மு.க.ஸ்டாலின்

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே இனம்-ஒரே கலாச்சாரம்-ஒரே பண்பாடு -ஒற்றைத் தன்மை-ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு  இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (25.12.2022) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆ. கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை:

எனது அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரிய என்று சொல்வது மட்டுமல்ல, தலைவர் கலைஞருடைய அன்புக்கும் பாராட்டுதலுக்கும் உரியவராக போற்றப்படக்கூடிய கோபண்ணா அவர்களின் அயராத உழைப்பின் காரணமாக உருவான 'மாமனிதர் நேரு' என்ற நூலினை வெளியிடக்கூடிய வாய்ப்பைப் பெற்றமைக்கு நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். அதற்காக நன்றி கூற விரும்புகிறேன்.

இதனை நூல் என்று சொல்வதை விட வரலாற்றின் கருவூலம் என்றுதான் சொல்லவேண்டும், அதுதான் பொருத்தமாக இருக்கும் என நான் நினைக்கிறேன். இது ஜவஹர்லால் நேரு அவர்களின் வரலாறு மட்டுமல்ல-காங்கிரஸ் கட்சியின் வரலாறு மட்டுமல்ல-இந்தியாவின் வரலாறாகவும் அமைந்திருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், கடந்த கால இந்திய வரலாறாக மட்டுமல்ல-எதிர்கால இந்தியாவானது எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான கையேடாகவும் இது அமைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவும் எத்தகைய உன்னதமான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்திருக்கிறது. அந்த அடிப்படையில் காலத்துக்குத் தேவையான கருவூலத்தை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய கோபண்ணா அவர்களை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

காங்கிரஸ் கட்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவராக நம்முடைய கோபண்ணா அவர்கள் இருந்தாலும்-உங்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவுக்கு உரிமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அவருக்கும் உண்டு.

கூட்டணியில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும், தலைவர் கலைஞரோடும், என்னோடும் திராவிட முன்னேற்றக் கழகத்தோடும், நெருக்கமான நட்பை பேணக்கூடியவராக கோபண்ணா அவர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆதாயத்துக்காக அல்ல, தனிப்பட்ட முறையில் அவர் எப்போதும் நட்பை பேணக்கூடியவர்.

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு  இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கொள்கையை கடந்த நட்புக்கு இலக்கணமாக விளங்கிக் கொண்டிருக்கிறார். தேசிய இயக்கத்தினுடைய அமைப்பிலே, பொறுப்பிலே இருந்தாலும், திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையின் மேல் மாறாத பற்றுக் கொண்டவர் நம்முடைய கோபண்ணா அவர்கள். எந்த சூழலிலும் தேசியக் கொள்கையையும் - திராவிடக் கொள்கையையும் இணைத்து செயல்படக் கூடியவராக கோபண்ணா அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார். தேர்தல் நேரங்களில் இந்தக் கூட்டணியை உருவாக்குவதற்கு தன்னை ஒப்படைத்துக் கொள்ளக்கூடியவர்.

கூட்டணிக்குள் அதிகப்படியான நட்பும், நெருக்கவும் ஏற்படவும் அவர் எப்போதும் ஆர்வம் காட்டக் கூடியவர். அந்த நட்பின் அடையாளமாகத்தான் அவருக்கு நன்றி தெரிவிக்க இந்த மேடையை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்.

மாமனிதர் நேரு வரலாறு - என்று தலைப்பிடாமல் மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு என்று இதற்கு கோபண்ணா அவர்கள் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள். நம்முடைய மதிப்பிற்குரிய சிதம்பரம் அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள். இதைப் படிப்பதை விட பார்த்தாலே போதும் என்று தெளிவாக குறிப்பிட்டார்கள். ஆக, அனைவரும் வாங்குவதற்கான ஆர்வத்தை இந்த தலைப்பு தூண்டி இருக்கிறது. புகைப்படங்களோடு சேர்ந்த வரலாறாக இருந்தால்தான் பரவலாக அனைவரையும் ஈர்க்கும் என்று நினைத்து இதனை நம்முடைய கோபண்ணா அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.

2006 முதல் 2016 வரையிலான ஆண்டுகளில் முன்னாள் பிரதமர் நேரு அவர்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் திரட்டி - ஆங்கிலத்தில் இந்த நூலை 2018 ஆம் ஆண்டு கோபண்ணா அவர்கள் வெளியிட்டார்கள். அந்த நூல் தான் இப்போது தமிழில் வெளியாகி இருக்கிறது.

இந்த புத்தகத்தைத் திருப்பும் போது - கோபண்ணாவின் உழைப்பு நன்றாகவே தெரிகிறது. மிக நீண்ட நெடிய அரசியல் வரலாறும் - ஆட்சிக் காலமும் கொண்ட ஜவஹர்லால் நேரு அவர்களுடைய முழுப்பரிமாணமும் தெரியக்கூடிய வகையில் பல புகைப்படங்களை இதில் அவர்கள் சேர்த்திருக்கிறார்கள்.

டெல்லி சாஸ்திரி பவனிலும், டெல்லி தீன்மூர்த்தி பவனிலும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான புகைப்படங்களில் இருந்து தேடி - எடுத்து – இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், விலை கொடுத்து வாங்கி இந்த புத்தகத்தில் சேர்த்திருக்கிறார். அதுதான் இந்த புத்தகத்தின் மிகப்பெரிய சிறப்பாக அமைந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் நேரு அவர்கள் இந்திய தேசத்துக்கு ஆற்றிய பணிகளுக்கு நாம் செலுத்தும் நன்றியின் அடையாளமாக அனைவரது இல்லங்களில் இந்த புத்தகம் கட்டாயம் இருந்தாக வேண்டும்.

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு  இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

அவரே பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார், வெளியிடுவதற்கு முன்னதாகவே முன்வெளியீட்டுத் திட்டத்தின் மூலமாக பலரும் இதனை பதிவு செய்திருப்பது குறித்து கேள்விப்பட்ட போது உங்களோடு சேர்ந்து அவர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தாரோ, நானும் அந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன். ஏற்கனவே நம்முடைய கோபண்ணா அவர்கள் பெருந்தலைவர் காமராசர் அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி ஒரு அரிய வரலாற்றுக் கருவூலத்தை அவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். அதனை 2003 ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார்கள். காமராசரைப் பற்றிய கருவூலம் என்று கலைஞர் அவர்கள் அப்போதே அவரை பாராட்டியிருக்கிறார்கள்.

அதனுடைய இரண்டாவது பதிப்பு 2009-ஆம் ஆண்டு வெளியிடக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது அந்த வாய்ப்பை நம்முடைய கோபண்ணா அவர்கள் வழங்கினார்கள். நான் வந்து வெளியிட்டது பெருமை என்று அப்போது பலரும் பேசினார்கள். இல்லை இல்லை, இந்த நூலை வெளியிடுவது எனக்குப் பெருமை கிடைத்திருக்கிறது என்று அப்போது நான் சொன்னேன். இப்போதும் அதைத்தான் நினைவுபடுத்த விரும்புகிறேன். இத்தகைய அறிவுப்பணியை கோபண்ணா அவர்கள் தொடர வேண்டும் என்று அப்போது நான் கேட்டுக் கொண்டேன். அவரும் அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறார். அதுவும் உலகத் தரத்துடன் இந்த நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொண்டிருந்ததும் - இந்தியா தன்னுடைய அடையாளமாகக் கொள்ள வேண்டியதும்-ஜவஹர்லால் நேரு அவர்களைத் தான். எனது அரசியல் வாரிசு நேரு தான் என்று மகாத்மா காந்தி அவர்கள் சொன்னார்கள். காந்தியை உலகமே வியக்கிறது. அத்தகைய காந்தியடிகள் வியக்கும் மனிதராக இருந்தவர் நேரு அவர்கள்.

''நேரு, பளிங்கு போல் தூய்மையானவர். சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட நிலையில் உண்மையானவர். அச்சமோ, அதிருப்தியோ இல்லாத மாவீரர். ராணுவ வீரனின் துடிப்பும் உண்டு, தேர்ந்த அரசியல்வாதியின் நிதானமும் உண்டு. துணிவில் நேருவை மிஞ்ச ஆள் இல்லை. அவருடைய கரங்களில் தேசம் பாதுகாப்பாக இருக்கிறது" - என்று காந்தியடிகள் சொன்னதாக இந்த புத்தகத்தில் அவர் பதிவு செய்திருக்கிறார். இதனால் தான் இன்று வரை நேரு அவர்களின் புகழ் நிலைத்து நிற்கிறது.

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு  இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

''நான் ஒரு சோசலிஸ்ட். நான் ஒரு குடியரசுவாதி. மன்னர்களையும் இளவரசர்களையும் நம்புவதில்லை. ஒரு வர்க்கத்தின் மீது இன்னொரு வர்க்கம் செலுத்தி வரும் ஆதிக்கத்தை ஒழிக்க நினைப்பவன் நான்" என்று பேசியவர் நேரு அவர்கள். இந்த மேடையில் காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமல்ல, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த நானும், அதைப்போல பொதுவுடைமை கட்சியைச் சார்ந்திருக்கக்கூடியவர்களும், இதில் கலந்து கொள்வதற்கு இதுதான் காரணம்.

காங்கிரஸ் கட்சியின் குரலை மட்டுமல்ல, இந்தியாவின் குரலை எதிரொலித்தவர் நேரு அவர்கள். இந்தியா முழுமைக்குமான மனிதராக, இந்தியா முழுமைக்குமான பிரதமராக நடந்து கொண்டார்.

ஒரே மொழி-ஒரே மதம்-ஒரே இனம்-ஒரே கலாச்சாரம்-ஒரே பண்பாடு -ஒற்றைத் தன்மை-ஒற்றை சட்டம் ஆகிய அனைத்துக்கும் எதிராக இருந்தவர் நேரு அவர்கள். 'மதத்தை சமையல் அறையில் அடைத்துவிடாதீர்கள். எதைச் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது, யாரைத் தொடலாம், யாரைத் தொடக்கூடாது என்றெல்லாம் சொல்லி மலினப்படுத்தி விடாதீர்கள்" என்று சொன்னவர் நேரு அவர்கள். வகுப்புவாதமும், தேசியவாதமும் சேர்ந்து இருக்க முடியாது என்று சொன்னவர் அவர். அதனால் தான் மதச்சார்பற்ற சக்திகளால் நேரு போற்றப்படுகிறார்.

'பின் தங்கியுள்ள ஒவ்வொரு சகோதரனையும் சிலரின் பேராசையில் இருந்து விடுவிக்க வேண்டும்' என்று சொன்னவர் நேரு அவர்கள். திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளில் முதலாவது கொள்கை சமூகநீதியே. 1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சி போட்ட வகுப்புவாரி உரிமைக்கு 1950 ஆம் ஆண்டு ஆபத்து வந்தது. சென்னை உயர்நீதிமன்றமும் - உச்சநீதிமன்றமும் ஒரே நிலைப்பாட்டை எடுத்தபோது - தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் மிகப்பெரிய போராட்டத்தை தமிழகத்தில் எடுத்தார்கள். பெருந்தலைவர் காமராசர் அவர்கள் மூலமாக இந்தப் போராட்டத்தின் நியாயத்தை அறிந்த பிரதமர் நேரு அவர்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு உடன்பட்டார்.

சமூகத்திலும், கல்வியிலும் பின் தங்கியவர்களுக்குச் செய்யும் ஏற்பாடுகள் எதுவும் சட்டப்படி தடை செய்யப்படாது என்பதுதான் அந்த திருத்தம் ஆகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதலாவது திருத்தம் அது. தமிழகம் போட்ட விதையை விருட்சம் ஆக்கியவர் பிரதமர் நேரு அவர்கள். அதனால் தான் நேருவை நாம் போற்றுகிறோம்.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய இனப்போராட்டம். மொழிவாரியாக மாகாணங்களைப் பிரிக்க வேண்டும் என்பதாகும். ஒவ்வொரு தேசிய இனத்தின் விருப்பம் இது. இந்த விருப்பத்தின் நியாயத்தை பிரதமர் நேரு அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அத்தகைய பக்குவமும், முதிர்ச்சியும் அவருக்கு இருந்தது. அதனால் தான் நேருவைப் போற்றுகிறோம்.

தமிழகத்தின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவது இந்தித் திணிப்பு ஆகும். இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை இந்தி திணிக்கப்படாது என்ற வாக்குறுதியை வழங்கியவர் பிரதமர் நேரு அவர்கள். இதன் பின்னனியில் என்ன நடந்தது என்பதை இந்த புத்தகத்தில் கோபண்ணா அவர்கள் விபரமாக எழுதி இருக்கிறார்.

1960 ஆம் ஆண்டு இந்தித்திணிப்பைக் கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வந்தது. தமிழகம் வரும் குடியரசுத் தலைவருக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிடுகிறார் பேரறிஞர் அண்ணா அவர்கள். இதனை அறிந்து பிரதமர் நேரு அவர்கள் பதற்றம் கொள்கிறார். கம்யூனிஸ்ட் உறுப்பினர் கே.டி.கே. தங்கமணியை அழைத்து கழகத் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.சம்பத்தை அழைத்து வரச் சொல்லி பிரதமர் அவர்கள் சந்திக்கிறார்.

குடியரசுத் தலைவருக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என்று சொல்கிறார். அப்படியானால் இந்தியை திணிக்க மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள் என்கிறார் சம்பத். நீங்களே எழுதுங்கள், நான் அதில் கையெழுத்து போடுகிறேன் என்கிறார் பிரதமர். பிரதமரின் கடிதத்தை நான் எழுதுவது சரியல்ல என்கிறார் சம்பத் அவர்கள். சரி, நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள், நான் கடிதத்தை கொடுத்து அனுப்புகிறேன் என்கிறார் பிரதமர். இது நடக்கின்ற நேரம் மதியம் 12.30 மணி. நாடாளுமன்றம் சென்று விட்டு 4 மணிக்கு வீட்டு வருகிறார் சம்பத் அவர்கள். 4.10 மணிக்கு பிரதமரின் கடிதம் அவரிடம் வருகிறது. 'இந்தி பேசாத மக்களுக்கு ஏற்கனவே அளித்த உறுதிமொழியில் அரசு உறுதியாக இருக்கிறது' என்று அதில் எழுதி பிரதமர் அவர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்.

"கோட்சேக்களின் வாரிசுகளுக்கு  இவர்களை பார்த்தால் கசக்கத்தான் செய்யும்" : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

3.8.1960 அன்று நடந்த சம்பவம் இது. இந்த சம்பவம் நடந்து 7 ஆம் நாள் சென்னைக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினார். 'உலகத்தலைவர்களின் கரங்களை எல்லாம் தொட்ட பிரதமர் நேருவின் கரம் எழுதிய கடிதம் இது' என்று லட்சக்கணக்கானவர் கூடிய கூட்டத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டினார்கள். '500 எம்.பி.க்கள் இருக்கும் நாடாளுமன்றத்தில் 2 எம்.பி. வைத்திருக்கும் திமுக பெற்ற சாதனை இது' என்று அண்ணா அவர்கள் அன்றைக்கு குறிப்பிட்டார்கள். நாங்கள் நேரு அவர்களின் பெருமையைப் போற்றுவதற்குக் இதுதான் காரணம்.

இவை அனைத்துக்கும் மேலாக உண்மையான ஜனநாயகவாதியாக அவர் இருந்தார். நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடையாளமாக அவர் இருந்தார். அதனால் தான் ஜனநாயக சக்திகள் அனைவரும் இங்கே ஒன்றிணைந்து நேருவைப் போற்றுகிறோம்.

தனது வாழ்நாளில் 11 முறை மட்டுமே தமிழகம் வந்த நேரு அவர்கள். ஆனால் தமிழகத்துக்கு மகத்தான பல சாதனைகளைச் செய்து கொடுத்தவர் அவர்.

நெய்வேலியில் நிலக்கரிச் சுரங்கம்

பெரம்பூரில் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை

ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை

கிண்டியில் இந்துஸ்தான் டெலி பிரிண்டர்

அறுவைச் சிகிச்சைக் கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை

திருச்சி பெல்

ஆவடி டேங்க் பேக்டரி

சென்னை ஐஐடி - இவை அனைத்தும் தமிழ்நாட்டில் பிரதமர் நேருவின் பெயரைச் சொல்லும் அடையாளங்களாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டத்தின் மூலமாக இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் தொழில்கள் சென்று சேரக்கூடிய வகையில் இந்தியாவை ஒன்றுபட்ட இந்தியாவாகப் பார்த்தார் பிரதமர் நேரு அவர்கள்.

ஆனால் தற்போது 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்று வரைக்கும் வரவில்லை என்பதோடு ஒப்பிட்டால் தான் அன்றைய பிரதமர் நேருவின் பெருமையை நாம் உணர முடியும்.

இன்று எல்லா குறுக்குவழிகளிலும் இந்தி நுழைவதைப் பார்க்கும் போதுதான் நேருவின் பெருமை உயர்கிறது.

ஒற்றை மதவாதம் தலைதூக்கும் போதுதான் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட நேருவின் பெருமை உயர்கிறது.

முக்கியமான எதையும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மறுக்கக்கூடிய இந்தக் காலத்தில், எதிர் கருத்தினரை அதிகம் பேசவிட்டு ரசித்த அன்றைய பிரதமரின் பெருமையை உணர முடிகிறது.

பொதுத்துறை நிறுவனங்களை இன்று தொடர்ச்சியாக மூடிக்கொண்டு இருப்பதைப் பார்க்கும் போது தான், அவை தான் நவீன இந்தியாவின் கோவில்கள் என்று சொல்லி உருவாக்கிய அன்றைய பிரதமர் நேரு உயர்ந்து நிற்கிறார்.

இன்றைய இந்திய அரசியல் நிலைமையானது நேருவின் உண்மையான மதிப்பை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

தமிழ்நாட்டுக்கு இத்தனை ஆண்டுகள் கழித்து தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் தேவைப்படுவதைப் போல, இந்தியாவுக்கு காந்தியடிகளும், மாமனிதர் நேருவும், தேவைப்படுகிறார்கள்.

கூட்டாட்சியை

மாநில சுயாட்சியை

மதச்சார்பின்மையை

சமத்துவத்தை

சகோதரத்துவத்தை

சமதர்மத்தை

சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு இவர்கள் தேவைப்படுகிறார்கள்.

அந்த வகையில் தான் ஒற்றுமை நடைபயணத்தை நம்முடைய அருமைச் சகோதரர் ராகுல் காந்தி அவர்கள் நடத்தி வருகிறார்கள்.

அந்தப் பயணத்தை தென்குமரியிலிருந்து இந்திய எல்லை வரையில் தொடங்கிய நேரத்தில் நான் தொடங்கி வைக்கக்கூடிய வாய்ப்பை பெற்றேன். அதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ராகுல் காந்தி அவர்கள் பேச்சு, இந்தியாவில் பூகம்பத்தை இன்றைக்கு உருவாக்கி வருகிறது. அவர் தேர்தல் அரசியலை, கட்சி அரசியலைப் பேசவில்லை. கொள்கை அரசியலைப் பேசுகிறார். அதனால் தான் இன்றைக்கு ஒருசிலரால் கடுமையாக அவர் எதிர்க்கப்படுகிறார். அவரது பேச்சுக்கள் பல நேரங்களில் ஜவஹர்லால் நேரு பேசுவதைப் போல இருக்கிறது. நேருவின் வாரிசு அப்படி பேசாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.

கோட்சேக்களின் வாரிசுகளுக்கு மகாத்மா காந்தியின், நேருவின் வாரிசுகளின் பேச்சுகளைப் பார்த்தால் கசக்கத்தான் செய்யும். ஆனால் காலம் மகாத்மா காந்தியை, நேருவை நினைவூட்டிக் கொண்டே இருக்கும் அதனுடைய அடையாளமாகத்தான் இந்த புத்தகம் அமைந்திருக்கிறது.

மாமனிதர் நேருவின் சிந்தனைகளை உள்ளடக்கிய காலம் என்பது, இந்தியாவில் மலரட்டும், வளர்ச்சியும், அமைதியும் ஓங்கட்டும் என்று சொல்லி, கோபண்ணா அவர்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் மீண்டும் ஒரு முறை தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

banner

Related Stories

Related Stories