
தமிழ்நாட்டில் குறுவை பருவத்தில் அதிக நெல் உற்பத்தி மற்றும் கொள்முதலில் சாதனை படைத்துள்ளதையடுத்து விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி விரைந்து ஆணை வழங்கிட வேண்டும் என்று ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், அதனை நிராகரித்துள்ளது ஒன்றிய அரசு.
இதனைக் கண்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தது பின்வருமாறு,
“கோவைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை நிராகரித்துவிட்டு, அதே கோவைக்கு எந்தவிதமான உறுத்தலும் இன்றி பிரதமர் வந்து சென்ற ஈரம்கூட இன்னும் காயவில்லை; அதற்குள் நெல் கொள்முதலில் ஈரப்பதம் தளர்வு தொடர்பான நமது கோரிக்கையை நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

கனமழை காரணமாக ஈரப்பதம் அதிகமாகியுள்ள நெல்லினைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற தமிழ்நாட்டின் குரல் ஏன் பிரதமரின் காதுகளுக்குக் கேட்கவில்லை? விவசாயிகளின் அழுகுரல் ஏன் கேட்கவில்லை? கண்ணீர் ஏன் தெரியவில்லை?
கடந்த ஆண்டுகளில், தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளின் அடிப்படையில், இத்தகைய ஈரப்பத அளவிற்கான தளர்வைப் பலமுறை வழங்கிய ஒன்றிய அரசு தற்போது வழங்க மறுப்பது ஏன்?
கன மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்குக் கோரப்பட்ட நிவாரணமும் அளிக்காமல், ஈரப்பத அளவையும் அதிகரிக்காமல் இருப்பது விவசாயிகளுக்கு எந்தவிதத்தில் நன்மை செய்யும் என நினைக்கிறீர்கள்?
உடனடியாக இவற்றை மறுபரிசீலனை செய்வதோடு, தமிழ்நாட்டின் கோரிக்கைகள் மீது நல்லதொரு முடிவெடுத்து வேளாண் பெருங்குடி மக்களுக்கு ஒன்றிய அரசு நன்மை செய்யும் என நம்புகிறேன்.”








