ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளாகி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர் பரமேஸ்வரன் அவர்களின் உடல்நலம் குறித்து அவரது மனைவி மருத்துவர் நயன்தாரா அவர்களிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்து தேவைப்படும் அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது 22.4.2025 அன்று நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் கிடைத்தவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு உதவி மையம் தொடங்குவதற்கு உத்தரவிட்டார். அதன்படி உதவி மையம் செயல்பட்டு வருகிறது.
மேலும், காஷ்மீர் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உரிய உதவிகளை செய்திட புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்றி வரும் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், இ.ஆ.ப., அவர்கள் நேரடியாக ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு, அவர் அப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி மருத்துவர் பரமேஸ்வரன் அவர்களுக்கு அம்மாநிலத்தில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் இன்று (24.4.2025) மதியம் தில்லி வந்தடைந்த அவரை, தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன், தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையர் திரு. ஆஷிஷ் குமார், இ.ஆ.ப., ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் இன்று (24.4.2025) டாக்டர் பரமேஸ்வரன் அவர்களின் மனைவி டாக்டர் நயன்தாரா அவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, அவரது கணவரின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்தும் கேட்டறிந்து, தமிழ்நாடு அரசு மூலம் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று உறுதி அளித்தார். முதலமைச்சர் அவர்களின் துரிதமான நடவடிக்கைக்கு டாக்டர் நயன்தாரா அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 40 நபர்கள் தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு நேற்று இரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை அழைத்து வரும் பணிகள் முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.