மு.க.ஸ்டாலின்

”சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் ராமதாஸ் கை கோத்த மர்மம் என்ன?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க!

”சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் ராமதாஸ் கை கோத்த மர்மம் என்ன?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (29-03-2024) தருமபுரி மாவட்டம், தடங்கம் பகுதியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக் கூட்டத்தில், தருமபுரி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஆ.மணி அவர்களையும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு.கோபிநாத் அவர்களையும் அறிமுகப்படுத்தி, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டு எழுச்சியுரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

அவ்வைக்கு நெல்லிக்கனியைக் கொடுத்த வள்ளல் அதியமான் வாழ்ந்த இயற்கை எழில் சூழ்ந்த தகடூர் என்று வரலாற்றில் போற்றப்படும் தருமபுரி மண்ணிற்கு வந்திருக்கிறேன். அதேபோல், சையத் பாட்சா கோட்டை என்பதை அமைத்து மாபெரும் போர் நடைபெற்ற இடம் கிருஷ்ணகிரி! இதுவும் போர்க்களம்தான்! ஜனநாயகப் போர்க்களம்! பாசிச மதவெறி கொண்ட பா.ஜ.க., இந்தியா என்ற அழகிய நாட்டை அழித்துவிடாமல் தடுக்க – ஜனநாயகச் சக்திகளும் - இந்திய நாட்டு மக்களும் – களம் கண்டுள்ள ஜனநாயகப் போர்க்களம்!

நாம் நடத்த இருக்கும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்குக் கட்டியம்கூறும், இந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்த எழுச்சிமிகு தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை மாநாடுபோல், ஏற்பாடு செய்திருக்கும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் – ‘வேங்கையின் மைந்தன்’ என்று என்னால் பாசத்தோடு அழைக்கப்படும், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களுக்கும், ஆற்றல்மிகு அமைச்சர் செயல்வீரர் சக்கரபாணி அவர்களுக்கும், மாவட்டக் கழகச் செயலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி!

தருமபுரி தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிடும் ஆ.மணி அவர்கள் கழகத்தின் ஆற்றல்மிகு தொண்டர்! மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர்! மாவட்டத் துணைச்செயலாளராக இருக்கும் அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க ”உதயசூரியன்” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்!

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கோபிநாத் அவர்கள், அவரே சொன்னது போல, 2001, 2006, 2011 ஆகிய மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். மக்கள் செல்வாக்கைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டவர். அவரையும் உங்கள் நன்மைக்காக நாடாளுமன்றத்திற்கு அனுப்ப ”கை” சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

நடக்க இருப்பது, இந்திய வரலாற்றிலேயே மிகமிக முக்கியமான தேர்தல்! இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் – ஜனநாயகத்திற்கும் – தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கும் – இளைய தலைமுறையினருக்கும் – எதிர்கால சந்ததியினருக்கும் – அளிக்கும் வாக்கு! இந்தியாவில் சமூகநீதி நீடிக்க வேண்டும் என்றால், ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால், வேற்றுமையில் ஒற்றுமை தொடர வேண்டும் என்றால், எங்கும் சமத்துவம் தழைக்க வேண்டும் என்றால், அரசியல்சட்டம் காப்பாற்றப்பட வேண்டும் என்றால், நம் நாட்டின் பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் இந்திய தேசியக் கொடி கம்பீரமாக தில்லி செங்கோட்டையில் பறக்க வேண்டும் என்றால், முதலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்! இந்தியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்த வேண்டும்!

பா.ஜ.க. என்பது சமூகநீதிக்குச் சவக்குழி தோண்டும் கட்சி! சமத்துவம் என்றால், கிலோ என்ன விலை என்று கேட்கும் கட்சி! நம்முடைய நாட்டை மத – இன – சாதி - மொழி அடிப்படையில் பிளவுபடுத்திக் குளிர்காய வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க.! அப்படிப்பட்ட, பா.ஜ.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்கும் கடமை, சமூகநீதி மண்ணான தமிழ்நாட்டுக்குத்தான் அதிகம் உண்டு!

ஆனால், நான் பெரிதும் மதிக்கும் சமூகநீதி பேசும் அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்கள் எங்கே இருக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும்! சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் - சமூகநீதி பேசும் அய்யா ராமதாஸ் அவர்கள் எப்படி கூட்டணி வைத்தார் என்பது, ஏதோ தங்கமலை இரகசியமெல்லாம் கிடையாது… இந்த தருமபுரி மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அவர் ஏன் மனதில்லாமல் அங்குச் சென்றிருக்கிறார் என்று உங்களுக்கு மட்டுமல்ல - அவர்கள் கட்சியினருக்கும் தெளிவாகத் தெரியும்! இதற்குமேல் நான் விளக்கமாகச் சொல்ல விரும்பவில்லை!

ஒன்றிய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின – பழங்குடியின மக்களின் சமூகநீதியைக் காப்பாற்றும் அரசை ஒன்றியத்தில் அமைக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணியை வலுவாக அமைத்திருக்கிறோம். அந்த வகையில், இந்தியா கூட்டணி, மக்களின் நலனுக்காக – மக்களுக்காகவே பாடுபடும் கட்சிகளின் கூட்டணியாக கம்பீரமாக உங்களுக்காகக் களத்தில் போராடுகிறோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அடிக்கடி கூறுவார்... “எனக்கென்று சாதிப்பெருமை கிடையாது. மிகமிக பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவன். எனக்கென்று குடும்பப் பாரம்பரியம் கிடையாது. ராவ் பகதூர், திவான் பகதூர் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று கூறும் பெருமை எனக்கில்லை. கல்லூரிப் பட்டம் எனக்கில்லை. நான் புகுந்ததெல்லாம் ஈரோட்டுப் பள்ளியும் - காஞ்சிக் கல்லூரியும்தான்! நான் பட்டம் பெறாதவன் என்றாலும், பகுத்தறிவுப் பணியாளன்! சாதிப்பெருமை இல்லை என்றாலும் அண்ணாவின் நீதியே என் சாதியென மதிப்பவன் நான்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் கூறுவார்.

தன்னை ஒரு சாமானியன் என்று அறிவித்துக் கொண்டு, சாமானிய மக்களுக்காக ஆட்சி நடத்தினார் தலைவர் கலைஞர். 1969-இல் முதன்முதலாக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - ஆதிதிராவிடர் நலத்துறை என்று அந்த மக்கள் பயனடையத் தனித்தனியாகத் துறையை உருவாக்கியவர் தலைவர் கலைஞர்தான். பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான சட்டநாதன் ஆணையத்தை அமைத்தார். அந்த ஆணையத்தின் பரிந்துரைப்படி, சமூகநீதிக்குப் புதிய பாதை அமைத்தார். கொங்கு வேளாள கவுண்டர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார். கல்வி, வேலைவாய்ப்புகளில் பல்வேறு வாய்ப்புகள் கிடைத்து, கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தினர் இன்று முன்னேறி இருப்பதற்கு இதுதான் அடிப்படைக் காரணம்!

மற்றொன்றையும் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 18 விழுக்காடும் - பழங்குடியினருக்கு 1 விழுக்காடும் - இடஒதுக்கீடு வழங்கி, அவர்களின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருந்தவர் தலைவர் கலைஞர்தான்!

நம்முடைய திராவிட மாடல் அரசுதான், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளைச் சமத்துவ நாளாக அறிவித்தோம்! ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தைப் புதுப்பித்தோம். பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கு முறையாகச் செலவழிக்கப்படுவதைக் கண்காணிக்க ”தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்டச் சட்டம்” கொண்டுவந்ததும் தி.மு.க. அரசுதான். இப்படி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களைக் கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைகளில் உயர்த்த அனைத்து முயற்சிகளையும் இந்த அரசு கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.

வன்னியர் சமுதாய மக்கள் 1987-ஆம் ஆண்டை மறந்திருக்க மாட்டார்கள்! தனி இடஒதுக்கீடு கேட்டுக் கடுமையான போராட்டம் நடந்த ஆண்டு அது! ஆனால், அ.தி.மு.க. ஆட்சியில் தனி இடஒதுக்கீடு கொடுக்கவில்லை! தலைவர் கலைஞர் 1989-ஆம் ஆண்டு முதலமைச்சரானதும், ஆட்சிக்கு வந்த 43-வது நாளில் வன்னியர் சமூகம் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு 20 விழுக்காடு இடஒதுக்கீட்டை கொடுத்தார். இந்த முப்பதாண்டு காலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்க்கையில் ஒளியேற்றிய இடஒதுக்கீடுதான் அது!

வன்னியர் சங்கத்தினர் மேல் போடப்பட்டிருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றார் தலைவர் கலைஞர்! 1987-ஆம் ஆண்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 பேர் குடும்பத்திற்கு, மூன்று இலட்சம் ரூபாய் கருணைத் தொகை கொடுத்தவர் தலைவர் கலைஞர். இன்றைக்கும் அந்தக் குடும்பங்கள் மாதம் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெறுகிறார்கள்.

சமூகநீதித் தியாகிகளான அவர்களைப் போற்றி மணிமண்டபம் கட்டப்படும் என்று விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நான் வாக்குறுதி கொடுத்தேன். இன்றைக்கு விழுப்புரத்தில் அந்த மணிமண்டபம் கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது! விரைவில் திறக்கப்பட இருக்கிறது. சொன்னதைச் செய்த பெருமையுடன் நான் உங்கள் முன்னால் வாக்கு கேட்டு நிற்கிறேன்.

இந்த நேரத்தில் சில பேர் மறந்துபோன, மறைக்க நினைக்கும் வரலாற்று நிகழ்ச்சிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

கோனேரிக்குப்பத்தில் நடந்த வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாட்டிற்கு, தலைவர் கலைஞரை அழைத்தார் அய்யா ராமதாஸ் அவர்கள்! அய்யா ராமதாஸ் அவர்களே… அன்றைக்கு மேடையில் என்ன பாராட்டிப் பேசினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் மறந்தாலும் வன்னிய சமுதாய மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்! ”1987-ஆம் ஆண்டுமுதல் இடஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம், 21 உயிர்களைப் பலி கொடுத்ததைத் தவிர ஒன்றும் நடக்கவில்லை. அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. முதலமைச்சரைப் பார்க்கவே முடியவில்லை! ஆனால் கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்தார். வந்தவுடன் என்னை அழைத்து இடஒதுக்கீடு தந்த கலைஞர் அவர்களே! உங்களுக்கு நன்றி! இந்த சமுதாயம் என்றென்றும் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மட்டும் 20 விழுக்காடு இடஒதுக்கீடு தரவில்லை என்றால், இங்கு மத்திய அமைச்சர் சொன்னதைப்போல், கூலி வேலை செய்துவிட்டு, ஓட்டு மட்டும் போடும் ஒரு சமுதாயமாக இந்த ஒடுக்கப்பட்ட சமுதாயம் இருந்திருக்கும். அதை மாற்றிய பெருமை, கலைஞர் அவர்களையே சாரும்" என்று சொன்னீர்களே, அத்தகைய சாதனையைச் செய்த இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. – பா.ம.க. கூட்டணி முறிந்ததும், அ.தி.மு.க.வும் - பா.ம.க.வும் மாறி மாறி, அவர்கள் ஆட்சியில் வழங்கிய இடஒதுக்கீடு பற்றி, குற்றம் சொல்லுகிறார்களே? என்னவெல்லாம் பேசுகிறார்கள் என டி.வி.யில் பார்க்கிறோமே! அதையெல்லாம் இப்போது சொல்லி, இந்த மேடையின் கண்ணியத்தைக் குறைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை!

மரியாதைக்குரிய இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு, சென்னையில் சிலை வைக்க வேண்டும் என்று திரு. வாழப்பாடி ராமமூர்த்தி அவர்களும் - வன்னிய அடிகளார் அவர்களும் - சி.என்.ராமமூர்த்தி அவர்களும் கலைஞரைச் சந்தித்துக் கோரிக்கை வைத்தபோது, சென்னை ஹால்டா சந்திப்பில் சிலை அமைத்தார் தலைவர் கலைஞர். அந்த நிகழ்ச்சியில், கலைஞருடன் சென்னை மேயராக இந்த அடியேனும் கலந்து கொண்டேன். எந்தச் சமூகமாக இருந்தாலும் அந்தச் சமூகத்தின் மேன்மைக்காகத் திட்டங்களைத் தீட்டித் தரும் சமூகநீதி இயக்கம்தான் தி.மு.க.

ஆனால் சமூகநீதி பேசும் மருத்துவர் அய்யா அவர்கள், சமூகநீதிக்கு எதிரான பா.ஜ.க.வுடன் கை கோத்த மர்மம் என்ன? பா.ம.க. வலியுறுத்தும் ஒரு கொள்கைக்குக்கூட ஆதரவு தெரிவிக்காத, அதற்கு முற்றிலும் நேர் எதிரான கொள்கை கொண்டதுதான் பா.ஜ.க! இது, மூத்த தலைவரான மருத்துவர் ஐயாவுக்குத் தெரியாதா? நான் மட்டும் இதைச் சொல்லவில்லை, மனசாட்சி உள்ள பா.ம.க.வின் தொண்டர்கள்கூட இதை ஜீரணிக்க முடியாமல் வேதனையோடு இருக்கிறார்கள்! அய்யா ராமதாஸ் அடிக்கடி பேசுவாரே, மண்டல் கமிஷன்… மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தியபோது நாட்டில் திட்டமிட்டு எப்படியெல்லாம் கலவரம் செய்தது பா.ஜ.க! சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களின் ஆட்சியையே பா.ஜ.க. கவிழ்த்ததே!

இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடி மக்களின் இடஒதுக்கீட்டை முழுமையாக ‘குளோஸ்’ செய்வதற்காக எவ்வளவு படுபாதகங்களை பா.ஜ.க. செய்திருக்கிறது… அதை மறந்துவிட்டாரா?

பா.ம.க.வின் சார்பில், இப்போது தேர்தல் அறிக்கையில் அய்யா ராமதாஸ் என்ன சொல்லி இருக்கிறார்? 2021-இல் நடந்திருக்க வேண்டிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, இந்த ஆண்டு இறுதியிலே நடக்கிறது. அப்போது இந்தியா முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தப் பா.ம.க. பாடுபடும் என்று சொல்கிறார்கள்!

நாம் கேட்பது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இதை ஏன் செய்யவில்லை என்று கேட்டாரா? இப்போதாவது இந்தக் கோரிக்கையைப் பிரதமர் ஏற்று இருக்கிறாரா? மோடி அவர்கள் இப்போது கேரண்டி கேரண்டி என்று விளம்பரப்படுத்துகிறாரே? சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த உங்களுக்கு கேரண்டி கொடுத்தாரா? மோடி கேரண்டியில், இடஒதுக்கீட்டின் வரம்பை உயர்த்துவதற்கான உறுதிமொழி உண்டா? அய்யா ராமதாஸ் அவர்கள் மோடியிடமோ, அமித்ஷாவிடமோ அதற்கான உத்தரவாதத்தைப் பெற்று இருக்கிறாரா? இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பைக்கூட வெளியிடாமல் முட்டுக்கட்டை போட்டதுதான் பா.ஜ.க.

இன்று இந்திய அளவில், நம்முடைய கோரிக்கையை ஏற்று, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவும், இடஒதுக்கீடு விழுக்காட்டை அதிகரிக்கும் வாக்குறுதி அளித்திருக்கும் ஒரே தேசிய கட்சி காங்கிரஸ். மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அதை வாக்குறுதியாகத் தந்திருக்கிறார். பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அந்த மாதிரி வாக்குறுதி உண்டா? அருமைச் சகோதரர் ராகுல்காந்தி அவர்கள் செல்லும் இடமெல்லாம் இதைப் பற்றி பேசுகிராரே?

இதைச் சொன்னால், நீங்களே ஏன் நடத்தவில்லை என்று நம்மை கேட்கிறார்! நாம் மீண்டும் மீண்டும் சொல்வது, சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது, அரசியலமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டு, எடுக்கப்பட வேண்டியது! அதற்கான அதிகாரம் ஒன்றிய அரசிடம்தான் இருக்கிறது! மாநில அரசால் சர்வேதான் எடுக்க முடியும்! சென்சஸ் எடுக்க முடியாது! இந்த நடைமுறையெல்லாம் சமூகநீதிப் போராளியான அய்யா ராமதாஸ் அவர்களுக்கு தெரியாது என்று நான் நினைக்கவில்லை! தெரிந்தே, இந்த அரசியலை நடத்துகிறார்! அவர் மேல் வைத்திருக்கும் பெரும் மரியாதைக்காக இதற்கு மேல், நான் எதுவும் பேச விரும்பவில்லை!

யார் என்ன சொன்னாலும், பேரறிஞர் அண்ணா வழியில், “வாழ்க வசவாளர்கள்” என்று நம்முடைய திராவிட மாடல் பணிகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம்… அதனால்தான், இன்றைக்கு உங்கள் குடும்பங்களில் ஒருவனாக – உங்களில் ஒருவனாக – நான் இருக்கிறேன். இதற்கு தருமபுரியும் மிக முக்கியக் காரணம்! நான் எங்குச் சென்றாலும் தாய்மார்களும், சகோதரிகளும் என்னிடம் பாசத்தோடும், மகிழ்ச்சியோடும் உரிமையோடும் பேச வைத்தது மகளிர் சுய உதவிக் குழுக்கள்தான்! ஏன் என்றால், அந்தக் குழுக்களுக்கான சுழல்நிதியைப் பல மணிநேரம் நின்றுக்கொண்டே வழங்கியவன்தான் இந்த ஸ்டாலின்!

அதே மாதிரிதான், இன்றைக்கு நான் கொண்டுவந்திருக்கும், ”கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட”த்தில், ”எங்கள் அண்ணன் ஸ்டாலின் தாய்வீட்டுச் சீர் மாதிரி மாதா மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்” என்று ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் சொல்கிறார்கள் என்றால், அதற்கான விண்ணப்பங்கள் கொடுக்கும் பணியைத் தொடங்கி வைக்க நான் தேர்ந்தெடுத்த ஊரும் இதே தருமபுரிதான்!

எனக்கு தாய்மார்கள் மனதில், அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக நினைக்க வைத்து, பாசப் பாலத்தை அமைத்தது, இந்த தருமபுரிதான்! இதுமட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற இந்த மூன்று ஆண்டுகளில், நிறைவேற்றிய திட்டங்களில் சிலவற்றை மட்டும் சொல்ல வேண்டும் என்றால்,

காலையில் பள்ளிக்கு வரும் குழந்தைகள் வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது, நன்றாகச் சாப்பிட்டு - நன்றாகப் படிக்க வேண்டும் என்று முதலமைச்சரின் ”காலை உணவுத் திட்ட”த்தைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, தினமும் இலட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சியாக, நாங்கள் ஸ்டாலின் அய்யா பஸ்சில், இலவசமாகப் பயணம் செய்கிறோம் என்று சொல்லும் ”விடியல் பயணம்” திட்டம்!

வெளியூரில் வேலைக்குச் செல்லும் மகளிர் பாதுகாப்பாகத் தங்குவதற்கு, ”தோழி விடுதி” திட்டம்!

அடுத்து, பெண் பிள்ளைகளுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ”புதுமைப் பெண்” திட்டம்!

மாணவர்களுக்கும் மாதா மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க இருக்கும் ”தமிழ்ப் புதல்வன்” திட்டம்!

இளைஞர்களுக்கு, திறன் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்றுத் தரும், ”நான் முதல்வன்” திட்டம்!

இப்படி, பள்ளிக் குழந்தைகள் முதல் கல்லூரிக்குச் செல்லும் மாணவ – மாணவிகள் வரை, பயன்பெறும் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு வருகிறோம்.

இந்தத் திட்டங்களால் ஒவ்வொரு பெண்ணும், ஒவ்வொரு மாணவியும், ஒவ்வொரு மாணவனும், ஏன், தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் பயனடைகிறார்கள் என்று நெஞ்சை நிமிர்த்திப் பெருமையுடன் சொல்வேன்! அதனால்தான் நம்முடைய திராவிட மாடல் திட்டங்களை, மற்ற மாநிலங்களும் பின்பற்றும் நல்லாட்சியை வழங்கி வருகிறோம்!

இந்த நல்லாட்சி, இந்தியா கூட்டணி மூலமாக, தில்லியிலும் நடக்க வேண்டும் என்றுதான், பல்வேறு வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையாக வழங்கியிருக்கிறோம். சாதனைகளாக மாறப்போகும் அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன்…

”சமூகநீதிக்கு எதிரான பாஜகவுடன் ராமதாஸ் கை கோத்த மர்மம் என்ன?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி!

பத்தாண்டுகளாகச் சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று கொஞ்சமும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்!

தொழிலாளர் விரோதச் சட்டங்கள், மறுசீரமைப்பு செய்யப்படும்!

ஜி.எஸ்.டி. சட்டத்தில் சீர்திருத்தம் செய்யப்படும்.

விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும் - வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும்.

உழவர்களின் வேளாண் விளைபொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவுடன் பிளஸ் ஐம்பது விழுக்காடு என்பதை வலியுறுத்தி, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யப்படும்.

நாட்டைப் பாதுக்காத்த இந்திய ஆயுதப் படையினரின் ஓய்வூதியம் மற்றும் பிற நிதிப் பலன்கள் உயர்த்தப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-ல் இருந்து, 150 நாட்களாகவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும்.

தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் வசிக்கும் ‘வால்மீகி‘ இன மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

அதேபோல், ‘குன்னுவார்‘ இனமக்களும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.

ஓசூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.

ஜூஜூவாடி முதல் சிப்காட்-II வரை பறக்கும் சாலைப் பாலம் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரியில் இரயில் நிலையம் அமைக்கப்படும்.

ஜோலார்பேட்டை, ஓசூர் இரயில் சேவை கிருஷ்ணகிரி வழியாகத் தொடங்கப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.

ஓசூர், கிருஷ்ணகிரி, சென்னை இரயில் சேவை தொடங்கப்படும்.

சிப்காட்டில் மானியத்துடன்கூடிய ஐம்பது ஏக்கர் நிலத்தை விசைத்தறித் தொழில் வளர்ச்சிக்கு ஒதுக்கித் தர ஆவன செய்யப்படும்.

ஓசூரில் இருந்து பெங்களூருக்கு மெட்ரோ இரயில் சேவை தொடங்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஓசூர், தளி சாலையில் இரயில் மேம்பாலம் அமைக்க ஆவன செய்யப்படும்.

மொரப்பூர் இரயில் நிலையத்தையும், தருமபுரி இரயில் நிலையத்தையும் இணைக்கும் வகையில் புதிய அகல இரயில் பாதை அமைக்கப்படும்.

இது எல்லாவற்றிற்கும் மேல், முக்கியமாக, சாதிவாரிக் கணக்கெடுப்பும், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பும், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே நேரத்தில், ஒன்றிய அரசால் எடுக்கப்படும்.

நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று, இப்படி சொல்வதுபோல் பா.ம.க. அங்கம் வகிக்கும் பா.ஜ.க. ஆட்சியில் தமிழ்நாட்டிற்குப் பத்து ஆண்டுகள் செய்த சிறப்புத் திட்டங்கள் என்ன? என்று சொல்ல முடியுமா? பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வரும்போது சிறப்புத் திட்டங்களைச் சொல்லுங்கள் என்று தொடர்ந்து கேட்கிறோம்? ஒரு மாதமாக நான் கேட்கிறேன். பிரதமரிடம் அதற்கு பதில் இல்லை!

ஒன்றிய அரசில் பங்கு வகித்த தி.மு.க. தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்த சிறப்புத் திட்டங்கள் என்ன என்று சமீபத்தில் பட்டியல் போட்டுச் சொன்னேன்…

தமிழ் செம்மொழியாக அறிவிப்பு!

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்!

சேலத்தில் புதிய இரயில்வே கோட்டம்!

சென்வாட் வரி நீக்கம்!

வரிசையாக நிறைய பட்டியல் போட்டேன்… அதுமாதிரி, தமிழ்நாட்டுக்கான சிறப்புத் திட்டங்களை மட்டும் பட்டியல் போடுங்கள் என்றுதான் கேட்கிறோம். ஒன்று கூட பா.ஜ.க.வினால் சொல்ல முடியவில்லை! சிறப்புத் திட்டத்தின் இலட்சணம்தான் இப்படி என்றால், பொதுவான திட்டங்களாக இருந்தாலும் – மாநிலத்திற்குச் சேர வேண்டிய நிதியாக இருந்தாலும் – தமிழ்நாடு கொடுக்கும் வரிக்கு ஏற்ற மாதிரியான நிதியாவது வருகிறதா? அதுவும் இல்லையே!

பா.ஜ.க. ஆட்சியில் இருக்கும் உத்தரப் பிரதேசம், ஒரு ரூபாய் கொடுத்தால், டபுள் மடங்காக நிதியைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டும் ஒரு ரூபாய் கொடுத்தால், வெறும் 29 பைசா மட்டும் திருப்பி கொடுப்பது ஓரவஞ்சனை இல்லையா?

அதுமட்டுமா, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும், சிறு – குறு தொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யால் எப்படி நலிந்து போயிருக்கிறார்கள்? அசோக் லேலண்டு, டி.வி.எஸ், ஹோண்டா, டொயோட்டா போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்கள் தயாரித்து வழங்கும் 2500 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஓசூரில் இருக்கின்றன. இந்த உதிரிபாகங்களுக்கும் 28 விழுக்காடு ஜி.எஸ்.டி போட்டு, அந்த நிறுவனங்கள் எல்லாம் பாடா படுது! இவர்களுக்காக நீங்கள் என்றைக்காவது கவலைப்பட்டதுண்டா?

மூன்று வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து, அதை எதிர்த்த விவசாயிகளை ஏதோ தீவிரவாதிகளைப்போல் எப்படி கொடுமைப்படுத்தினீர்கள்? இன்றைக்கும் தலைநகர் தில்லியில் விவசாயிகளை நுழைய விடாமல் சாலை முழுவதும் ஆணி அடித்தீர்களே! விவசாயிகளுக்கு நீங்கள் செய்யும் கொடுமை மாதிரி, இந்திய வரலாற்றிலேயே எந்தப் பிரதமரும் செய்திருக்க மாட்டார்கள்... ஏன், உலக வரலாற்றில்கூட, எந்த சர்வாதிகாரியும் செய்திருக்க மாட்டார்கள்!

பிரதமர் மோடி அவர்களே… உங்கள் பத்தாண்டுகால ஆட்சியின் அடையாளம் என்ன? ரஃபேல் ஊழல், சி.ஏ.ஜி. ஊழல், தேர்தல் பத்திர ஊழல் இதற்கெல்லாம் பதில் எங்கே? இதற்கெல்லாம் தேர்தலுக்குப் பின், நீங்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்து, மாநில உரிமைகளைப் பேசிய மோடி, தில்லிக்குச் சென்று பிரதமரானதும், மாநிலங்களை அழிக்கத் துடியாகத் துடிக்கிறார். மாநிலங்களுக்கு என்று எந்த அதிகாரங்களும் இருக்கக் கூடாது. மொத்த அதிகாரமும் தன்னுடைய பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று சர்வாதிகாரியைப்போல் நினைக்கிறார்.

பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் எஜமானர் அல்ல! மக்கள்தான் உங்களுக்கு எஜமானர்கள்! அதை மறந்துவிடாதீர்கள்! ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்! இன்னமும் மக்களிடம் நீங்கள் வாக்கு கேட்டு வருகிறீர்கள்! நீங்கள் எப்படிப்பட்ட தோல்வி பயத்தில் இருக்கிறீர்கள் என்று, சிலிண்டர் விலையைக் குறைக்கும்போதே தெரிந்துவிட்டதே! ஆண்டுதோறும்தான், மகளிர் தினம் வருகிறது, அப்போதெல்லாம் குறைக்காதவர், தேர்தல் வருகிறது என்று இந்த வருடம் குறைக்கிறார்! சிலிண்டர் விலையை உயர்த்தியது யார்? இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்!

தேர்தல் வந்ததால் பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கிறார். பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது யார்? அதுவும், இப்போது குறைப்பதாக நாடகம் நடத்தும் அதே மோடிதான்!

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலில் இருக்கிறது! அரசு புதியதாக எதையும் அறிவிக்கக் கூடாது! ஆனாலும், நூறு நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை உயர்த்துவதாக அறிவித்திருக்கிறார்கள். மக்கள் மேல் ஏன் இந்த திடீர் கரிசனம்? பாசம்? இரக்கம்? பிரதமர் மோடி அவ்வளவு இரக்கமும் - பாசமும் உடையவர் என்றால், கிராமத்தில் வாழும் ஏழை மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கொண்டு வந்த இந்த திட்டத்தை இவ்வளவு நாள் ஏன் முடக்கி வைத்தீர்கள்? காங்கிரஸ் கொண்டு வந்தால் என்ன, ஏழை மக்களுக்குதானே பயன்படுகிறது என்று, ஒரு அடிப்படை மனிதாபிமானத்துடன் செய்தீர்களா? இல்லையே?

அப்படி என்றால், இந்த திட்டத்தை முடக்கியதற்கு காரணம், காங்கிரஸ் மேல் இருக்கும் வன்மம் மட்டுமல்ல! ஏழை மக்களை வஞ்சிக்கும், எண்ணம்தான் காரணம்! எப்படியெல்லாம் நூறு நாள் வேலைத்திட்டத்தைச் சீரழித்தார்கள்! அந்தத் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதில் முக்கியத்துவம் அளிக்கவில்லை! ஒதுக்கப்பட்டு வந்த நிதியையும், ஓரவஞ்சனையுடன் குறைத்தீர்கள்! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஆண்டுக்குச் சராசரியாக நாற்பது நாட்கள் மட்டுமே வேலை கொடுத்து, இந்தத் திட்டத்தின் நோக்கத்தையே சிதைத்து, சின்னாபின்னப்படுத்தினார்கள்.

கார்ப்பரேட்களுக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கும் மோடி அரசு, இரத்தம் சிந்தி உழைக்கும் ஏழைகளுக்கு, உதவியாக இருக்கும் திட்டத்தை சீரழித்து வேடிக்கை பார்த்தது. நம்முடைய தேர்தல் அறிக்கையில் சொன்னதைப் பார்த்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு 294 ரூபாயிலிருந்து, 319 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள்! அடேங்கப்பா, மக்கள் மேல் எவ்வளவு அக்கறை! அவ்வளவு அக்கறை இருக்கிறவர், இதையெல்லாம் தேர்தலுக்கு முன்னால் ஏன் செய்யவில்லை? ஏன் என்றால், இதெல்லாம் கண்துடைப்பு நாடகம்!

திரும்பவும் நாங்கள் உறுதியோடு சொல்கிறோம். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில், வேலைவாய்ப்பு நாட்களை, 150 நாட்களாக உயர்த்தி, ஊதியத்தையும் 400 ரூபாயாக உயர்த்துவோம்!

நேற்று ஒரு செய்தி பார்த்தேன். நம்முடைய மக்களுக்கு வெள்ள பாதிப்பின்போது, நிவாரணம் கொடுத்ததைப் பிச்சை என்று சொன்னார்களே, மாண்புமிகு அமைச்சர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்… அவர்கள் பேசிய செய்தி! இவர்கள் பிச்சை என்று சொன்னதும், நான் என்ன சொன்னேன்? மாண்புமிகு நிர்மலா சீதாராமன் அவர்களே… ஒருமுறையாவது மக்களை வந்து சந்தித்துப் பாருங்கள்… மக்கள் உங்களுக்குச் சொல்லும் பதிலில், ’பிச்சை’ என்ற சொல்லே இனி உங்கள் ஞாபகத்திற்கு வராது என்று சொன்னேன்.

ஆனால், வேட்பாளர் பட்டியலில் அவர்கள் பெயர் இல்லை! ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர் சொன்ன காரணம்தான் சூப்பர்! தேர்தலில் போட்டியிட அவரிடம் பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறார். சொல்வது யார்? சாதாரண மக்களின் பேங்க் பேலன்ஸ் குறைவாக இருந்தால் அபராதம் விதிக்கிறவர்கள் சொல்கிறார்கள்! இவரிடம் பணம் இல்லை என்றால் 12 ஆயிரம் கோடி தேர்தல் பத்திரமாக வாங்கி பா.ஜ.க. வேட்பாளர்கள் நிற்கிறார்களே? அந்தப் பணம் என்ன ஆனது? உங்களுக்குத் தர முடியாது என்று சொல்லிவிட்டார்களா? யாரைக் குற்றம்சாட்டுகிறார்?

அம்மையார் அவர்களே, தேர்தலில் போட்டியிட மக்களைச் சந்திக்க வேண்டும்! மக்களுக்காக உழைக்கத் தெரிய வேண்டும்! மக்களைப் பற்றிய உண்மையான அக்கறை இருக்க வேண்டும்! உங்களுக்கே தெரிந்துவிட்டது! தேர்தலில் நின்றால், மக்கள் உங்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று, தப்பிவிட்டீர்கள்!

தமிழ்நாட்டு மக்கள் 2019 தேர்தலைப் போன்று, இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க.வை ஒதுக்கத்தான் போகிறார்கள்! பா.ஜ.க.வுடன் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்திருப்பவர்களும், கள்ளக் கூட்டணியாகத் தமிழ்நாட்டிற்கு துரோகமிழைக்கும் பழனிசாமி கூட்டமும் தோற்கடிக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க.வையே விமர்சிக்காமல் பா.ஜ.க.வுக்கு எதிரான கூட்டணி என்று வசனம் பேசுகிறார் ’கொடநாடு புகழ்’ பழனிசாமி! பதவி சுகத்தை அனுபவிக்க, நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்களை நீட் தேர்வை எழுத வைத்தார்!

மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்தார். அதுமட்டுமல்ல, ”எந்த விவசாயி பாதிக்கப்படுகிறார், நான் விவாதம் நடத்தத் தயாராக இருக்கிறேன்” என்று உழவர்களின் துயரத்தைப் பார்த்து ஏகடியம் செய்து, பச்சைத் துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவர்தான் பழனிசாமி.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தார். அதிலும், எந்த முஸ்லிம் பாதிக்கப்படுகிறார் என்று, அட்டர்னி ஜெனரல் மாதிரி ’லா பாய்ண்ட்’ எல்லாம் பேசினார் பழனிசாமி. பா.ஜ.க. கொண்டு வரும் எல்லாவற்றையும் ஆதரித்து அவர்கள் பாதம்தாங்கியாக இருந்து, மோடி - அமித்ஷா இரட்டையருக்கு பவுசாகப் பல்லக்கு தூக்கிய, தமிழ்நாட்டு துரோகிதான் பழனிசாமி.

இப்போது புதியதாகத் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம். இதைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் சிரிக்கிறார்கள். பா.ஜ.க.விடம் இருந்து சிறுபான்மை மக்களைக் காக்கப் போகிறாராம். இதைக் கேட்டுச் சிறுபான்மை மக்களும் சிரிக்கிறார்கள். தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. - தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. – அதனுடன் சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ள பா.ம.க. என்று இந்த மக்கள் விரோதக் கூட்டத்தை தோற்கடிக்க வேண்டும்!

அதற்கு, இந்தியா கூட்டணி வேட்பாளர்கள், தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் மணி அவர்களுக்கு ”உதயசூரியன்” சின்னத்திலும், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் கோபிநாத் அவர்களுக்கு ”கை” சின்னத்திலும் உங்களது பொன்னான வாக்குகளை அளித்து வெற்றி பெற வையுங்கள்.

உங்கள் வாக்கு, இந்தியாவைக் காப்பாற்றும் வாக்காக அமையட்டும். தமிழ்நாட்டைக் காக்கும் வாக்காக அமையட்டும். ஜனநாயகத்தைக் காக்கும் வாக்காக அமையட்டும். பாசிசத்தை வீழ்த்த ஜனநாயகத்தைக் காக்க - உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன். நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

Related Stories

Related Stories