட்ட 3 விருதாளர்களுக்கு 2.25 இலட்சம் ரூபாயும், என மொத்தம் 13 விருதாளர்களுக்கு 23.75 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.
தமிழ்நாட்டின் கைத்தறி தொழிலானது தொன்மையும், வரலாற்று பாரம்பரிய சிறப்பும், நுணுக்கமான பல்வேறு வேலைப்பாடுகளையும் கொண்டதாகும். கைத்தறி தொழிலில் தமிழ்நாடானது பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக விளங்குவதுடன், உலகளவில் பிரசித்தி பெற்ற இரகங்களான காஞ்சிபுரம் பட்டு, ஆரணி பட்டு, திருபுவனம் பட்டு மற்றும் பவானி ஜமக்காளம் போன்ற இரகங்களை உற்பத்தி செய்து வருகின்றது. தமிழ்நாட்டில் 1,115 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் சீரிய திட்டங்களின் வாயிலாக தொடர் வேலைவாய்ப்பும், உத்திரவாதமான கூலியும் உறுதி செய்யப்பட்டு வருவதுடன், நெசவாளர் நலத்திட்டங்கள் வாயிலாக பல்வேறு நலத்திட்டங்களும் அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

=> சிறந்த நெசவாளர் விருது :
தமிழ்நாடு அரசால் கைத்தறி நெசவாளர்களுக்கென செயல்படுத்தப்பட்டு வரும் ஏராளமான திட்டங்களில் ஒரு பகுதியாக புதுமையான மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்தி தற்போதைய சந்தை தேவைக்கேற்ப பட்டு மற்றும் பருத்தி கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து வரும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் "சிறந்த நெசவாளர் விருது" ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில், 2024-2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 இலட்சம் ரூபாய் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எம்.ஆர்.கோபிநாதன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசிற்கான 3 இலட்சம் ரூபாய் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வி.ராஜலட்சுமி மற்றும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் பி.கெளரி ஆகிய இருவருக்கும் தலா 1.50 இலட்சம் ரூபாயும், மூன்றாம் பரிசிற்கான 2 இலட்சம் ரூபாய் தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஜி.மாலா மற்றும் திருப்பூர் மாவட்டம், தந்தை பெரியார் பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.ராஜவேல் ஆகிய இருவருக்கும் தலா 1 இலட்சம் ரூபாயும்;
2024-2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவில் பருத்தி இரகத்தில் சிறந்த நெசவாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 5 இலட்சம் ரூபாய் இராமநாதபுரம் மாவட்டம், மகாகவி பாரதியார் பருத்தி மற்றும் பட்டு தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் ஆர்.பாஸ்கரன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசிற்கான 3 இலட்சம் ரூபாய் கோயம்புத்தூர் மாவட்டம், வதம்பச்சேரி ஸ்ரீ நடராஜர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் எஸ்.ராஜன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசிற்கான 2 இலட்சம் ரூபாய் திருப்பூர் மாவட்டம், கோவில் வழி பருத்தி மற்றும் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் பி.கந்தசாமி அவர்களுக்கும், என மொத்தம் 8 விருதாளர்களுக்கு 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.

=> சிறந்த வடிமைப்பாளர் விருது :
ஜவுளித்துறையில் அதிகரித்துவரும் போட்டியினை சமாளிப்பதற்கும் மற்றும் மாறிவரும் நவீன ரசனைக்கேற்ப புதிய வடிவமைப்புகளை உருவாக்குவதற்காக அரசால் சிறந்த வடிவமைப்பாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024-2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த வடிமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 இலட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம், சென்னிமலை தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க வடிவமைப்பாளர் அப்புசாமி கிருஷ்ணன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர் வி.கண்ணன் அவர்களுக்கும், என மொத்தம் 2 விருதாளர்களுக்கு 1.50 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.
=> சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது :
ஜவுளித் தொழிலின் நுட்பங்கள், வடிவமைப்பு மற்றும் காலமாற்றத்திற்கேற்ற வண்ணங்களின் போக்கினை கணித்தல் ஆகியவற்றில் பங்களிப்பு திறன் கொண்ட வடிவமைப்பாளர்களை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டும், அவற்றை தற்கால சந்தை மற்றும் ஆடை அலங்கார நிலவரங்களுக்கேற்ப கைத்தறி துணிகளாக உற்பத்தி செய்யும் பொருட்டும் தமிழ்நாடு அரசால் மாநில அளவிலான “சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருது” 2022-23-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், 2024-2025-ஆம் ஆண்டுக்கான சிறந்த இளம் வடிவமைப்பாளர் விருதுக்கான முதல் பரிசிற்கான 1 இலட்சம் ரூபாய் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலை ஜவுளி தொழில்நுட்ப பொறியியல் துறையில் நான்காமாண்டு பயிலும் மாணவர் எஸ்.எஸ்.விமல் அவர்களுக்கும், இரண்டாம் பரிசிற்கான 75 ஆயிரம் ரூபாய் திருச்சி ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில் நவீன ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையில் மூன்றாமாண்டு பயிலும் மாணவி செல்வி ஆர்.மதுமிதா அவர்களுக்கும், மூன்றாம் பரிசிற்கான 50 ஆயிரம் ரூபாய் திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நூட்பக் கல்லூரியில் பொறியியல் இளங்கலை ஜவுளி தொழில்நுட்ப துறையில் இரண்டாமாண்டு பயிலும் மாணவி செல்வி. பி.டி. மோனிகா அவர்களுக்கும், என மொத்தம் 3 விருதாளர்களுக்கு 2.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை முதலமைச்சர் அவர்கள் வழங்கி சிறப்பித்தார்.








