மு.க.ஸ்டாலின்

“பொல்லாத ஆட்சியை ஒழித்து; பொற்கால ஆட்சியை அமைப்போம்”- காஞ்சி முப்பெரும் விழாவில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!

பத்தாண்டு கால பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை அமைத்தாக வேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரின் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும்!

“பொல்லாத ஆட்சியை ஒழித்து; பொற்கால ஆட்சியை அமைப்போம்”- காஞ்சி முப்பெரும் விழாவில் சூளுரைத்த மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவர் என்பதால், முதலமைச்சர் பழனிசாமி மக்களைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கிறார்” என காஞ்சிபுரம் முப்பெரும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (31-10-2020) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில், நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாகப் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

“அன்புள்ள, கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு அவர்களே! அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களே! காஞ்சிபுரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களே! காஞ்சிபுரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ. அவர்களே! ‘கொள்கை ஆட்சியும் கொடுங்கோல் ஆட்சியும்’ என்ற தலைப்பில் எனக்கு முன்னால் உரையாற்றிய புரட்சிப் பேச்சாளர் வே.மதிமாறன் அவர்களே! பொற்கிழி பெற்றிருக்கக் கூடிய கழகத்தின் மூத்த முன்னோடிகளே! காஞ்சிபுரம் வடக்கு - தெற்கு மாவட்டத்தின் பல்வேறு நிர்வாகிகளே! இயக்கத்தின் துணை அமைப்புகளாம் பல்வேறு அணிகளைச் சார்ந்த பொறுப்பாளர்களே! பெரியோர்களே! தாய்மார்களே! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கம்!

தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - கழகம் தோன்றிய நாள் ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் உருவாக்கிய ‘திராவிடத் திருவிழாவை’ நாம் ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறோம்.

கடந்த செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் முப்பெரும் விழா நடந்தது. அடுத்து கரூர், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், திருச்சி, தேனி, நாமக்கல் எனப் பல்வேறு மாவட்டங்களில் நடந்து, இன்று அண்ணன் பிறந்த காஞ்சியில் நடக்கிறது!

அண்ணா அறிவாலயத்தில் தொடங்கிய முப்பெரும் விழாக்கள், அண்ணன் பிறந்த காஞ்சி நகரத்தில் நிறைவாக நடக்கிறது.

அடுத்து நாம் சட்டமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் வகையில், வீழ்ச்சியுற்ற தமிழகம் எழுச்சி பெற வேண்டும் என்ற அடிப்படையில் பிரச்சாரப் பொதுக்கூட்டங்களைத் தொடங்கப் போகிறோம். அந்த வகையில் முதல் காணொலிப் பொதுக்கூட்டம் நாளைய தினம் ஈரோட்டில் தொடங்குகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரத்தில் நடைபெறும் இந்த முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் பெருமைப்படுகிறேன் என்பதை விட, நான் அதிக உற்சாகமும் எழுச்சியும் பெறுகிறேன் என்று தான் சொல்ல வேண்டும்.

காஞ்சி மாவட்டக் கழகத்தை பல்லவ மன்னர்களைப் போல தா.மோ.அன்பரசனும், சுந்தரும் காத்து வருகிறார்கள். தலைமைக் கழகம் அறிவிக்கும் எந்தப் போராட்டமாக இருந்தாலும், நான் தேர்ந்தெடுத்து பங்கேற்கும் மாவட்டமாக பெரும்பாலும் காஞ்சிபுரம் மாவட்டம் அமையும். பேரறிஞர் அண்ணா பிறந்த மாவட்டம் என்பது முக்கியமான காரணமாக இருந்தாலும், இவர்கள் இருவரும் முன்னின்று செயலாற்றும் மாவட்டம் என்பதும் மற்றொரு காரணம்.

ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்கிற அளவுக்கு தங்களது திறமையால், உழைப்பால் காஞ்சிபுரம் மாவட்டக் கழகங்களை கழகக் கோட்டைகளாக வைத்திருக்கும் அவர்கள் இருவருக்கும் எனது நன்றியையும் பாராட்டுதல்களையும் தலைமைக் கழகத்தின் தெரிவித்துக் கொள்கிறேன்.

காஞ்சிபுரம் என்பது நமக்கு ஊர் பெயர் அல்ல; உணர்ச்சியின் பெயர்! எழுச்சியின் பெயர்!

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஈரோடு, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மூன்றும் தலைநகரங்கள். இந்த மூன்றில் இருந்தும் முளைத்த முப்பெரும் தலைவர்களால் தான் முகம் பெற்றோம்; முகவரி பெற்றோம்; உயிர் பெற்றோம்; உணர்வைப் பெற்றோம்!

1925-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இதே காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சமூகநீதி எனப்படும் வகுப்புவாரி உரிமைக்காக முழக்கம் இட்டபடியே வெளியேறினார். அதன்பிறகு உருவாக்கியது தான் சுயமரியாதை இயக்கம். அதுதான் பின்னர் திராவிடர் கழகம் ஆனது. பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் பெரியாரையே உணர்ச்சி கொள்ள வைத்த ஊர் இந்த காஞ்சிபுரம்!

1938 இந்தி எதிர்ப்பு போராட்டமா? அதற்கான தூண்டுதலாக இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்த ஊர் காஞ்சிபுரம்.

திராவிட நாடு பிரிவினையா? அதற்கு அடித்தளமாக திராவிட நாடு பிரிவினை மாநாட்டை 1940-இல் நடத்திய ஊர் காஞ்சிபுரம்!

பாவேந்தரின் நாடகங்கள் தடை செய்யப்பட்டபோது, அதனை மீறி ‘இரணியன் அல்லது இணையற்ற வீரன்’ நாடகத்தை நடத்தியது இந்த காஞ்சிபுரம் மாவட்டம் தான்.

''எனது வீட்டில் படி படி என்றார்கள், ஆனால் நான் காஞ்சிபுரம் அண்ணா பள்ளியில் தான் படித்தேன்” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட ஊர் இந்த காஞ்சிபுரம்.

எனது வாழ்க்கையிலும் நான் பொதுவாழ்வுக்கு வந்த ஆரம்பகாலத்தில் 1971-ஆம் ஆண்டு சென்னை அண்ணா நினைவிடத்திலிருந்து கொள்கை தீபம் ஏந்தி சுடரை எடுத்து வந்து தலைவர் கலைஞரிடமும் பொதுச்செயலாளர் நாவலரிடமும் பொருளாளர் எம்.ஜி.ஆர் அவர்களிடமும் வழங்கிய ஊர் இதே காஞ்சிபுரம் தான்.

இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டத்தில் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது!

பேரறிஞர் அண்ணா அவர்கள் தி.மு.க பொதுச்செயலாளர் மட்டுமல்ல; சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், நாடக பயிற்சி ஆசிரியர், பத்திரிக்கையாளர், ஓவியர், கவிஞர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், இசை பற்றாளர், போராட்டக்காரர், நிர்வாகி, இந்த இனத்தின் தலைவர்!

இப்படி அவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். இவை அனைத்துக்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று வருங்காலச் சமுதாயம் சந்தேகப்படும் அளவுக்கு நல்லவராக வாழ்ந்த பண்பாளர் நம்முடைய பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அப்படிப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள், நம்முடைய கழகத்தை உருவாக்கியவர். நம்முடைய இயக்கத்தின் பொதுச்செயலாளராக இருந்தவர். அதைவிட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும்?

தந்தை பெரியார் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் மட்டும் சந்திக்காமல் போயிருந்தால், இந்த திராவிட இயக்கம் சமூக சீர்திருத்த இயக்கமாக மட்டுமே இருந்திருக்கும். பெரியாருடன் அண்ணா அவர்கள் சேர்ந்ததால் தான் இது அரசியல் இயக்கம் ஆனது.

கொள்கைகளை பெரியார் வடிவமைத்துக் கொடுத்தார். அதனைச் செயல்படுத்திக் கொடுக்கும் இடத்துக்கு அண்ணா வந்தார். உலகில் எந்த இயக்கத்துக்கும் இப்படி வரலாற்றுப் பின்புலம் இருக்காது. அத்தகைய பெருமை உள்ள இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தலைவர் கலைஞர் சிலையை 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காஞ்சிபுரத்தில் திறந்து வைத்தேன். மார்பளவு சிலையாக அதுவரை இருந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையையும் முழு உருவச் சிலையாக மாற்றி வைத்தோம். பேரறிஞர் அண்ணா சிலையும், கலைஞர் அவர்களது சிலையும் அமைந்திருக்கக் கூடிய திருக்கச்சிநம்பித் தெருவில் உள்ள அந்தக் கட்டடத்தில் இருந்து தான் அறிஞர் அண்ணா அவர்களின் ‘திராவிட நாடு’ இதழ் வெளிவந்திருக்கிறது.

1998-ல் கலைஞர் பவளவிழா மாளிகை என்ற நிலையில் இந்தக் கட்டடத்தின் முகப்பில் பேரறிஞர் அண்ணா சிலையை முதல்வர் கலைஞர் அவர்கள் வருகை தந்து திறந்து வைத்தார். அப்போது நான் தலைவரோடு வருகை தந்து அதில் பங்கேற்றேன். அப்போது சென்னை மாநகரத் தந்தையாக பொறுப்பு வகித்தேன். இன்றைக்கு அண்ணாவின் இடத்தை கலைஞரின் இடத்தை என்னால் முடிந்தளவு நிரப்ப முயன்றுக் கொண்டு இருக்கிறேன்.

“பெரியாரிடம் இருந்து துணிவைப் பெற்றேன், அண்ணாவிடம் இருந்து கனிவைப் பெற்றேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை, பேரறிஞர் அண்ணாவிடம் இருந்து நான் கனிவைப் பெற்றேன். முத்தமிழறிஞர் கலைஞரிடம் இருந்து துணிவைப் பெற்றேன். அதனால் தான் உங்களால் தலைவராக ஏற்றுக் கொள்ளும் தகுதி பெற்றவனாக இந்தளவுக்கு எனது அரசியல் பயணம் தொடர்கிறது.

அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்று கலைஞர் அவர்கள் நமக்கு அரசியல் பாதையை வகுத்துக் கொடுத்தார்கள். இந்த ஒரே வரியில் எல்லாமே அடங்கி இருக்கிறது. நமது வழி எது என்றால், ஒரே சொல்லில் கலைஞர் அவர்கள் சொல்லி விட்டார்கள், 'அண்ணாவின் வழி தான் நமது வழி'.

இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி இருக்கிறது. அந்த ஆட்சியை நடத்தும் கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் கொடியில் அண்ணா படம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா என்றால், அறவே இல்லை என்பதுதான் உண்மை.

சில நாட்களுக்கு முன்னால் செய்தியாளர்களைச் சந்தித்த முந்திரிக்கொட்டை அமைச்சர் ஜெயகுமார், அண்ணாவையே விமர்சித்து பேட்டி கொடுத்தார். ““ஆட்டுக்கு தாடி எதற்கு? நாட்டுக்கு ஆளுநர் எதற்கு?” என்று கேட்டார் பேரறிஞர் அண்ணா. இது எங்களுடைய கொள்கை அல்ல; அது அண்ணாவோடு முடிந்துவிட்டது” என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். அண்ணாவின் பெயரில் கட்சி நடத்திக் கொண்டு, அண்ணா படத்தை கொடியில் போட்டுக் கொண்டு நடக்கும் ஒரு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் சொல்லி இருக்கிறார், அது அண்ணாவோடு முடிந்துவிட்டது என்கிறார். இதை விட அண்ணாவுக்கு துரோகம் என்ன இருக்க முடியும்?

பத்து நாள் ஆகிவிட்டது. இதற்கு அ.தி.மு.க சார்பில் ஏதாவது விளக்கம், மறுப்பு வருமா என்று பார்த்தேன். வரவில்லை!

அண்ணா பெயரை கட்சியின் பெயரில் இருந்து நீக்கிவிட்டு, கொடியில் இருந்து படத்தை நீக்கிவிட்டு, அண்ணா காலத்தோடு முடிந்து விட்டது என்று ஜெயக்குமார் சொல்லட்டும். அது பற்றி நான் கவலைப்படவில்லை. அண்ணாவின் பெயரையும் பயன்படுத்திக் கொண்டு பா.ஜ.க.வின் பாதம் தாங்கிகளாக எதற்காக குப்புற விழுந்து கிடக்க வேண்டும்?

தமிழ்நாடு என்று சட்டமன்றத்தில் பெயர் சூட்டிய அன்று பேரறிஞர் அண்ணா அவர்கள், “நான் தீட்டிய திட்டங்கள் இந்த நாட்டில் தொடரும் வரை அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்” என்றார். அந்தளவுக்கு தமிழ்நாட்டின் உணர்வில், உள்ளத்தில், ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

அவரது காலத்தோடு அது முடிந்துவிட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் சொல்வது, அவரது அடிமைத்தனத்தை காட்டுகிறது!

பேரறிஞர் அண்ணா அவர்களின் இறுதி லட்சியமாக இருந்தது மாநில சுயாட்சிக் கொள்கை ஆகும். மறைவுக்கு முந்தைய மாதம் அவர் அதிகம் எழுதியதும் மாநில சுயாட்சியை பற்றித்தான். எனவே மாநில சுயாட்சி என்பது அண்ணாவின் உயில் என்று சொல்லப்படுகிறது. அந்தக் கொள்கைக்கு உலை வைக்கும் ஆட்சி தான் இன்றைய அ.தி.மு.க. ஆட்சி.

மருத்துவக் கல்வியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதற்கு ஆளுநர் அனுமதி தராமல் மவுனம் காத்தார். ஆளுநருக்கு அனுப்பி வைத்த மசோதா என்னாயிற்று என ஆளும் கட்சி கவலைப்படவில்லை. அப்போதெல்லாம் அமைதியாக இருந்தார்கள்.

நம்மால் அப்படி இருக்க முடியுமா? மருத்துவக் கனவோடு இருக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டு சேர முடியாமலே போய்விடும்தானே! அதனால், ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அவர் மேலும் 4 வாரங்கள் ஆகும் என்று பதில் எழுதினார். ஏற்கனவே 4 வாரங்கள் கடந்துவிட்டதால், உடனடியாக ஒப்புதல் வழங்கக் கோரி தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தினோம்.

அதுமட்டுமின்றி, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க உத்தரவிடக் கோரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் தனித்தனியாக கடிதம் அனுப்பினார்கள்.

இப்படிப் பல்வேறு வகையில் தி.மு.க. கொடுத்த அழுத்தத்தாலும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த வேண்டுகோளாலும், ஆளுநர் 45 நாள் தாமதத்திற்குப் பிறகு அந்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்திருக்கிறார். இறுதியில் வென்றது சமூகநீதிதான்!

இது ஏழை மாணவர்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதால், ஆளும்கட்சியோடு சேர்ந்து போராட்டம் நடத்துவதற்குத் தயார் என்று கூட அறிவித்தேன். உடனே, ஸ்டாலின் அரசியல் செய்கிறார் என்று அமைச்சர்கள் எல்லாம் பேட்டி கொடுத்தார்கள். ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து ஒரு மசோதாவுக்கு கையெழுத்துப் போட வலியுறுத்தினால், ஆளுநர் உடனடியாக செயல்படுவார் என்ற நோக்கத்தில்தான் சேர்ந்து போராட்டம் நடத்தலாம் என்று சொன்னோமே தவிர, அதில் அரசியல் நோக்கம் எதுவும் இல்லை.

பேரறிஞர் அண்ணா அவர்கள் எதிர்க்கட்சி வரிசையிலே உறுப்பினராக இருந்தபோது காங்கிரஸ் கட்சி, தமிழகத்தை ஆட்சி செய்தது. அன்றைய மத்திய அரசு, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டு பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்கள். வாதாடினார்கள். அன்றைய அரசுக்கு ஒரு அறிவுரையைச் சொன்னார்கள்.

''நான் வைக்கும் கோரிக்கைகளை எல்லாம் மத்திய அரசுக்கு சொல்லுங்கள். இப்படி ஒரு கூட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று எடுத்துச் சொல்லி மத்திய அரசிடம் வாதாடி தமிழக உரிமைகளை மீட்டுத் தாருங்கள். எங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமன்றத்தில் பேசினார்கள். அதைப் போல எங்களைக் காட்டி மத்திய அரசிடம் போராடுங்கள் என்று தான் நானும் சொல்கிறேன்.

ஆனால் அ.தி.மு.க. அரசுக்கு அத்தகைய அக்கறை கிடையாது. அவர்களுக்கு கொள்ளை என்ற ஒன்றைத் தவிர வேறு கொள்கை கிடையாது.

சும்மா ஒப்புக்கு ஒரு அறிக்கை விடுவார்கள், தீர்மானம் போடுவார்கள், வழக்கு போடுவார்கள், மசோதா கொண்டு வருவார்கள் - ஆனால் அதை நிறைவேற்றுவதற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.

மருத்துவக் கல்விக்கான இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று மத்திய அரசும் சொல்லிவிட்டது. உச்சநீதிமன்றமும் தீர்ப்பாக அளித்துவிட்டது. ஆனால் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது அ.தி.மு.க அரசு.

இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று வழக்கு போட்டார்களே தவிர, இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு அமைத்த குழுவில் அ.தி.மு.க. அரசு வாதிடவில்லை.

இந்த ஆண்டு அமல்படுத்த முடியாது என்று சொன்ன மத்திய அரசை அ.தி.மு.க அரசு எதிர்க்கவில்லை; கண்டிக்கவில்லை. அதனால் தான் உச்சநீதிமன்றமும் இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்துவிட்டது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் இதனை வேடிக்கை பார்க்கவில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை இந்த ஆண்டே அமல்படுத்துக என்று பிரதமருக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன்.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்பதற்காக உருவான இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

தந்தை பெரியார் அவர்கள் தான், “தமிழக மக்களின் கண்ணைத் திறந்தார் காமராசர். தமிழக மக்களை திராவிட முன்னேற்றக் கழக அரசு எழுந்து நடக்க வைக்க வேண்டும்” என்று கட்டளை பிறப்பித்தார்கள். அதன்படிதான் திராவிட முன்னேற்றக் கழக அரசு தமிழகத்தை ஆட்சி செய்த ஐந்து முறையும் நடந்து காட்டியது.

தி.மு.க. ஆட்சி மலரும் போதெல்லாம் விவசாயிகள் முகம் மலரும்; அரசு ஊழியர் முகம் மலரும்; ஒடுக்கப்பட்ட மக்களது முகம் மலரும்! அந்த மலர்ச்சிக்கான திட்டங்களைத் தான் தலைவர் கலைஞர் அவர்கள் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டே கொடுத்தார்கள்.

Ø விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.

Ø நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம்.

Ø விவசாயக் கடன்கள் ரத்து.

Ø அரசு ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள்.

Ø மாற்றுத் திறனாளிகள் நலவாரியம்.

Ø திருநங்கைகள் நலவாரியம்.

Ø கிராமங்களில் நமக்கு நாமே திட்டம்.

Ø அண்ணா மறுமலர்ச்சி திட்டம்.

Ø சமத்துவபுரங்கள்.

Ø மினி பஸ்

Ø உழவர் சந்தைகள்

Ø முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவிகள், சலுகைகள்.

Ø குடிசை மாற்று வாரியம்.

Ø தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு எண்ணிக்கை உயர்வு.

Ø மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனி இட ஒதுக்கீடு.

Ø சிறுபான்மையினர் இட ஒதுக்கீடு.

Ø பெண்களுக்கு சொத்தில் பங்கு.

Ø அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்

- இப்படி ஒடுக்கப்பட்ட மக்களது ஆட்சியாக தி.மு.க. ஆட்சி அமைந்திருந்தது.

ஒரு தாய் தனது பிள்ளைகளைக் கவனிப்பது போலக் கவனித்தார். அவரது ஆட்சியில் இதை மட்டும் தான் செய்தார், இதைப் பற்றி கவனிக்கவில்லை என்று சொல்ல முடியாத அளவுக்கு அனைத்துத் துறைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தார் முதலமைச்சர் கலைஞர்.

தலைவர் கலைஞர் ஆட்சியின் தொழில் வளர்ச்சிக்கு வேறு எங்கும் ஆதாரங்களைத் தேடிப் போக வேண்டியது இல்லை. சென்னையில் இருந்து பூந்தமல்லியைத் தாண்டி, சென்னையில் இருந்து திருப்பெரும்புதூரைத் தாண்டி, சென்னையில் இருந்து தரமணியைத் தாண்டி, சென்னையில் இருந்து பெருங்குடி தாண்டி போகும் போது நீங்கள் பார்க்கும்போது கண்ணில் படும் பெரும்பாலான தொழிற்சாலைகள் கலைஞர் ஆட்சியில் அமைக்கப்பட்டதாகத்தான் இருக்கும்.

தலைவர் கலைஞர் காலம் தொழில்மயமாக்கலின் பொற்காலம் என்று சொல்வதற்கான உதாரணம் நான் இப்போது சொன்ன இடங்கள்.

கலைஞர் அவர்கள் முத்தமிழறிஞர் மட்டுமல்ல; தொழில்மயமாக்கலின் சிற்பி!

இந்திய மாநிலங்களில் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சமநிலையோடு மேம்பட்டு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என மாற்றிக்காட்டியவர் கலைஞர்.

சில நாட்களுக்கு முன் ஒரு புள்ளிவிவரம் வெளியானது. மத்தியில் மோடி ஆட்சி வந்த பிறகு ஒரு பொதுத்துறை நிறுவனத்தைக் கூட அவர் உருவாக்கவில்லை என்று அந்தச் செய்தி கூறுகிறது.

ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில்தான் அதிகமான அளவு பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.

Ø தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனம்

Ø தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம்

Ø சதர்ன் ஸ்டிரக்சுரல்ஸ்

Ø தமிழ்நாடு கனிம நிறுவனம்

Ø தமிழ்நாடு உப்பு நிறுவனம்

Ø தமிழ்நாடு மின்னணு நிறுவனம் – எல்காட்

Ø தமிழ்நாடு சர்க்கரைக் கழகம்

Ø தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் - சிப்காட்

- இப்படி பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கிய ஆட்சி, தி.மு.க. ஆட்சி.

அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டதும், அதன் மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

இன்றைக்கும் தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டங்களில் சிறப்பாக இயங்கும் சிப்காட்களை பார்க்க முடிகிறது என்றால் அதற்கும் கலைஞர் தான்.

காரணம், 1996-களிலேயே 8 துறைகளின் கீழ் அனுமதி பெற்று ஆரம்பிக்கும் தொழிலை ஒரே விண்ணப்பத்தில் பெறலாம் என தொழிற்துறை வளர ஒற்றைச் சாளர முறை ஏற்படுத்தித் தந்தார் தலைவர் கலைஞர். அதுதான் தமிழகத்தை இந்தளவுக்கு வளர்த்துள்ளது.

ஆனால் இன்றைக்கு தொழில் வளர்ச்சியும் இல்லை, புதிய தொழிற்சாலைகளும் இல்லை, வேலைவாய்ப்பும் இல்லை. மொத்தத்தில் தமிழகம் பல்வேறு துறைகளில் அதல பாதாளத்துக்கு போய்விட்டது. இந்த பத்தாண்டு காலத்தில் தமிழகம் பெரும் பள்ளத்தில் வீழ்ந்துவிட்டது.

ஆனால் இவை எது பற்றியும் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமிக்கு கொஞ்சம் கூட கவலையே இல்லை. உண்மையைச் சொன்னால் அவர் ஜாலியாக இருக்கிறார். நாம் மறுபடி ஆட்சிக்கு வரப்போவது இல்லை. இருக்கும் ஆறு மாதத்தை நன்றாக அனுபவிக்கலாம் என்று எந்தக் கவலையும் இல்லாமல் இருக்கிறார்.

கஜா புயல் தாக்கியபோது மக்களை உடனே வந்து பார்த்தாரா? எங்கே போனார் எடப்பாடி? ஆளைக்காணோம், ஆளைக்காணோம் என்று சொன்ன பிறகு ஹெலிகாப்டரில் வந்து போனார்.

நீலகிரியில் நிலச்சரிவு ஏற்பட்டபோது வந்து பார்த்தாரா? இல்லை!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் குடும்பத்துக்கு ஆறுதல் சொன்னாரா? இல்லை!

விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட வீட்டுக்கு போனாரா? இல்லை!

நீட் தேர்வின் கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்கள் வீட்டுக்குச் சென்று சென்று ஆறுதல் சொன்னாரா? இல்லை!

அ.தி.மு.க.வினர் வைத்த கட் அவுட் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ வீட்டுக்குச் சென்றாரா? இல்லை!

அ.தி.மு.க.வினர் வைத்த கட் அவுட் விழுந்ததால் கால் ஒடிந்த அனுராதாவைப் போய் பார்த்தாரா? இல்லை!

என்ன செய்தார் எடப்பாடி? இதெல்லாம் நமது வேலை இல்லை என்று நினைக்கிறார்.

“நாடும் நாட்டு மக்களுக்கும் நாசமானால் நமக்கென்ன" என்று நினைக்கக் கூடியவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். மக்களால் அவர் முதலமைச்சர் ஆனவர் அல்ல. அதனால் மக்களைப் பற்றிய எந்தக் கவலையும் அவருக்கு இல்லை!

ஆனால் நம்மை, பேரறிஞர் அண்ணாவோ, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோ அப்படி வளர்க்கவில்லை.

கஜா புயலால் மக்கள் பாதிக்கப்பட்டபோது உடனே மக்களைப் பார்க்க ஓடி வந்தேன். ஒரு முறையல்ல ஐந்து முறை சென்றேன். தூத்துக்குடியில் துப்பாக்கியால் சுட்டார்கள். கலவர பூமியான அந்த இடத்துக்கு உடனே போனேன். அனிதா தற்கொலை செய்து கொண்டார். உடனே அவரது இல்லம் சென்றேன். காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு மறுத்தபோது காவிரி டெல்டா பகுதிக்கு காவிரி மீட்பு பயணம் மேற்கொண்டேன். கோவையில் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உடனே அவரது வீட்டுக்குச் சென்றேன். எல்லையில் நமது வீரர்கள் இருவர் கொல்லப்பட்டார்கள். அவர்களது இல்லத்துக்குச் சென்று ஆறுதல் சொன்னேன்.

இதுதான் அண்ணா அவர்கள் காட்டிய பாதை! இதுதான் கலைஞர் அவர்கள் காட்டிய பாதை!

தமிழ்நாட்டில் எந்தப் பகுதிக்கும், எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் மக்களைச் சந்திக்கும் துணிச்சல் எனக்கு உண்டு.

ஏனென்றால் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் மக்களின் குரலை எதிரொலித்தோம். ஆளும்கட்சியாக இருந்தபோதும் மக்களின் கனவை நிறைவேற்றினோம். இந்தக் கொரோனா காலத்திலும் ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான மக்களின் தேவையை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தோம்.

நாம் ஆட்சியில் இல்லை என்று அமைதியாக இருந்திருக்க முடியும். ஆனால் மக்கள் துன்பப்படும் போது அதனை கைகட்டி வேடிக்கை பார்க்கும் இயக்கம் நாம் அல்ல. நம்மால் அப்படி இருக்க முடியாது.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்க்கு உணவுப் பொருள்கள் கொடுத்தோம். வீடுகள் இல்லாதவர்களுக்கு உணவைத் தயாரித்துக் கொடுத்தோம். ஆட்டோ டிரைவர்கள் போன்றவர்களுக்கு நிதி வழங்கினோம். ஒரு அரசியல் இயக்கம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்தியாவுக்கே எடுத்துக்காட்டாக நாம் செயல்பட்டுக் காட்டினோம்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார்? எதுவும் செய்யவில்லை!

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதி கொடுங்கள் என்று சொன்னேன். அதைக்கூடச் செய்யவில்லை. அதற்கு கூட அவருக்கு மனமில்லை!

ஆனால் கொரோனா தடுப்பூசி வந்தால் அதனை இலவசமாக போடுவேன் என்று வாக்குறுதி கொடுக்கிறார். இப்படி ஒரு வாக்குறுதியைக் கொடுப்பதற்கு அவருக்கு வெட்கமாக இல்லையா? மக்கள் கொரோனா பீதியில் இருக்கும் போது இலவச தடுப்பூசி போடுவேன் என்பது மக்களது பயத்தை அரசியல் ஆதாயத்துக்கு பயன்படுத்தும் கொடூரம் அல்லவா இது? கொரோனாவை விட இது கொடூரம் அல்லவா?

இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கப்படவில்லை. எப்போது கண்டுபிடிக்கப்படும்? தெரியாது! எப்போது சோதனை செய்யப்படும்? தெரியாது! எப்போது உற்பத்தி செய்யப்படும்? தெரியாது! இத்தனை கோடிப் பேருக்கான தயாரிப்பு எப்போது முடியும்? தெரியாது! ஒரு தடுப்பூசி விலை என்ன? தெரியாது! இதனை மத்திய அரசு போடப்போகிறதா? தெரியாது! மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப் போகிறார்களா? தெரியாது! ஆனால் ஊசி இலவசம் என்று எடப்பாடி பழனிசாமி சொல்கிறார்.

மக்களைக் காப்பாற்றுவது அரசாங்கத்தின் கடமை. அந்தக் கடமையைக் கூட விலை பேசுகிறார் பழனிசாமி. முதலமைச்சர் பதவியை விலை கொடுத்து வாங்கியவர் அப்படித்தான் பேசுவார்.

''பா.ஜ.க.வுக்கு வாக்களித்தால் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்" என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பீகார் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் சொல்கிறார். அவருக்கும் மக்களைப் பற்றி எந்தக் கவலையும் கிடையாது.

லட்சம், கோடி என்று சொல்வாரே தவிர, சில நூறு ஆயிரங்கள் கூட சாமானியர் குடும்பத்துக்கு இதுவரை வந்து சேர்ந்ததாக தகவல் இல்லை. இப்படி மக்களுக்காக எதுவும் செய்ய மனமில்லாதவர்கள் தான், கொரோனா தடுப்பூசி இலவசம் என்பது போன்ற கொடூரமான வாக்குறுதிகளைச் சொல்லி மக்களை ஏமாற்றுவார்கள்.

கொரோனாவை விடக் கொடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கோட்டையில் இருக்கும் கொள்ளையர் கூட்டத்தை விரட்டியாக வேண்டும். பத்தாண்டு கால பாதாளத்தில் இருக்கும் தமிழகத்தை மீட்டாக வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியை அமைத்தாக வேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரின் ஆசையை நிறைவேற்றியாக வேண்டும்!

அதற்கு நாம் அனைவரும் முன்பைவிட வேகமாக உழைத்தாக வேண்டும். கலைஞரின் உடன்பிறப்புகள் நாம் என்பதை நிரூபித்தாக வேண்டும். நிரூபிப்போம்!

‘பொல்லாத ஆட்சியை ஒழித்து பொற்கால ஆட்சியை அமைப்போம்!’ - என்று கூறி இந்தச் சிறப்பான முப்பெரும் விழாவை எழுச்சியோடு ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருக்கும் தா.மோ.அன்பரசன், சுந்தர் ஆகிய இருவருக்கும் அவர்களுக்குத் துணை நின்ற கழக நிர்வாகிகளுக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

நன்றி வணக்கம்!”

இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories