மு.க.ஸ்டாலின்

‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் !

“நூற்றாண்டு காணும் தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.

‘ஜானகிராமம்’ நூல் வெளியீடு; தி.ஜானகிராமனின் படைப்புகள் காலத்தை வென்று வாழும் என முதலமைச்சர் புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையிலுள்ள முதலமைச்சரின் இல்லத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , எழுத்தாளர் தி.ஜானகிராமனின் நூற்றாண்டு நிறைவைக் (1921-2021) கொண்டாடும் 'ஜானகிராமம்' என்ற நூலை வெளியிட்டார்.

அப்போது முதல்வர், "தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் தி.ஜானகிராமன். அவரது படைப்புகள் காலத்தை வென்று வாழும் திறனுடையவை. அவரது படைப்புகள்குறித்துப் பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களால் எழுதப்பட்ட இந்நூலை வெளியிடுவதில் பெருமையடைகிறேன். தி.ஜானகிராமன் நூற்றாண்டு விழாவை முன்னெடுக்கும் அனைவர்க்கும் எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில், மன்னார்குடிக்கு அருகிலுள்ள 'தேவங்குடி' என்ற ஒரு சிறிய கிராமத்தில், தியாகராஜ சாஸ்திரி - நாகலட்சுமி ஆகியோரின் இரண்டாம் மகனாக, 28.06.1921இல் பிறந்த தி.ஜானகிராமன், தமிழின் மகத்தான கலைஞர்களுள் ஒருவர். தி.ஜானகிராமன் மறைந்து (18.11.1982) முப்பத்தொன்பது ஆண்டுகளாகி விட்டபிறகும், நவீனத் தமிழிலக்கியத்தில் அவர் புகழ் இன்றும் ஓங்கியே இருக்கிறது.

அவருடைய புனைகதைகள், தமிழ் வாசகர்களால் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன. அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.ஜானகிராமன், தஞ்சாவூர் மாவட்ட மக்களின் வாழ்வியலைக் கலைத்திறத்துடன் தம் படைப்புகளில் பதிவுசெய்த ஒரு முன்னோடி எழுத்தாளராவார். அவர் எழுத்தில் காவிரியும் இசையும் தஞ்சை மண்ணின் இயற்கை வளமும் டெல்டா மனிதர்களின் வாழ்வியல் கோலங்களும் நுட்பமாகப் பதிவுபெற்றுள்ளன.

சாகித்திய அகாதமி விருது (1979) பெற்ற அமரர் தி.ஜானகிராமனின் (28.06.2021) நூற்றாண்டு நிறைவைச் சிறப்பிக்கும் நோக்கில், தி.ஜா. ஆய்வாளர் கல்யாணராமன், பல்வேறு எழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய (102) கட்டுரைகளைப் பெற்று, 'ஜானகிராமம்' என்ற தலைப்பில், 1032 பக்கங்களில் ஒரு பெருநூலைத் தொகுத்துள்ளார். இந்நூலைக் 'காலச்சுவடு' பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

15.06.2021 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு முதலமைச்சரின் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட, 'ஜானகிராமம்' நூலின் முதல் பிரதியைத் தி.ஜானகிராமனின் மகள் உமாசங்கரியின் சார்பாக, 'விப்ராஸ் ஆட்ஸ்' நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திருமதி கெஜலக்ஷ்மி ரகு பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், இந்நூலின் தொகுப்பாசிரியர் கல்யாணராமன், நந்தனம் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீதாபதி ரகு, கிண்டி செல்லம்மாள் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தா.அ.சிரிஷாராமன், பத்திரிகையாளர் சுந்தரபுத்தன் ஆகியோர் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories