மு.க.ஸ்டாலின்

"பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது, அவரின் குடுமி பாஜக கையில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

பழனிசாமியால் ஒருபோதும் பா.ஜ.க.வை விமர்சிக்க, எதிர்க்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

"பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது, அவரின் குடுமி பாஜக கையில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியை அடுத்த சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் நாமக்கல் தொகுதி வேட்பாளர் திரு.மாதேஸ்வரன் அவர்களையும், ஈரோடு தொகுதி வேட்பாளர் திரு.பிரகாஷ் அவர்களையும், கரூர் தொகுதி வேட்பாளர் செல்வி.ஜோதிமணி அவர்களையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சி உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

“பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்” என்று முத்தமிழறிஞர் கலைஞரால் பாராட்டப்பட்ட தந்தை பெரியார் பிறந்த மண்ணிற்கு வந்திருக்கிறேன்! திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் பேரியக்கத்தை உருவாக்கிய பேரறிஞர் அண்ணா பணியாற்றிய ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். நம்மை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் கலைஞரின் குருகுலத்திற்கு வந்திருக்கிறேன்! இத்தகைய பெருமைமிகு மண்ணில் நடைபெறும் இந்த பிரம்மாண்டமான பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவர்க்கும் என் மாலை வணக்கம்!

இந்த மண்ணிற்குத்தான் எத்தனை எத்தனை பெருமைகள் உண்டு! வெள்ளையரை எதிர்த்துப் போர் நடத்திய மாவீரன் தீரன் சின்னமலை மண்! “தமிழன் என்றோர் இனமுண்டு; தனியே அவற்கொரு குணமுண்டு” என்று உணர்ச்சிக் கனலை எழுப்பிய நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார் மண்! சேரர்களின் தலைநகராகத் திகழ்ந்த மண்! இப்படி ஈரோடு – நாமக்கல் - கரூர் ஆகிய மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளையும் கொண்ட இந்த மண்ணிலிருந்து, நாடு காக்கும் ஜனநாயகப் போர்க்களத்திற்கு அழைப்பு விடுக்க வந்திருக்கிறேன். இந்தக் கூட்டமானது முக்கடல்களும் ஒன்று கூடியது போன்று காட்சியளிக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஈரோடு தொகுதி வெற்றி வேட்பாளர் தம்பி பிரகாஷ் அவர்கள், சிறு வயதில் இருந்தே தி.மு.க.வில் இணைந்து மக்களுக்காகப் பணியாற்றுபவர். அவரின் தந்தை 1977-ஆம் ஆண்டு முதல் கிளைச் செயலாளராகப் பணியாற்றியவர். அப்பாவைப் போன்றே மகனும் அரசியல் ஆர்வம் கொண்டவர். என்னுடைய தலைமையில், ஈரோடு தி.மு.க. இளைஞரணி அமைப்பாளராகப் பணியாற்றிய இவர். இப்போது மாநிலத் துணைச் செயலாளராகத் தம்பி உதயநிதிக்குத் துணையாக நிற்கிறார். இவர் ஈரோட்டு மக்களுக்காக - துணையாக நிற்க நாடாளுமன்றத்தில் பணியாற்ற பிரகாஷ் அவர்களுக்கு, உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சகோதரி ஜோதிமணி அவர்கள் கடந்த முறை 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த முறை அதைவிடவும் கூடுதலான வித்தியாசத்தில் அவரை வெற்றி பெற வைக்க வேண்டும். மகளிர், குழந்தைகள் மற்றும் சமூக மேம்பாடுகளில் அக்கறை கொண்ட அவரை, நாடாளுமன்றத்திற்கு மீண்டும் அனுப்ப, கரூர் மக்கள் ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

"பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது, அவரின் குடுமி பாஜக கையில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

நாமக்கல் தொகுதியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்கள் பிறந்தது சேந்தமங்கலம் - வாழ்வது நாமக்கல் - திருமணம் செய்து கொண்டது திருச்செங்கோடு என்று, மூன்று சட்டமன்றத் தொகுதிக்குத் தொடர்புடையவர். மக்களோடு மக்களாக இருந்து சமூக சேவையும் செய்யும் அவரை, உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இங்கு கூடியிருக்கும் உங்கள் எழுச்சியைப் பார்க்கும்போது மேடையில் இருக்கும் மூன்று வேட்பாளர்களுக்கும் பல இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில், மாபெரும் வெற்றியைத் தர முடிவு செய்துவிட்டீர்கள் என்பது தெரிகிறது. வெற்றி பெற வைக்கத் தயாரா? இந்தக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடும் - சிறப்போடும் ஏற்பாடு செய்துள்ள ஆற்றல்மிகு ஈரோட்டுச் செயல்வீரர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், முக்கியமாக இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும் - நிர்வாகிகளுக்கும் என்னுடைய நன்றியும்! வாழ்த்துகளும்!

கடந்த 2021-ஆம் ஆண்டு அ.தி.மு.க. எனும் இருண்டகால ஆட்சியைச் சட்டம்–ஒழுங்கைச் சீர்குலைத்த ஆட்சியை - தொழில் வளர்ச்சியைப் பாழ்படுத்திய ஆட்சியை - தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பின்னுக்குத் தள்ளிய ஆட்சியை அகற்றி, என் மேல் நம்பிக்கை வைத்து, என்னிடம் கொடுத்தீர்கள்! ஆட்சிப் பொறுப்பேற்ற நம்முடைய திராவிட மாடல் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி, இந்தியாவில் இருக்கும் மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருக்கிறது! வாக்களித்தவர்கள்… வாக்களிக்காதவர்கள்… என்ற பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும், பொதுவான அரசாக ஆட்சி நடத்தி வருகிறோம்...

அதனால்தான் நான் செல்லும் இடமெல்லாம், மக்கள் ”நற்சாட்சிப் பத்திரம்” வழங்குவதைப்போல் அலை அலையாய் மாநாட்டிற்கு வருவதுபோல், வருகிறார்கள்! தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு திட்டத்தில் பயன் கிடைப்பது மாதிரியான நல்லாட்சியை வழங்கி வருகிறோம்!

உங்களுக்குத் தெரியும், நான் ஆய்வுகளுக்கு அடிக்கடி தமிழ்நாடு முழுவதும் பயணம் செல்பவன். அப்படியொரு ஆய்வில், சேலத்தில் பொதுமக்கள் சிலரைச் சந்தித்து, “நம்முடைய அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? ஏதாவது குறை இருக்கிறதா? இல்லை, அந்தத் திட்டங்களைச் செம்மைப்படுத்த ஏதாவது கருத்துகள் இருக்கிறதா?” என்று கேட்டேன்.

அதில் ஒரு மகளிர் சொன்ன கருத்தை என்னால் மறக்க முடியாது. மிகவும் எதார்த்தமாக அவர்கள் சொன்னார்கள்! ”அய்யா என்னுடைய கணவர் பெயிண்டராக வேலை செய்கிறார்! எங்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது! என்னுடைய கணவருக்கு பெயிண்டிங் வேலை தொடர்ந்து இருக்காது. சம்பாதிக்கும் காசு வீட்டுச் செலவிற்கே சரியாகப் போய்விடும். நானும் வீட்டு வேலைக்குச் செல்கிறேன்! மூன்றாவது படிக்கும் என் குழந்தைக்குக் காலையில் சாப்பாடு கொடுக்க முடியவில்லை என்று, வேலை செய்யும்போது கஷ்டமாக இருக்கும்! இப்போது அந்தக் கஷ்டம் இல்லை, நீங்கள் கொண்டுவந்த காலை உணவுத் திட்டத்தால், காலையில் என் குழந்தை பள்ளிக்குச் சென்று நன்கு சுவையாகச் சாப்பிடுகிறாள்!

அதுமட்டுமல்ல, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் நீங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பெரிய உதவி! எங்கள் செலவு போக மீதியை என் பெண் குழந்தை பெயரில், பக்கத்தில் இருந்த அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு தொடங்கி, சேமிக்கத் தொடங்கிவிட்டேன்! மற்றவர்களுக்கு அது வெறும் ஆயிரம் ரூபாயாக இருக்கலாம்... ஆனால் எனக்கு, என் குழந்தையின் எதிர்காலத்திற்கான பணம்! என் குழந்தைக்குச் சாப்பாடும் போட்டு, பணமும் கொடுக்கும் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்” என்று அந்தத் தாய்மார் மனதிலிருந்து வந்த வார்த்தை… இது போதாதா நமக்கு? இதைவிட என்ன மகிழ்ச்சி வேண்டும். இது போன்று, தமிழ்நாடு முழுவதும் இருக்கும் 1 கோடியே 15 இலட்சம் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் மூலமாக வாங்கும் ஆயிரம் ரூபாயை, “எங்கள் அண்ணன் ஸ்டாலின் தரும் தாய்வீட்டுச் சீர்” என்று உரிமையோடும், மகிழ்ச்சியோடும் சொல்கிறார்கள்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் போன்று, மகளிர் இலவசமாகப் பயணம் செய்ய விடியல் பயணம் திட்டம்,

கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம்,

மாணவர்களுக்கும் 1000 ரூபாய் வழங்க இருக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம்,

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நான் முதல்வன் திட்டம் என்று நாள்தோறும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி, மக்களுக்கான அரசாகத் தி.மு.க. ஆட்சி செயல்பட்டு வருகிறது!

தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சியைப் பெருக்கவேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழு முயற்சியோடு செயல்பட்டு வருகிறது நம்முடைய திராவிட மாடல் அரசு! ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்சாலைகள் அமைய வேண்டும். வளர்ச்சி என்பது சீரானதாக அனைத்து மாவட்டங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதுதான் தி.மு.க. அரசின் நோக்கம்!

நமக்கு மிகப்பெரிய இலக்கு இருக்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை தமிழ்நாடு எட்ட வேண்டும் என்பது நிர்ணயிக்கப்பட்ட இலக்கு! அந்த இலக்கை அடைய - முதலீடுகளைப் பெற – புதிய தொழிற்சாலைகளை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறோம்!

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி, 6 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீடுகளைப் பெற்று 14 இலட்சத்து 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கிறோம்!

தமிழ்நாடு முன்னேற்றப் பாதையில் செல்ல ஒவ்வொரு திட்டமாக வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறோம்! இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அ.தி.மு.க.வும் - பா.ஜ.க.வும் மக்கள் நலத்திட்டங்களைத் தமிழ்நாட்டுக்கான திட்டங்களைக் குறை சொல்கிறார்கள். அது குறைகளாக இருந்தால் நிச்சயம் சரிசெய்யலாம்… ஆனால், தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது நடக்கிறது என்ற வயிற்றெரிச்சலில் அவதூறு செய்கிறார்கள். தி.மு.க. திட்டங்களைக் குறை சொல்வதாக நினைத்துக் கொண்டு பயனடையும் தமிழ்நாட்டு மக்களையே குறை சொல்கிறார் பாதம்தாங்கி பழனிசாமி!

அவர் மட்டுமா, பா.ஜ.க. என்ன சொல்கிறார்கள்? மகளிருக்குக் கிடைக்கும் உரிமைத் தொகையையும் – வெள்ள நிவாரணத் தொகையையும் – ‘பிச்சை’ என்று கேவலப்படுத்தியும் தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கு நிதி தராமலும் முட்டுக்கட்டை போடும் கட்சி பா.ஜ.க.

தி.மு.க. அரசின் சாதனைகளைக் குறை சொல்லும் இந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கள்ளக்கூட்டணியால், அவர்கள் ஆட்சியில் செய்த சாதனை என்றோ - மக்களுக்காக நிறைவேற்றிய சிறப்பு திட்டம் என்றோ – எதையும் சொல்வதற்குத் தகுதி இல்லாமல், அவதூறு குதிரையில் அரசியல் பயணம் செய்கிறார்கள்! ஆனால், தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும், சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் – நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் – தேர்தல் அறிக்கையில் சொல்வதைச் செய்யும் கட்சி!

சென்வாட் வரியை நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுத்தோம். நீக்கிக் காட்டினோம்!

பொடா சட்டத்தை ரத்து செய்வோம் என்று கூறினோம். இரத்து செய்தோம்!

அதுமட்டுமல்ல, இந்த வட்டாரத்து விவசாய மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளாக இருந்த முக்கியமான பிரச்சினைகளைத் தி.மு.க. அரசு தீர்த்து வைத்திருக்கிறது என்றப் பெருமையுடன் சொல்ல முடியும்!

காலிங்கராயன் வாய்க்காலில் சாயக் கழிவுநீர் கலப்பதை நம்முடைய தி.மு.க. அரசு தடுத்திருக்கிறது! காலிங்கராயன் என்ற கொங்கு நாட்டுத் தலைவரால் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதுதான் காலிங்கராயன் அணை! அதோடு வாய்க்காலும் அமைத்தார். இயந்திரங்கள் இல்லாத நிலையில் பூமியின் சரிவைக் கணக்கிட்டு பவானி முதல் கொடுமுடி வரையிலான 56 கிலோ மீட்டர் தூரத்திற்கு வளைந்து, வளைந்துச் சென்றால், தண்ணீரின் வேகம் அதிகரித்து கடைமடை வரை சீரான பாசனம் வழங்க முடியும் என்று காலிங்கராயன் வாய்க்கால் வெட்டி 21 ஆயிரம் ஏக்கரில் பாசனத்தைத் துவக்கி வைத்தார். அதுமட்டுமா, இது பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கட்டியது என்பதற்காகவே இதைத் துளிகூட, தான் பயன்படுத்தாமல், வேறொரு பகுதிக்குச் சென்று குடியேறிய மாபெரும் தலைவர்தான் காலிங்கராயர் அவர்கள்.

இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்குக் காலிங்கராயன் தண்ணீர் பயன்பட்டு வருகிறது. காலப்போக்கில் சாயப்பட்டறைகள், தோல் ஆலைகளால் இந்த வாய்க்கால் நீர் அழுக்கானது. இதனால், உழவர் பெருமக்கள் கவலை அடைந்தார்கள். இந்தப் பிரச்சினை பற்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சாய, தோல் ஆலைகள் பெருந்துறை சிப்காட் தொழில் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. மேலும், இதுபோன்ற பிரச்சினை ஏற்படக் கூடாது என்று, 1996-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 100 கோடி ரூபாய் செலவில் காலிங்கராயன் வாய்க்கால் வலது கரைப்பகுதி தரைத்தளம் அமைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனால், கால்வாயின் வலது கரைப் பகுதியில் இருக்கும் ஆலைகள் கழிவுநீரை வெளியேற்ற முடியாமல், தடுத்து நிறுத்தப்பட்டது. இப்போது, தெளிவான நீர்ப்பாசனம் பெற்று வருகிறது. தண்ணீர் வருகைக்கு ஏற்ப மூன்று போகம் சாகுபடி செய்கிறார்கள்.

"பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது, அவரின் குடுமி பாஜக கையில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

அதேபோன்றுதான், ஈரோடு பவானிசாகர் அணை, கீழ்ப்பவானி வாய்க்கால் பாசனத் திட்டப் பிரச்சினையும் தீர்க்கப்பட்டிருக்கிறது. பவானிசாகர் அணையில் இருந்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டப் பகுதிகளுக்குக் கீழ்பவானி பாசனக் கால்வாய்த் திட்டம் மூலம் தண்ணீர் போகிறது. இந்தக் கால்வாய் பவானிசாகர், சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, சென்னிமலை, மங்களப்பட்டி வரை சுமார் 200 கிலோமீட்டர் பாய்வதால், 3 இலட்சம் ஏக்கரில் நேரடிப் பாசனமும், 5 இலட்சம் ஏக்கரில் கசிவுநீர்ப் பாசனமும் பெறுகிறது. இந்தக் கால்வாய் பாசனத்திற்குத் திறக்கப்படும்போதெல்லாம், 200-ஆவது கிலோமீட்டரில் இருக்கும் கடைமடைப் பகுதியான மங்களப்பட்டிக்குத் தண்ணீர் சென்று சேருவது இல்லை என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகப் போராடி வந்தார்கள்.

கடந்த 2020-ஆம் ஆண்டு கீழ்பவானி வாய்க்கால் முழுவதும், 719 கோடி செலவில் கான்கிரீட் தளம் அமைக்கப்படும் என்று கடந்த அரசு அறிவித்தது. இதனால், விவசாயிகள் கொதித்து எழுந்தார்கள். கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை என்று கேட்டதற்கு கால்வாய் முழுவதும் கான்கிரீட் போட்டால், கசிவுநீர்ப் பாசனம் வறண்டு போய்விடும், குடிநீர் ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப் போய்விடும், இலட்சக்கணக்கான மரங்கள் காய்ந்து போய்விடும் என்று கான்கிரீட் திட்டத்தைக் கைவிடக் கோரி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தார்கள். 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு கீழ்பவானி வாய்க்கால் பாசன விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தினோம். பலமுறை ஆய்வுக் கூட்டம் நடத்தி விவசாயிகளுக்குத் தேவையானவை மட்டும் செய்யப்படும் என்று, நான் உறுதி அளித்தேன். தற்போது முதற்கட்டமாக, சுமார் 69 ஆண்டுகள் ஆகிவிட்டதால், வலுவிழந்த, உடைந்த, பாசன மதகுகள், பக்கவாட்டுச் சுவர்கள், பெருச்சாளிகள் - வளைகள் தோண்டி உடைப்பு ஏற்பட உள்ள இடங்கள் ஆகியவற்றை கணக்கெடுப்பு செய்து, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் அச்சம் போக்கப்பட்டு மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

அடுத்து, மற்றொரு திட்டப் பிரச்சினையும் தீர்த்து வைத்திருக்கிறோம்! அதுதான், அ.தி.மு.க. ஆட்சியில் முறையான திட்டமிடல் இல்லாமல், அவசரகதியில் துவக்கப்பட்ட அத்திக்கடவு அவினாசி நீரேற்று திட்டம். தண்ணீர் எடுக்கும் நிலையம் இருக்கும் பகுதியைக் கையகப்படுத்தாமல், கடந்த ஆட்சியில் விட்டுவிட்டார்கள்! இதனால், ஒட்டுமொத்தத் திட்டத்தையே நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பிறகு, நம்முடைய அமைச்சர் முத்துசாமி அவர்கள், நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடம் சுமுகமாகப் பேசி நிலத்தைக் கையகப்படுத்தினார். குழாய்கள் பதிக்கப்பட்டுச் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, இப்போது தயார் நிலையில் இருக்கிறது. வரும் பருவகாலத்தில் உபரிநீர் வந்தவுடன், இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும். திட்டம் போடும்போது அ.தி.மு.க. அரசு தீவிரமாக யோசிப்பது இல்லை என்பதற்கு, இதுவும் ஒரு முக்கியமான உதாரணம்!

நம்மைப் பொறுத்தவரை, நம்முடைய முழக்கமே என்ன? ”சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்”! அந்த கம்பீரத்துடன்தான், இந்த நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின், என்னவெல்லாம் செய்வோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாகக் கொடுத்திருக்கிறோம். சாதனைகளாக மாறப்போகும் அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்!

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்!

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்திச் செலவுடன், ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்திக் குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்!

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்!

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்!

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்!

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்!

ஈரோடு மாவட்டம் பாசூரையும், நாமக்கல் மாவட்ட சோழிராமணியையும் இணைக்க இரயில்வே மேம்பாலம்!

நாமக்கல்லில் சிறப்பு முட்டை ஏற்றுமதி மையம்!

ஈரோடு இரயில் நிலையம் முதல் காங்கேயம், தாராபுரம், பழனி இரயில் நிலையம் வரை புதிய அகல ரயில் பாதைத் திட்டம்!

ஈரோட்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்!

இப்படி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி போன்று, இந்திய ஒன்றியத்திலும் எல்லாருக்கும் எல்லாம் எனும் ஆட்சி அமைய வேண்டும் என்று இந்த வாக்குறுதிளைக் கொடுத்திருக்கிறோம்!

திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் சமூகநீதியை நிலைநாட்டும் அரசாகச் செயல்படுகிறது! பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அதிகரித்தது, தி.மு.க. அரசுதான்! மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது, திமு.க. அரசுதான்! ஆதிதிராவிட மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்தியவர், தலைவர் கலைஞர்தான்! பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது தலைவர் கலைஞர்தான்! சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கியதும், தலைவர் கலைஞர்தான்! அருந்ததியின மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கியவரும் தலைவர் கலைஞர்தான்! அந்த சட்டமுன்வடிவுக்கான தலைவர் கலைஞரின் உரையைச் சட்டப் பேரவையில் படித்தது, இந்த அடியேன் ஸ்டாலின்தான்!

இன்றைக்குத் தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு இருக்கிறது என்றால், அதை வழங்கியது தி.மு.க. அரசுதான்! “சொன்னதைச் செய்வோம் - செய்வதைத்தான் சொல்வோம்!” இது கலைஞர் பாணி! ”சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம்!” இது இந்த ஸ்டாலின் பாணி!

ஆனால், அ.தி.மு.க. – பா.ஜ.க. பாணி என்ன? ”எதுவும் செய்யவும் மாட்டோம்; யாரு செய்தாலும் தடுப்போம்” இதனால்தான், ஸ்டாலின் கொடுத்த வாக்குறுதிகளில் 10 விழுக்காட்டைக்கூட நிறைவேற்றவில்லை என்று ’பச்சைப் பொய்’ பழனிசாமி பொய்ப் பிரச்சாரம் செய்கிறார். ஒவ்வொரு முறை மக்களைச் சந்திக்கும்போதும், தி.மு.க. நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளைப் புள்ளிவிவரங்களோடு சொல்கிறேன். ஆனால், பழனிசாமியோ இந்தச் செய்திகளையும் பார்ப்பது இல்லை. சட்டமன்றத்தில் சொல்லும்போதும் கேட்பதில்லை. மீண்டும் மீண்டும் பொய் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்துக் கொண்டு இருக்கிறார்! இவர் என்ன நினைக்கிறார் என்றால், இப்படி பொய் பேசினால் அவர் ஏமாற்றியதை மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைக்கிறார்!

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், இலவச செல்போன் தருவோம் என்றார்கள், தந்தார்களா? அனைத்து மகளிருக்கும் ஸ்கூட்டி தருவோம் என்றார்களே! தந்தார்களா? அம்மா வங்கி அட்டை தரப்படும் என்று சொன்னார்களே… யாருக்காவது கொடுத்தார்களா? பட்டு ஜவுளிப் பூங்காவை உருவாக்குவோம் என்று சொன்னார்களே… உருவாக்கினார்களா? இதெல்லாம் ட்ரெய்லர்தான்! மொத்தமாகச் சொல்ல நேரம் பத்தாது!

இதேபோன்று, பா.ஜ.க. சொன்னதும் செய்தார்களா? கருப்புப் பணத்தை மீட்கவில்லை! யாருக்கும் 15 இலட்சம் பணம் கொடுக்கவில்லை! ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கவில்லை! மொத்தத்தில் ஊழலற்ற ஆட்சியையும் ஒன்றியத்தில் கொடுக்கவில்லை! அதற்கு, இமாலய எடுத்துக்காட்டுதான், உலக அளவில் இந்திய ஜனநாயகத்திற்கே அழிக்க முடியாத அவமானத்தை ஏற்படுத்தியிருக்கும் ”தேர்தல் பத்திர ஊழல்!” அதுமட்டுமா, சி.ஏ.ஜி அறிக்கையில் வந்ததே! 7 இலட்சம் கோடி ரூபாய்க்கு முறைகேடு நடந்திருப்பதாக, சி.ஏ.ஜி. அறிக்கை வெளியிட்டது! அதைப் பற்றி ஒன்றிய அரசு, வாயே திறக்கவில்லையே! தேர்தல் பத்திரம் போன்றே மற்றொரு நிதியும் வசூல் செய்திருக்கிறார்! அதுவும் ‘பி.எம். கேர்ஸ் ஃபண்ட்’ என்ற பெயர் வைத்து வசூல் செய்திருக்கிறார்! அது பற்றிய அத்தனை ரகசியங்களும் ஜூன் மாதம் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், அம்பலமாகும்! அப்போது மாட்டுவார்கள். யார் யார் கம்பி எண்ணுகிறார்கள் எனப் பார்ப்போம்.

இப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதுவுமே செய்யாத பிரதமர் மோடியும் – ஒன்றிய பா.ஜ.க. அரசும் இந்த மேற்கு மண்டலத்திற்குத் தாங்கள் ஏதோ சாதனைகளைச் செய்துவிட்டதாக நினைத்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். உண்மையில், தொழில்வளம் மிகுந்த இந்த மேற்கு மண்டலம்தான், பா.ஜ.க.வின் இன்னல்களுக்கு அதிகமாக ஆளாகியிருக்கிறது… ஜனநாயகம் -நாடாளுமன்றம் - மாநில அரசுகள் - இடஒதுக்கீடு என்று அனைத்தையும் ஒழிக்க நினைக்கும் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் - தமிழ்நாட்டில் தொழில் துறையையே மொத்தமாக இழுத்து மூடிவிடுவார்கள்! தொழில் வர்த்தகக் கட்டமைப்பையே சிதைத்துவிடுவார்கள்! அவருக்கு நெருக்கமான சிலர் மட்டுமே, தொழில் வர்த்தகம் செய்ய முடியும் என்ற நிலையை உருவாக்கிவிடுவார்கள்! எளிய மக்களின் உழைப்பில் வளர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் எல்லாத்தையும் அழித்துவிடுவார்கள்!

கடந்த ஆட்சியில் என்ன செய்தார் மோடி? திடீர் என்று ஒரு இரவில் தொலைக்காட்சியில் தோன்றி, கருப்புப் பணத்தை ஒழிக்க, ஐந்நூறு ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளைத் தடை செய்கிறேன் என்று அறிவித்தார். கருப்புப் பணம் ஒழிந்துவிட்டதா? சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்தானே ஒழிந்தது! நேற்றுகூட ஒரு விழாவில் மாண்பமை உச்சநீதிமன்ற நீதியரசர் ஒருவர் பேசியிருக்கிறார், “பணமதிப்பிழப்பைத் திட்டமிடாமல் செயல்படுத்தியிருக்கிறார்கள். நாட்டில் இருந்த ரூபாயில் 86 விழுக்காடாக இருந்த ஐந்நூறு - ஆயிரம் ரூபாய்கள், பணமதிப்பிழப்பிற்குப் பிறகு, 98 விழுக்காடு ரிசர்வ் வங்கிக்கே மீண்டும் வந்துவிட்டதே… அப்படி என்றால், கருப்பு பணம் ஒழிந்ததா? கருப்பு பணத்தை வெள்ளையாக்கத்தான், பணமதிப்பிழப்பு பயன்பட்டிருக்கிறது” என்று சொல்லியிருக்கிறார்கள்.

"பழனிசாமியால் பாஜகவை எதிர்க்க முடியாது, அவரின் குடுமி பாஜக கையில்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !

இப்படி ஒன்றை முடித்து, அடுத்து உடனே, ஜி.எஸ்.டி. என்ற பெயரில் எல்லா பொருள்கள் மேலும் மிகக் கொடூரமான வரிகளைப் போட்டார்கள். ‘சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் மட்டும் இல்லாமல் எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டது! இப்படி பெரிய இரண்டு செயற்கைப் பேரிடரை சந்தித்த தொழிற்துறைக்கு, இயற்கை இடராகக் கொரோனா வந்தது! இரண்டு ஆண்டுகாலம் அனைத்துத் தொழிலும், மக்களின் வாழ்வாதாரமும் மிக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது!

இதற்குப் பிறகும் விடாமல், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு – இடுபொருட்கள் விலை உயர்வு - சுங்கச்சாவடி கட்டணச் சுரண்டல் என்று இந்தப் பகுதியில் இருக்கும் MSME நிறுவனங்கள் - ஜவுளித்தொழில் – பேருந்து கூண்டு கட்டும் தொழில் - கொசுவலை உற்பத்தித் தொழில் வரை அனைத்துமே பாதித்திருக்கிறது. ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுத்த இந்த நிறுவனங்கள் நலிவடைந்ததால், வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாகிவிட்டது. உற்பத்தி நடவடிக்கைகள் இந்திய அளவில் குறைந்திருப்பதாக, புள்ளிவிவரங்கள் சொல்கிறது. ஆர்டர்கள் கிடைக்காமல் மில்களை மூடும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. விசைத்தறிகளுக்கு சோலார் மின்தகடு அமைக்க மானியம் கிடைப்பதில்லை! விசைத்தறிகளைத் தரம் உயர்த்தவும் மானியம் கிடைப்பதில்லை. MSME-களுக்கு முன்போன்று, கடனும் - மானியமும் எளிதாகக் கிடைக்கிறதா? சிறு - குறு, தனிநபர் நிறுவனங்கள் மற்றும் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு 30 விழுக்காடு வருமான வரி விதிக்கப்படுகிறது, ஈரோட்டு மஞ்சள் பலருக்கும் வாழ்வாதாரமாக இருக்கிறது… மஞ்சளை உணவுப் பொருளாக மாற்றிவிட்டால் ஜி.எஸ்.டி போட முடியாது என்று விவசாயிகளின் கோரிக்கையை பா.ஜ.க. அரசு புறக்கணிக்கிறது!

இரண்டு நாளைக்கு முன்பு ஒரு செய்தி வந்திருக்கிறது… என்ன தெரியுமா? இப்போது இருக்கும் சுங்கச்சாவடி முறையை மாற்றி, செயற்கைக்கோள் வழியாகக் கண்காணித்து நேரடியாக நம்முடைய வங்கிக் கணக்கில் இருந்தே பணம் எடுத்துக் கொள்வது போன்று முறையைக் கொண்டு வரப்போவதாக ஒன்றிய அமைச்சர் சொல்லியிருக்கிறார். என்ன கொடுமை இது? நாங்கள், தேர்தல் அறிக்கையில் தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகளை முற்றிலுமாக அகற்றுவோம் என்று சொன்னால், இவர்கள் நேராக வங்கியில் இருந்தே பணம் எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்! இதுதான் நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் வேறுபாடு!

இப்படிப்பட்ட ஊழல் ஆட்சியை நடத்தி - கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி ஊருக்கு உபதேசம் செய்யலாமா? பா.ஜ.க. டைரக்‌ஷன்-இல் நடக்கும் அ.தி.மு.க – பா.ஜ.க. கள்ளக்கூட்டணிக்கு, பாதம்தாங்கி பழனிசாமி புதியதாக ஒரு கதை சொல்லியிருக்கிறார்! டயலாக் என்ன தெரியுமா? பா.ஜ.க.வின் கூட்டணியில் இருந்ததால், விமர்சிக்க மாட்டாராம்! என்ன ஒரு பதில்! உண்மை அது இல்லை! அவரால் ஒருபோதும் பிரதமர் மோடியையோ – அமித்ஷாவையோ – ஆளுநரையோ – ஏன், பா.ஜ.க.வில் இருக்கும் யாரையும் விமர்சிக்க முடியாது. ஏன், என்றால் எஜமான விஸ்வாசம்! பதவி சுகத்திற்காகவும் - ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் – பா.ஜ.க.வின் அத்தனை மக்கள் விரோதத் திட்டங்களையும் ஆதரித்தவர் பழனிசாமி!

ஆட்சியில் இருக்கும்போது வைத்த கூட்டணியை இப்போதும் ரகசியமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கிறார். இதற்குச் சுற்றிவளைத்து அவர் கண்டுபிடித்த காரணம்தான் கூட்டணி தர்மம்! காலில் தவழ்ந்து சென்று முதலமைச்சர் பதவியை வாங்கிய, அம்மையார் சசிகலாவைப் பற்றி நீங்கள் பேசாத பேச்சா? இது என்ன மாதிரியான தர்மம்? கூடவே இருந்த தர்மயுத்தம் ஓ.பி.எஸ்.க்குப் பொதுக்குழுவில் வாட்டர் பாட்டில் மரியாதை செய்தீர்களே! அது என்ன தர்மம்? இப்போது சமீபத்தில்கூட, உங்கள் கூட்டணியில் இருந்து சென்ற – அய்யா ராமதாசை நீங்கள் விமர்சிக்கவில்லையா? இது என்ன கூட்டணி தர்மத்தில் வராதா?

பாதம்தாங்கி பழனிசாமி அவர்களே! உங்களால், ஒருபோதும் பா.ஜ.க.வை விமர்சிக்க – எதிர்க்க முடியாது! அதற்குத் துணிவு வேண்டும்! முதுகெலும்பு வேண்டும்! ஏன் என்றால், பழனிசாமியின் குடுமி பா.ஜ.க. கையில் இருக்கிறது! என்ன குடுமி? ஊழல் குடுமி! அ.தி.மு.க.வின் ஊழல்கள் என்பது, கன்னித்தீவு கதை மாதிரி! அதில் பழனிசாமியின் அத்தியாயத்தை மட்டும் சொல்ல வேண்டும் என்றால், சம்பந்திக்கும் – சம்பந்தியின் உறவினருக்கும் காண்ட்ராக்ட் கொடுத்துச் சாதனை செய்தவர் பழனிசாமி! சம்பந்திக்கு டெண்டர் கொடுப்பதில் என்ன தவறு என்று சொன்னவர்தான் பழனிசாமி! “யார் மேல்தான் ஊழல் புகார் இல்லை” என்ற எகத்தாளமாக டெல்லியில் பேட்டி கொடுத்தவர் பழனிசாமி! குட்கா வியாபாரிகளிடம் மாமூல் வாங்கும் அமைச்சரை வைத்து, ஆட்சி நடத்தியதும் பழனிசாமிதான்! இன்றைக்கும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது! இப்படி வாய்கிழிய ஊழலுக்கு வக்காலத்து வாங்கும் பழனிசாமிக்கு, தி.மு.க.வைப் பற்றிப் பேச என்ன யோக்கியதை இருக்கிறது!

12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, தில்லிக்கு சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாக துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது; மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே... நீங்கள் எஜமானர் அல்ல! மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள்! அதை மறந்துவிடாதீர்கள்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், இன்னமும் மக்களிடம் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறீர்கள்! நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைத்ததிலேயே தெரிந்துவிட்டதே! ஆண்டுதோறும் மகளிர் நாள் வருகிறது, அப்போதெல்லாம் குறைக்காதவர், தேர்தல் வருகிறது என்று இந்த ஆண்டு குறைக்கிறார்! சிலிண்டர் விலையை ஏற்றியது யார்? இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்! தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்தது யார்? அதுவும், இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்! இந்த விலைக் குறைப்பு நாடகம் எல்லாம், தங்களின் ஆட்சியில் நாடு எப்படி சீரழிந்தது என்பதை மறைக்க - மக்களை மறக்க வைக்க பா.ஜ.க. போடும் திட்டம்!

கடந்த 5 ஆண்டுகளில், E.D. – I.T. – C.B.I. இப்படிப்பட்ட ஒன்றிய அரசின் அமைப்புகளை பா.ஜ.க.வின் கைப்பாவையாக மாற்றி, அவர்களை ரெய்டிற்கு அனுப்புவது, பிறகு பா.ஜ.க.விற்கு நிதியாகத் தேர்தல் பத்திரங்களை வாங்குவது என்று, 8 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருக்கிறார்கள். வரலாற்றிலேயே இப்படி ஒரு வசூல் நடந்ததில்லை! இந்த ஊழல் வெளி வந்ததால், பிரதமர் மோடியின் முகத்தில் தோல்வி பயம் அப்பட்டமாகத் தெரிகிறது.

தேர்தல் நெருங்க நெருங்க, தோல்வி பயத்தில் செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார். ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அவர்களைக் கைது செய்தார்கள். டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களைக் கைது செய்திருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் வெளியிலிருந்து வலிமையாகத் தேர்தல் பணியாற்றுவார்கள் என்று பயந்து நடுங்கிக் கைது செய்திருக்கிறார்கள். இங்கு தமிழ்நாட்டிலும் - மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் - அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன்கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள்… பா.ஜ.க.வின் அத்தனை சதிச்செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரமான புலனாய்வு அமைப்புகளைக் கூட்டணிக் கட்சிகள் போன்று மாற்றி எதிர்க்கட்சிகள் மேல் ஏவி விட்டிருக்கும் பா.ஜ.க.விற்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இது இரண்டு பக்கமும் கூரான முனைகளைக் கொண்ட கத்தி என்பதை மறக்க வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.

அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் சிறையில் இருந்தபடியே கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருவது மட்டுமல்ல, தேர்தல் பணிகளையும் கவனித்துக் கொண்டு வருகிறார். அவர் மீதான அடக்குமுறை இந்தியா கூட்டணியின் வலிமையை அதிகரித்திருக்கிறது. செல்வாக்கை அதிகரித்திருக்கிறது. இன்று தலைநகர் தில்லியில் இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், என்னுடைய சார்பில் தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவரும் - கொள்கை பரப்புச் செயலாளருமான திருச்சி சிவா அவர்கள் கலந்துகொண்டு என்னுடைய உரையை வாசித்திருக்கிறார்.

“அடக்குமுறை எப்போதும் வெல்லாது” என்பதை இந்தத் தேர்தல் மூலம், இந்திய நாட்டு மக்கள் பா.ஜ.க.வுக்குப் புரிய வைப்பார்கள். பா.ஜ.க. எனும் மக்கள் விரோத - ஜனநாயக விரோதக் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தப்படவுள்ள நாளான ஜூன் 4 இந்தியாவின் இரண்டாவது விடுதலை நாளாக வரலாற்றில் பதியட்டும்! இந்த வெற்றிச் சரிதம் எழுத, ஈரோடு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், கரூர் தொகுதி மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி அவர்களுக்குக் கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும், நாமக்கல் தொகுதி மக்கள், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் மாதேஸ்வரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் வாக்கு – ஜனநாயகத்தைக் காக்கட்டும்! இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காக்கட்டும்! அரசியல் சட்டம் தந்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி என அனைத்தையும் காக்கட்டும்! மொத்தத்தில் உங்கள் வாக்கு தமிழ்நாட்டைக் காக்கட்டும்! உங்கள் வாக்கு இந்தியாவைக் காக்கட்டும்! “பாசிசமும் மதவாதமும் வீழ்ந்தது! ஜனநாயகமும் சமத்துவமும் சகோதரத்துவமும் வென்றது!” என்ற புதிய வரலாறு பெரியார் பிறந்த மண்ணில் இருந்து தொடங்கட்டும்! பாசிசத்தை வீழ்த்த - இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே ! நாற்பதும் நமதே! நாடும் நமதே !

நன்றி! வணக்கம்!

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories