நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் பல முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். குறிப்பாக பட்டியலின வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அவரது தீர்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.
மேலும் கடந்த 2008-ம் ஆண்டு திமுக ஆட்சியில், அருந்ததிய சமூகத்தினர் கல்வி, பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, 3% உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. இந்த முடிவு ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்டது.
இப்படிப்பட்ட முக்கிய விவகாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஓய்வுபெற்ற நீதியரசர் ஜனார்த்தனம் காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், நீதித்துறையை சேர்ந்தவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் : -
ஓய்வு பெற்ற நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் உளம் வருந்தினேன்.
நீதித்துறையின் மாண்பையும், சீரிய மரபையும் காத்துவந்தவர் என்பதுடன், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது அருந்ததியருக்கு 3 விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவருவதற்கான பரிந்துரையை அளித்த குழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்கான அறிக்கையினையும் தயாரித்து அளித்தவர் ஆவார்.
நீதியரசர் எம்.எஸ்.ஜனார்த்தனம் அவர்களின் மறைவு நீதித்துறைக்கு மட்டுமின்றி சமூகநீதி கருத்தியல் தளத்தில் இயங்கும் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நீதித்துறை சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.