அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட மாணக்கர்களுக்கு சேர்க்கை ஆணையினை சென்னை அண்ணா பல்கலை விவேகனந்தர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது மேடையில் பேசிய முதலமைச்சர், "அரசுப்பள்ளி மாணவர்களின் பொறியியல் கல்லூரியில் சேரும் கனவு நனவாகும் நாள் இது. பெரிய கல்லூரிகளில், பெரிய படிப்பில் சேர்ந்து பெரிய ஆளாக வருவீர் என்ற உங்கள் பெற்றோரின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும், கல்வி எனும் அழியாத செல்வத்தை மாணவர்கள் பெற வேண்டும் எனவும், மாணவர்கள் வேலை பெறுபவர்களாக இல்லாமல், வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், "மருத்துவம், பொறியியல் படிப்பில் கிராமப்புற மாணவர்கள் சேர நுழைவுத் தேர்வு தடையாக இருந்தது. அதனை கலைஞர் தான் நீக்கினார்.
அரசு பள்ளிகளில் பொறியியல், கால்நடை, மீன்வளம், வேளாண்மை என சிறப்பு இட ஒதுக்கீடு பெற சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மாணவர்கள் எதையும் அறிவியல் பார்வையுடன் அணுக வேண்டும். இந்த தலைமுறை உயர்ந்து நிற்பதன் மூலம் மாநிலமும் உயர்ந்து நிற்க போகிறது என கூறினார்.
தொடர்ந்து, காமராஜர் ஆட்சி காலம் பள்ளிக்கல்வி, கலைஞர் ஆட்சி காலம் கல்லூரி கல்வியின் பொற்காலமாக கூறுகிறோம். இந்த ஆட்சி ஆராய்ச்சி படிப்புகளின் பொற்காலமாக மாற வேண்டும் என பேசினார்.
அதனை தொடர்ந்து, 7.5% இட ஒதுக்கீட்டில் தொழிற்படிப்பில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதிக்கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.