மு.க.ஸ்டாலின்

"மோடியின் வாக்குறுதிகளுக்குக் கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

ஆளுநரை எதிர்க்கக் கூட முதுகெலும்பு இல்லாமல் தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று பழனிசாமி சொல்வதற்கு வெட்கமாக இல்லையா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

"மோடியின் வாக்குறுதிகளுக்குக் கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இன்று (27-03-2024) விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயிலில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில், தென்காசி மக்களவைத் தொகுதி கழக வேட்பாளர் மருத்துவர் ராணி ஸ்ரீகுமார் அவர்களுக்கும், விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்கும் வாக்கு கேட்டு எழுச்சியுரை ஆற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

இயற்கை எழில் கொஞ்சும் திருக்குற்றால வனப்பரப்புக்கு நான் இன்றைக்கு வந்திருக்கிறேன்! தென்றல் வீசும், தென்காசிக்கும் - வீரத்தின் விளைநிலமான விருதுநகருக்கும் வந்திருக்கிறேன்!

வீரத்தின் அடையாளமான, பூலித்தேவன் மண் இது! மாவீரன் ஒண்டிவீரன் பிறந்த மண் இது! கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் பிறந்த மண் இது! இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மண்ணில், பாசிசத்தை எதிர்த்தும் - சர்வாதிகாரத்தில் இருந்து விடுபடவும், நாம் நடத்த இருக்கும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு கட்டியம்கூறும், இந்தப் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.

இந்தத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தையே, தென் மண்டல மாநாடுபோல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். திராவிட இயக்கத்தின் ஆற்றல்மிகு செயல்வீரர்கள் - மருது சகோதரர்கள் என என்னால் அன்போடு அழைக்கப்படும், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்களுக்கும் – சகோதரர் தங்கம் தென்னரசு அவர்களுக்கும் - இந்த இரண்டு தொகுதிகளையும் உள்ளடக்கிய பொறுப்பு அமைச்சர்கள், மாவட்டக் கழகங்களின் செயலாளர்களுக்கும் – நிர்வாகிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென்காசி தொகுதி வேட்பாளராகப் போட்டியிடும் ராணி ஶ்ரீகுமார் அவர்கள் மருத்துவர். அரசு மருத்துவராகப் பணியாற்றிய இவர், மக்களுக்குத் தொண்டாற்ற, தன்னுடைய அரசுப் பணியிலிருந்து விலகிவிட்டு, தேர்தல் களத்திற்கு வந்திருக்கிறார். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்கள், ஏற்கனவே உங்களுக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டவர். நாடாளுமன்றத்திலும், தொலைக்காட்சி விவாதங்களிலும் தெளிவாகத் தன்னுடைய வாதங்களை வைத்து, மக்களுக்காகக் குரல் எழுப்புபவர். எய்ம்ஸ் மருத்துவமனையை 70 விழுக்காடு கட்டி முடித்துவிட்டோம் என்று, பா.ஜ.க. தலைவர் நட்டா கூறியபோது, அந்த இடத்திற்கே சென்று கட்டாந்தரையாகத்தான் இருக்கிறது என்று பா.ஜ.க. பொய்யை அம்பலப்படுத்திய நம்முடைய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும்!

திருச்சியில் தொடங்கிய என்னுடைய பயணத்தில், இன்றோடு பத்து நாடாளுமன்றத் தொகுதியைக் கடக்கிறேன். இந்தப் பத்து தொகுதிகளிலும், நான் பயணம் செய்யும்போது, மக்களிடம் மாபெரும் எழுச்சியைப் பார்க்கிறேன்! முக்கியமாக, தாய்மார்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்க்கிறேன்!

நான் காலை நடைப்பயிற்சியில் வாக்கு சேகரிக்கும்போது அன்போடும், உரிமையோடும் என்னை வரவேற்று, ”எங்களின் வாக்கு உதயசூரியனுக்குத்தான் – இந்தியா கூட்டணிக்குத்தான்” என்று சொல்லும்போது, நாற்பதுக்கு நாற்பது நாங்கள்தான் என்ற உறுதி கிடைத்திருக்கிறது! போகும் இடங்களில் எல்லாம் – அலை அலையாய் வந்து ஆதரவு தெரிவிக்கும் மக்கள்தான், நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளுக்கான அடையாளம்!

சாதனைகள் என்றால் எப்படிப்பட்ட சாதனைகள்? தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் ஏதாவது ஒரு திட்டத்தால் நிச்சயமாக நேரடியாகப் பயன்பெறும் மாதிரியான திட்டங்களாக நம்முடைய திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்! ஒரு குழந்தை பிறந்து, வளர்ந்து, படித்து, வேலைக்குச் செல்லும் வரைக்கும், ஒரு தாயைப்போல் பாதுகாக்கும் – தந்தையைப்போல் அரவணைக்கும் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், பெருந்தலைவர் காமராசர் அடியொற்றியும், திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு சம்பவம் சொல்லுவார்கள், பெருந்தலைவர் காமராசர் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைச் சந்தித்தாராம். “இன்றைக்குப் பள்ளிக்கு செல்லவில்லையா? என்று கேட்டிருக்கிறார். குடும்பத்தில் உணவுக்கே வழியில்லாததால் எங்கள் அப்பா - அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை என்று அந்தச் சிறுவர்கள் சொல்லவும், பள்ளியில் மதிய உணவு அளித்தால் அதற்காகவாவது குழந்தைகளைப் படிக்க அனுப்புவார்கள்” என்று சிந்தித்த பெருந்தலைவர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார்.

நான் முதலமைச்சர் பொறுப்பேற்றவுடன், சென்னையில் ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்குக் காலையில் சென்றிருந்தேன். ஒரு குழந்தையைப் பார்த்து, “என்னம்மா சாப்பிட்டீர்களா” என்று கேட்டேன். அந்தக் குழந்தை எதார்த்தமாக, ”வீட்டில் அப்பா – அம்மா வேலைக்குச் செல்கிறார்கள்… காலையில் டிபன் செய்ய மாட்டார்கள். அதனால் சாப்பிடவில்லை” என்று கூறியது முதல், எனக்கு மனதே சரியில்லை! அதிகாரிகளை அழைத்தேன். பள்ளிக் குழந்தைகளுக்குக் காலை உணவு திட்டம் கொண்டு வர வேண்டும், திட்டத்தைத் தயார் செய்யுங்கள் – என்று கூறினேன்.

அதிகாரிகள் என்னிடம் மிகவும் பணிவாக, ”சார், நம்முடைய நிதிநிலை மோசமாக இருக்கிறது. அது மட்டுமல்ல, இது நம்முடைய தேர்தல் அறிக்கையில்கூட கூறவில்லை - என்று கூறினார்கள்” உடனே பதில் கூறினேன். வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன? நம்முடைய எதிர்கால தலைமுறையான குழந்தைகளைக் காலையில் நன்றாகச் சாப்பிட்டு, நல்ல உடல் நலத்துடன் இருந்தால்தான் அவர்கள் படிப்பது மனதில் பதியும், இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதிநிலை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்கள் கோப்பினைத் தயார் செய்யுங்கள்” என்று உத்தரவிட்டேன்.

வரலாறும் - மக்களான நீங்களும் இந்த ஸ்டாலினுக்குக் கொடுத்த வாய்ப்பால், இன்றைக்கு, தமிழ்நாடு முழுவதும் 16 இலட்சம் குழந்தைகள் வயிறார உண்ணும் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

அதுமட்டுமா, இன்றைக்கு தினத்தந்தி நாளேடு தலையங்கம் தீட்டி இருக்கிறது! “முதலமைச்சர் பெருமை கொள்ளும் பெண்கள் நலத்திட்டங்கள்” என்று அதில் முத்தான மூன்று திட்டங்கள் என்று அவர்கள் பட்டியலிட்டது என்னென்ன திட்டங்கள் தெரியுமா?

முதலில், தாய்வீட்டுச் சீர்போல் எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதா மாதம் 1000 ரூபாய் கொடுக்கிறார் என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 இலட்சம் சகோதரிகள் உரிமையுடன் கூறும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்!இரண்டாவதாக, ’ஸ்டாலின் சார் பஸ்ல இலவசமாகப் போறோம்’ என்று இதுவரை 445 கோடி முறை மகளிர் பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டம்! மூன்றாவதாக, அரசுப் பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த எனக்கு, அப்பா மாதிரி ஸ்டாலின் அய்யா ஆயிரம் ரூபாய் தருகிறார் என்று கூறும் புதுமைப் பெண் திட்டம்!

இந்த மூன்று மட்டுமல்ல; சமீபத்தில் தொடங்கிய, நான்காவது திட்டம் ஒன்றும் இருக்கிறது! அப்பா – அம்மா, குடும்பத்தைப் பிரிந்து, படிப்பிற்காகவும், வேலைக்காகவும் வெளியூரில் தங்கியிருக்கும் என்னுடைய மகள்களுக்காக நான் ஏற்படுத்தியிருக்கும் ’தோழி விடுதி’ திட்டம்!

இவையெல்லாம் பெண்களுக்காக மட்டுமே நம்முடைய அரசு செய்யும் திட்டங்கள்! இன்னும் சிறப்புத் திட்டங்கள் இருக்கிறது. “இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வில் முதலமைச்சர், நீங்கள் நலமா“ என்று ஏராளமான முன்னோடித் திட்டங்களை உருவாக்கி, அதன் மூலமாகக் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொற்கால ஆட்சியை நாம் நடத்திக் கொண்டு வருகிறோம்.

இப்படிப்பட்ட சாதனைத் திட்டங்களை தரும் முதலமைச்சராக – உங்கள் குடும்பங்களில் ஒருவனாக, உரிமையுடன் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இந்தப் பகுதிக்கு வந்தபோது, சீர்மரபின மக்கள் என்னிடம் ஒரு முக்கிய கோரிக்கையை வைத்தார்கள். சீர்மரபினர் வகுப்பினர்களுக்கு DNC மற்றும் DNT - என்று இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வந்தது. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்று என்னிடம் கூறினார்கள். 'இந்தக் குழப்பத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம்' என்று நான் வாக்குறுதி கொடுத்தேன். அந்த இரட்டைச் சான்றிதழ் குழப்பத்திற்குக் கூறியபடியே முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். இனி ஒற்றைச் சான்றிதழ் பெற்றால்போதும் என்று உத்தரவிட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது!

சொன்னதைச் செய்துவிட்டுத்தான் உங்கள் முன்னால் வந்து தெம்போடு துணிவோடு நிற்கிறேன். ஒன்றிய - மாநில அரசுகளின் அனைத்துச் சலுகைகளையும் பெறுவதற்கு, இந்த ஒற்றைச் சான்றிதழ் வழிவகுக்கும்.

அதுமட்டுமல்ல, பிறபடுத்தப்பட்டோர் சமுதாய மக்களின் நலனுக்காக – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக - ஆதிதிராவிட சமுதாய மக்கள் நலனுக்காக – சமூக – கல்வி முன்னேற்றத்துக்காகப் - பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்தது மட்டுமல்ல, செய்யும் அரசும் நாங்கள்தான்! செய்ய இருக்கும் அரசும் நம்முடைய திராவிட மாடல் அரசுதான்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையே சமூகநீதிதான். திராவிட இயக்கம் உருவானதே அனைத்துச் சமூகங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றுதான். இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கல்வி, வேலைவாய்ப்புகளைப் பெற்று, முன்னேறி இருக்கிறார்கள் என்றால், 100 ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமைச் சட்டம்தான் காரணம்! இதை அடுத்தடுத்து வந்த கட்சிகளும் அமல்படுத்தினார்கள்.

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் ஆட்சி, சமூகநீதியை நிலைநாட்டும் ஆட்சியாக இருந்தது. சமூகநீதிக்கு ஆபத்து வந்தபோது, தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் போராட்டம் நடத்தினார்கள். இதை, அன்றைய பிரதமர் நேரு அவர்களுக்கு எடுத்துக் கூறி, முதல் அரசியல் சட்டத் திருத்தம் உருவாகக் காரணமாக இருந்தவர் பெருந்தலைவர் காமராசர். சட்டமாக உருவாக்கிக் கொடுத்தவர் புரட்சியாளர் அம்பேத்கர். இப்படி பெருந்தலைவர்களால் உருவாக்கப்பட்ட இடஒதுக்கீடு - சமூகநீதிக்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும் கட்சிதான் பா.ஜ.க.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து என்ன செய்கிறார்கள்? ஒன்றிய அரசு பணிகளில் மண்டல் பரிந்துரை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது இல்லை! ஒன்றிய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் வழங்குவது இல்லை!

நாம் கூறும் இதை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் பேசும்போது புள்ளிவிவரத்துடன் கூறினார்! ஒன்றிய அரசின் மிக உயர் பொறுப்பில் இருக்கும், அதாவது நம் நாட்டையே நிர்வகிக்கும் 90 செயலாளர்களில் வெறும் 3 பேர்தான், பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்! பட்டியல் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் குறைவுதான்.

இது நாட்டிலேயே பெரும்பான்மையாக இருக்கும் பிற்படுத்தப்பட்ட - பட்டியலின சமூக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்கள் படிப்பதை – பெரிய பொறுப்புகளுக்குச் செல்வதை - காலம் காலமாகத் தடுத்த இவர்கள் – இப்போதும் தங்கள் கையில் ஆட்சியை வைத்திருப்பதால் தடுக்கிறார்கள். அதுக்கு என்னென்ன புதிய சட்டங்கள் வருகிறது?

குலக்கல்வியை ஊக்குவிக்கும் புதிய கல்விக் கொள்கை! ஏழை – நடுத்தர மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் நீட் தேர்வு! ஒன்றிய பணிக்கான தேர்வுகளில் தமிழைப் புறக்கணித்து, இந்தித் திணிப்பு - சமஸ்கிருதத் திணிப்பு செய்து, நம்முடைய பிள்ளைகளின் வேலைகளைப் பறிக்கிறார்கள்! பொருளாதார அடிப்படையில், இடஒதுக்கீடு என்று ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் மேலும் ஒடுக்கப் பார்க்கிறார்கள்.

இப்படி அநியாயமாக நம்முடைய உரிமைகளை பறிக்கும் கூட்டம்தான் பா.ஜ.க.! அதனால் தான் கூறுகிறோம். பட்டியலினத்தவர் – பழங்குடியினர் – பிற்படுத்தப்பட்டோர் – மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முன்னேறுவதை பா.ஜ.க. எந்தக் காலத்திலும் ஏற்றுக் கொள்ளாது. இதனால்தான் ஒன்றிய அளவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்த வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து கேட்கிறோம், போராடுகிறோம். அதையாவது செய்கிறார்களா? அதையும் மறுக்கிறார்கள்! இதனால்தான் கூறுகிறோம், நாட்டின் சிறுபான்மையினருக்கும் மட்டுமல்ல, பெரும்பான்மை மக்களுக்கும் எதிரி பா.ஜ.க.தான் என்று மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறேன்!

இதுமட்டுமா, வரலாறு காணாத ஊழல்களைச் செய்துவிட்டு, அதை மூடி மறைக்க E.D. – I.T. – C.B.I. போன்ற அமைப்புகளைக் கூட்டணியாகச் சேர்த்துக் கொண்டார்கள். இப்போது பா.ஜ.க.வை ஆட்டம் காண வைக்கும் ’இமாலய ஊழலான’ தேர்தல் பத்திர ஊழல் வெளியாகி இருக்கிறது.

இன்றைக்குக் காலையில் செய்திகள் வந்ததே! ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் திரு. பரகலா பிரபாகர் அவர்கள் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில், இந்தத் தேர்தல் பத்திர ஊழல் என்பது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் என்று கூறியுள்ளார். ஏற்கனவே அவர், பா.ஜ.க. ஆட்சி நம்முடைய நாட்டை எப்படியெல்லாம் சீரழித்திருக்கிறார் என்று - ”புதிய இந்தியா எனும் கோணல் மரம்” என்ற புத்தகத்தில் கவலையுடன் எழுதியிருக்கிறார். ”புதிய இந்தியா பிறந்துவிட்டது” என்று பா.ஜ.க. கட்டமைக்கும் பிம்பம் எப்படி மோசமானது என்று நாளுக்கு நாள் அம்பலமாகிக் கொண்டிருக்கிறது.

நாட்டின் தன்னாட்சி அமைப்புகளைக்கூட, பா.ஜ.க.வின் ஆதரவு கட்சிகள்போல் செயல்பட வைத்து, அரசியல் சட்டப்படிதான் ஆட்சி நடக்கின்றதா என்ற சந்தேகத்தை பா.ஜ.க. ஆட்சி உருவாக்கிவிட்டார்கள்.

இது பற்றி, நேற்று ஆங்கில இந்து நாளேடு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது… அதில், ”E.D. – I.T. ரெய்டுகள் நடந்த நிறுவனங்கள் வாங்கிய, பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை, ஆளும் பா.ஜ.க. பணமாக்கியிருக்கிறது” என்று எழுதியிருக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியால் இந்திய நாட்டு மக்களுக்கு நடந்த நன்மை என்று ஒன்றாவது இருக்கிறதா?சமூகநீதியை – சகோதரத்துவத்தை – சமதர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் இந்தியா கூட்டணி ஆட்சி இந்தியாவில் உருவாகியே ஆக வேண்டும்.

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்திற்கும், தமிழுக்கும் துரோகம் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், வாக்கு கேட்டு மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார். பிரதமர் ஆவதற்கு முன்னால் தமிழ்நாட்டிற்கு வாக்கு கேட்டு வந்தபோது பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தாரே? அதில் எதையாவது செய்தாரா? இல்லையே!

2014-ஆம் ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி இராமநாதபுரத்தில் பேசிய மோடி, “சீனாவில் இருந்து பட்டாசுகள் வருவதால் குட்டி ஜப்பானான சிவகாசி பட்டாசுத் தொழில் நலிவடைந்திருக்கிறது. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால், பட்டாசுத் தொழிற்சாலைகளையும், தொழிலாளர்களையும் பாதுகாப்போம்" என்று பேசினாரே! இதற்காக அவர் செயல்படுத்திக் கொடுத்த திட்டங்கள் என்ன? சட்டவிரோதமாகச் சீனப்பட்டாசுகள் இன்னும் இறக்குமதி செய்யப்படுகிறது! சீனப்பட்டாசுகள் பல்வேறு மாநிலங்களில் குறைந்த விலையில் கிடைத்தது. டெல்லியிலும் - மும்பையிலும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சீனப்பட்டாசுகள் கைப்பற்றப்பட்டது. சீனப் பட்டாசுகளை பா.ஜ.க. அரசால் முழுமையாக தடுக்க முடியவில்லை. இதனால், சிவகாசியில் 1000 கோடி ரூபாய் அளவுக்குப் பட்டாசு தயாரிப்பு சரிவைச் சந்தித்தது. இப்படி தொழில் நலிவடைந்து இருந்தபோது, ஒன்றிய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி வரி விதிப்பில் ஆடம்பரப் பொருள்கள் பட்டியலில் பட்டாசையும் சேர்த்து 28 விழுக்காடு வரி போட்ட கட்சிதான் பா.ஜ.க.!

12 விழுக்காடாகக் குறைக்க வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்களே தொடர் போராட்டம் நடத்தினார்கள். பட்டாசு வெடிபொருள் தயாரிப்பு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடந்தபோது ஒன்றிய அரசு முறையாக வாதங்களை வைக்கவில்லை. பசுமைப் பட்டாசுகளைத் தயார் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பசுமைப் பட்டாசு என்றால் என்ன என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு வரையறை செய்யவே இல்லை.

பசுமைப் பட்டாசு தயாரிப்பதற்கு ஆலைகள் காத்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க. அரசு எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனாவிற்குப் பிறகு பட்டாசுத் தொழில் சரிந்தது. அதை மீட்டெடுக்க எந்த முயற்சியையும் பா.ஜ.க. அரசு செய்யவில்லை. இப்படி பத்தாண்டுகளாகப் பட்டாசுத் தொழிலை நாசம் செய்த அரசுதான் பா.ஜ.க. அரசு. இப்படி மக்களை பாதிக்கும் எல்லாவற்றிலும் அலட்சியமாகவும் - ஆணவமாகவும் இருக்கும் கட்சிதான் பா.ஜ.க.

பத்தாண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த பா.ஜ.க. அரசானது, நாட்டையே படுகுழியில் தள்ளிவிட்டது. நாட்டை உடனடியாக மீட்டாக வேண்டும்! அப்படி மீட்பதற்கான மிகப்பெரிய வாய்ப்புதான் இந்தத் தேர்தல்! அதனால்தான் இந்தியா முழுமைக்குமான ஜனநாயக சக்திகள் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கிறோம்! இந்தியா கூட்டணியை பார்த்து பயந்து, பிரதமர் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்கிறார்.

தேர்தல் வந்துவிட்டால், கூடவே மக்கள் மேல் அவருக்கு கரிசனமும் பொங்கி வரும். திடீரென்று விலையெல்லாம் குறைப்பார். இப்போதுகூட சிலிண்டர் விலையை - பெட்ரோல் விலையை - டீசல் விலையைக் குறைத்திருக்கிறார். விலையை ஏற்றியது யார்? மாண்புமிகு மோடி அவர்கள் பிரதமரான நாள் முதல் விலை ஏறிக்கொண்டே இருந்தது. ஆனால், விலையேற்றத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாததுபோல் இருப்பார்… தேர்தல் நேரம் வந்துவிட்டால் மட்டும் விலையைக் குறைக்கும் பவர் வந்துவிடும்!

சமீபத்தில், மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினம் என்று உடனடியாக சிலிண்டர் விலையைக் குறைத்தார். வருடா வருடம்தான் மகளிர் தினம் வருகிறது! அப்போதெல்லாம் இதுபோன்று குறைத்தாரா? இல்லையே! அப்போதெல்லாம் இந்திய நாட்டு மகளிரும் - இந்தியக் குடும்பங்களும் படும் கஷ்டம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இப்போது தேர்தல் வந்ததும் குறைக்கிறார்… என்னவொரு கருணை உள்ளம் அவருக்கு! தேர்தலுக்குத் தேர்தல் மட்டும் கருணை சுரக்கும் வித்தியாசமான உள்ளம்!

மோடி பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு, 2013-க்கு முன்னால், சிலிண்டர் விலை எவ்வளவு? 410 ரூபாய்! பத்து ஆண்டுகள் கழித்து, 2023-இல் சிலிண்டர் விலை எவ்வளவு? 1103 ரூபாய்! ஐந்து மாநில தேர்தல் வந்துவந்தது! கூடவே மோடிக்கு இரக்கமும் வந்தது! சிலிண்டர் விலை குறைந்தது! இப்போது நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது, அதனால் 100 ரூபாய் குறைத்திருக்கிறார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் விலை குறைப்பு செய்வது ’பச்சோந்தி அரசியல்’ இல்லையா? 410 ரூபாய் இருந்த சிலிண்டரை ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்த்தியதுதான் உங்களின் சாதனை! தேர்தல் வந்ததால் சிலிண்டர் விலையை மட்டுமல்ல, பெட்ரோல் - டீசல் விலையையும் குறைக்கிறார். விலைக்குறைப்பு என்பது மக்களை ஏமாற்ற பிரதமர் மோடி நடத்தும் நாடகம்! அவரது நாடகங்களை மக்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள்…

இப்படிப்பட்ட பிரமதமர் மோடியை நீங்கள் நம்புகிறீர்களா? மக்கள் யாருமே அவரை நம்பவில்லை! உடனே மக்களை நம்ப வைக்க இப்போது புதிய விளம்பரம் ஒன்று செய்கிறார்! என்ன தெரியுமா? தாய்மார்கள் இங்கு நிறைய பேர் வந்திருக்கிறீர்கள், ஒரு மிக்சி விளம்பரம் வருமே நினைவு இருக்கிறதா? “ப்ரீத்திக்கு நான் கேரண்டி” என்று ஒரு விளம்பரம்! அந்த மாதிரி இவர், “இது மோடியின் கேரண்டி” என்ற புதிய விளம்பரத்துடன் வந்திருக்கிறார். உண்மையில அவரின் வாக்குறுதிகளுக்கு, கேரண்டியும் இல்லை! வாரண்டியும் இல்லை! பிரதமராக நாட்டு மக்களுக்கு நல்லது செய்யச் சொன்னால், பத்தாண்டுகளாகச் சொன்ன எதையுமே செய்யாமல், சேல்ஸ்மேன் மாதிரி கேரண்டி என்று விளம்பரம் செய்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? அவரின் கேரண்டிகளின் லட்சணம் என்ன?

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அனைவரின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் போடலாம் என்று சொன்னாரே? 15 இலட்சம் இல்லை, 15 ஆயிரமாவது மக்களுக்கு கொடுத்தாரா? 15 ரூபாயாவது கொடுத்தாரா? அதுமாதிரியான கேரண்டியா?

இல்லை, ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்று சொன்னாரே, என்ன ஆனது? உலகத் தொழிலாளர் அமைப்பு நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது… இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டத்தால் 83 விழுக்காடு இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது. இதுதான் மோடி சொல்லும், கேரண்டியின் லட்சணம்! புதிது புதிதாக வாக்குறுதி கொடுத்தால், நிறைவேற்றாத பழைய வாக்குறுதியெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்று பிரதமர் மோடி தப்புக் கணக்கு போடுகிறார்.

பிரதமர் மோடி அவர்களே… தேர்தலுக்குத் தேர்தல் நீங்கள் வெறும் வாயால் வடை சுடுவீர்கள் என்று மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது. தமிழ்நாட்டிற்கு ஒன்றுமே செய்யாமல், பத்து ஆண்டில் ஒரு சிறப்புத் திட்டத்தைக்கூட நிறைவேற்றாமல், அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையைக்கூட கட்டத் தொடங்காமல், பேரிடர் நேரத்தில் நிதி தராமல், ஒரு இரங்கல்கூட சொல்லாமல், இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் இங்கு அடிக்கடி வாக்கு கேட்டால், உங்களுக்கு ஆதரவு தர நாங்கள் ஏமாளிகளா? நாங்கள் என்ன சோற்றால் அடித்த பிண்டங்களா? என்று மக்கள் கேட்கிறார்கள்! பதில் சொல்லுங்கள் பிரதமர் அவர்களே!

இவர் இப்படி, வெறும் கையால் முழம் போடுகிறார் என்றால், மற்றொருவர் இருக்கிறார் பழனிசாமி! காற்றிலேயே கம்பு சுற்றுபவர் அவர்! நடப்பது நாடாளுமன்றத் தேர்தல்! பத்தாண்டுகளாக மக்கள் விரோத கொள்கைகளால், நாட்டை படுகுழியில் தள்ளியது ஒன்றிய பா.ஜ.க. அரசு! மண்புழு மாதிரி ஊர்ந்து பதவிக்கு வந்து, பதவி சுகத்திற்காகப் பச்சோந்தியாக மாறி, பா.ஜ.க.வுக்குப் பார்ட்னராக இருந்து, தமிழ்நாட்டு உரிமைகளை அடகு வைத்த பழனிசாமி, கூட்டணியிலிருந்து வெளியே வந்துவிட்டோம் என்று கபட நடகம் நடத்துகிறாரே… எங்கேயாவது, பா.ஜ.க.வையோ, மோடியையோ விமர்சித்து ஒரு வார்த்தை பேசுகிறாரா? பிரதமர் பற்றி மட்டுமல்ல; ஆளுநரைப் பற்றிகூட பேசுவதில்லை! இதை நாங்கள் கேட்ட உடனே இப்போது சொல்கிறார்!

"மோடியின் வாக்குறுதிகளுக்குக் கேரண்டியும் இல்லை வாரண்டியும் இல்லை" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

“ஆளுநரால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிறகு ஏன் நாங்கள் அவரைப் பற்றி பேச வேண்டும்?” என்று அறிவுக்கொழுந்து மாதிரி கேள்வி கேட்டிருக்கிறார். ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சித் தலைவர் பேசும் பேச்சா இது? ஆளுநரால் இந்தத் தனிப்பட்ட ஸ்டாலினுக்கோ – தி.மு.க.விற்கோ எந்தப் பிரச்சினையும் இல்லை. அவருக்கும் - எங்களுக்கும் என்ன வாய்க்கால் வரப்பு தகராறா? இல்லை, பாகப்பிரிவினை, பங்காளி சொத்து பிரச்சினையா? தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதைத் தடுக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களுக்கும் - சட்டமுன்வடிவுகளுக்கும் அனுமதி அளிக்க மறுக்கிறார். இதுதான் எங்களுக்கும் அவருக்குமான பிரச்சினை!

மக்களால் தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டங்களுக்கு அனுமதி தராமல் ஆளுநர் இழுத்தடிப்பது, தமிழ்நாடு சட்டமன்றத்தை இழிவுபடுத்துவது இல்லையா? முதலமைச்சரான எனக்கு எப்படி கோபம் வருகிறதோ, அதே கோபம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் பழனிசாமிக்கு வர வேண்டாமா? ஆளுநர் இப்படி இழுத்தடிப்பது தவறு என்று ஆளுநரைக் கேட்டிருக்க வேண்டாமா? அப்படி கேட்க மறுக்கிறார் என்றால், ஒன்று ஆளுநரைப் பார்த்து பயப்படுகிறார் என்று அர்த்தம்! இல்லை, பழனிசாமிக்குச் சொரணை இல்லை என்று அர்த்தம்!

நாங்கள் கேட்பது, பழனிசாமி அவர்களே! ஆளுநருக்கும் - உங்களுக்கும் பிரச்சினை இருந்தால் மட்டும்… வீரமாக அவரை எதிர்த்துப் பேசிவிடுவீர்களா? அ.தி.மு.க. ஆட்சியில் ஆளுநராக இருந்தாரே பன்வாரிலால் புரோகித், அவர் ஏதோ மக்கள் பிரதிநிதி போல ஆய்வு செய்யச் சென்றார். அப்போதுகூட அவருக்குப் பயந்து அமைதியாகக் கண்டுகொள்ளாமல் இருந்தவர்தான் நீங்கள். அப்போதுகூட, நாங்கள்தான் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டினோம். ஆட்சியில் இருப்பது மண்புழுவாக ஊர்ந்த பழனிசாமிதானே, நமக்கு என்ன? அப்படியென்று நாங்கள் இல்லை.

ஆளுநரின் நடவடிக்கை என்பது, மக்களாட்சி தத்துவத்திற்கு விரோதமாக இருந்தால், எப்போதும் எந்தச் சூழலிலும் எதிர்க்கிறவர்கள் நாங்கள். ஆளும்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஒரே கொள்கைதான்! அப்படிதான் தலைவர் கலைஞர் எங்களை வழிநடத்தி இருக்கிறார். தமிழ்நாட்டு ஆளுநராக இருந்தாலும் - கேரள ஆளுநராக இருந்தாலும் - மக்கள் பிரதிநிதிகளை மதிக்கவில்லை என்றால் கண்டிப்போம். பாதம்தாங்கி பழனிசாமி அவர்களே… உங்களை மாதிரியே எல்லாரும் சொரணை இல்லாமல் இருக்கவேண்டும் என்று நினைக்காதீர்கள்.

அடிப்படை அறிவியல் ஒன்றைச் சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்… மனிதன் நிமிர்ந்து நடக்கக் காரணமே முதுகெலும்புதான்! பொழுது விடிந்ததுமே தமிழ்நாட்டிற்கு எதிராக - தமிழர்களுக்கு எதிராக - தமிழ்ப் பண்பாட்டிற்கு எதிராக என்ன கருத்து சொல்லலாம் என்று எழுந்திருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியைக்கூட எதிர்க்க முதுகெலும்பு இல்லாத பழனிசாமி அவர்களே… தமிழ்நாட்டை மீட்கப் புறப்படுகிறேன் என்று சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் - 2019 நாடாளுமன்றத் தேர்தல் - 2019-இல் நடந்த 21 சட்டமன்றத் தொகுதிகளின் இடைத்தேர்தல் – 2019-இல் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2021 சட்டமன்றத் தேர்தல் - 2021-இல் நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் - 2022-இல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என்று 8 தேர்தல்களிலும் அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. எடப்பாடி பழனிசாமி வசம் அ.தி.மு.க. வந்த பிறகு தொடர்ச்சியாகத் தேர்தல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது அ.தி.மு.க.

இதற்கெல்லாம் காரணம் பா.ஜ.க.வுக்கு அடிமை சேவகம் செய்து, தமிழ்நாட்டு உரிமைகளை மொத்தமாக தாரைவார்த்து துரோகம் செய்ததுதான்! இப்படி துரோகங்கள் பல செய்தவர்தான் தமிழ்நாட்டை மீட்கப் போகிறாராம்? பழனிசாமி அவர்களே… முதலில், பா.ஜ.க.விடம் இருந்து அ.தி.மு.க.வை மீட்கப் பாருங்கள்.

பா.ஜ.க. தனியாக வந்தாலும் சரி - பழனிசாமி நாடகக் கம்பெனி மூலமாக வந்தாலும் சரி – அவர்களை வீழ்த்தியாக வேண்டிய கடமை தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கிறது.

நம்முடைய இந்தியா கூட்டணி, ஒன்றிய அரசாக வந்ததும் தமிழ்நாட்டிற்குச் செய்ய இருக்கும் நன்மைகளை, திட்டங்களாக -வாக்குறுதிகளாகத் தேர்தல் அறிக்கையில் வழங்கியிருக்கிறோம்… சாதனைகளாக மாறப்போகும் அந்த வாக்குறுதிகளில் சிலவற்றை மட்டும் தலைப்புச் செய்திகளாகச் சொல்ல விரும்புகிறேன்…

பத்தாண்டுகளாக சாமானிய மக்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள் என்று சிறிதும் நினைத்துப் பார்க்காமல், மக்கள் விரோத பா.ஜ.க. அரசால் தொடர்ந்து உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல், கேஸ் விலை குறைக்கப்படும்!

சிறுபான்மையின மக்களுக்கு எதிரான சட்டங்கள் ரத்து செய்யப்படும்! தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகள் முற்றிலுமாக அகற்றப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் வேலை நாட்கள் 100-இல் இருந்து, 150 நாட்களாவும், ஊதியம் 400 ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகள் கூட்டுறவு அமைப்புகளிலும், வங்கிகளிலும் வாங்கியிருக்கும் கடனும் – வட்டியும் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லாதபோது விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும். ராபர்ட் கால்டுவெல் மொழி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும்.

திருநெல்வேலி, சங்கரன்கோவில் இரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஆலங்குளம், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக சங்கரன்கோவிலை இணைக்கும் புதிய இரயில் பாதை அமைக்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.கேரளா, கோவை மற்றும் சென்னை செல்லும் இரயில்கள் கடையம் இரயில் நிலையத்தில் நின்று செல்ல வழிவகை செய்யப்படும். காரியாப்பட்டி இரயில் நிலையம் அமைக்கப்படும்.

எல்லாவற்றிற்கும் மேல், இந்தப் பகுதியில் இருக்கும் சிவகாசி பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்கச் சீனப் பட்டாசு இறக்குமதி தடை செய்யப்படும். தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. - தமிழ்நாட்டைப் பாழ்படுத்திய அ.தி.மு.க. இரண்டையும் ஒரு சேர வீழ்த்துங்கள்.

தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் ராணி ஶ்ரீகுமார் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும் - விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி வெற்றி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அவர்களுக்குக் கை சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

நீங்கள் அளிக்கும் வாக்குதான் இந்தியாவைக் காப்பாற்றும்! தமிழ்நாட்டைக் காப்பாற்றும்! எதிர்காலத் தலைமுறையைக் காப்பாற்றும்! பாசிசத்தை வீழ்த்த – இந்தியாவைக் காக்க – உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன்… நாற்பதும் நமதே! நாடும் நமதே! நாற்பதும் நமதே! நாடும் நமதே!

Related Stories

Related Stories