ஜம்மு - காஷ்மீரின் பகல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
“கடந்த சில ஆண்டுகளில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே, பொதுமக்கள் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, இதுவே முதல்முறை” என ஜம்மு - காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து தனது X சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பகல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து, பல விலைமதிப்பற்ற உயிர்களைப் பறித்த காட்டுமிராண்டித்தனமான தீவிரவாதத் தாக்குதல் மனசாட்சியையே உலுக்குகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது.
சொந்தங்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இத்தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
உடனடியாக, புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையரைத் தொடர்பு கொண்டு, ஜம்மு காஷ்மீர் மாநில அதிகாரிகளுடன் பேசி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஒருங்கிணைத்துத் தர அறிவுறுத்தியிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தீவிரவாதிகளால் தாக்குதலுக்கு உள்ளான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களை பாதுகாக்கும் முகமாக முதற்கட்டமாக அவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அதனடிப்படையில் உதவி தொடங்கப்பட்டு, 011-24193300 (Landline), 9289516712 (Mobile Number with Whatsapp) என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் பேரில், 24 மணி நேரமும் செயல்படும் உதவி மையம் அப்பகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.
இதற்காக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையாளர் (Resident Commissioner) அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள உத்திரவிடப்பட்டுள்ளது.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.அப்தாப் ரசூல், இ.ஆ.ப., அவர்களை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்குச் சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.