மு.க.ஸ்டாலின்

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளிக் காட்சியின் மூலம் உரையாற்றினார்.

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

“எப்போது யார் காலை யார் வாரலாம் எனக் காத்திருப்பவர்கள் தற்போது ஒன்றுகூடி இருப்பது மக்களுக்காக அல்ல; கூட்டுச் சேர்ந்து கொள்ளையடிக்க! இந்தக் கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையில் இருந்து விரட்டுவோம்!!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

இன்று (07-10-2020), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

"கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., அவர்களே!

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அவர்களே!

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் கவுதம் சிகாமணி அவர்களே!

‘அ.தி.மு.க. அரசின் கொரோனா காலத்துக் கொள்ளைகள்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்களே!

கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளே! கழக முன்னோடிகளே – தியாகச் செம்மல்களே!

இந்தக் காணொலிக் காட்சிக் கூட்டம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த அன்பிற்குரிய நண்பர்களே!

முத்தமிழறிஞர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! அனைவருக்கும் வணக்கம்!

கழகத்தின் வளர்ச்சிக்காகவும், நிர்வாக வசதிக்காகவும் கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகமானது வடக்கு, தெற்கு என்று சமீபத்தில்தான் பிரிக்கப்பட்டது.

வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரான உதயசூரியன் அவர்களுக்கும், தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளரான வசந்தம் கார்த்திகேயன் அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுதலை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் மாவட்டப் பொறுப்பாளர்களாகவும் இருப்பதால் மக்கள் பணியும் - கழகப் பணியும் ஒருசேர சிறப்பாகச் செய்யக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள். அவர்களுக்கு அந்தந்த மாவட்டக் கழகங்களைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அனைவரும் ஒத்துழைப்புத் தந்து பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதேபோல் கவுதம் சிகாமணி அவர்களும் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று - மக்களவை உறுப்பினராக இந்தத் தொகுதி மக்களுக்குப் பணியாற்றிடும் வாய்ப்பை பெற்று சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

பொதுவாக செப்டம்பர் மாதம் என்பது தி.மு.கழக மாதமாகும். தந்தை பெரியார் பிறந்தநாள் - பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் - கழகம் தோன்றிய நாள் - இம்மூன்றையும் சேர்த்து முப்பெரும் விழாவாக செப்டம்பர் மாதம் கொண்டாடுவோம். செப்டம்பரைத் தாண்டி அக்டோபர் மாதத்திலும் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அந்தளவுக்கு ஒவ்வொரு மாவட்டக் கழகமும் போட்டி போட்டுக் கொண்டு காணொலிக் காட்சி மூலமாக முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் ‘முப்பெரும் விழா’வை நடத்தினோம். பின்னர் கரூரிலும் கன்னியாகுமரியிலும் நடந்தது. இன்று கள்ளக்குறிச்சி மாவட்டக் கழகங்கள் நடத்துகின்றன. கரூர் மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 50,000-க்கும் மேற்பட்டவர்கள் அந்த மாவட்டத்தின் சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்றார்கள் என்றால், இந்தக் கள்ளக்குறிச்சியில் 600-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து 60,000-க்கும் மேற்பட்டோர் கழக உணர்வோடு பங்கேற்றுள்ளார்கள். அந்தளவிற்கு இங்கு ‘முப்பெரும் விழா’ சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அடுத்து திருவள்ளூர், தேனி, கோவை என அனைத்து மாவட்டங்களிலும் முப்பெரும் விழா தொடர்ந்து நடக்க இருக்கிறது.

‘கோடு போடச் சொன்னால், ரோடு போடுவார்கள் நம்முடைய மாவட்டச் செயலாளர்கள்’ என்பதை ஒவ்வொரு மாவட்டக் கழகமும் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது.

எந்தச் சூழலிலும் தொய்வு இல்லாமல் கட்சிப் பணி ஆற்றக் கூடியவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல்வீரர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறோம்.

அதற்கு அடித்தளமிட்டு, கழகம் 70 ஆண்டுகளையும் கடந்து கம்பீரமாக நடைபோடக் காரணமாக இருந்த கழக முன்னோடிகள் 100 பேருக்கு இந்த விழாவில் பொற்கிழிகள் வழங்கப்பட்டன.

கழகத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தீரர்களை கழகம் ஒருபோதும் மறவாது; அதன் அடையாளமாகவே, தொடர்ந்து நடைபெற்று வரும் முப்பெரும் விழாக்களில் பொற்கிழிகள் வழங்கப்பட்டு, கழகத்தின் முன்னோடிகள் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்!

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

கழகம் தொடங்கிய ஆரம்பக் காலக்கட்டத்தில் ஒரு நிர்வாகி, பேரறிஞர் அண்ணா அவர்களிடம், ''அண்ணா என்னிடம் செலவு செய்வதற்கு பணம் இல்லை, அதனால் என்னைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிடுங்கள்" என்று சொன்னாராம். அதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள், “கரிக்கட்டை வாங்குவதற்குப் பணம் வைத்திருக்கிறாயா?” என்று கேட்டாராம். ‘இருக்கிறது அண்ணா’ என்று அவர் சொன்னாராம்.

''அதை வைத்துச் சுவரில் நம்முடைய கருத்து முழக்கங்களை எழுது. அதுதான் கட்சிப் பணி” என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். அப்படி வளர்ந்த கட்சி தான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகம்.

நீலகிரிக்குச் சென்றார் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் மாலையில் கலந்து கொள்ள வேண்டிய கூட்டத்தின் மேடை திடீரென சரிந்துவிட்டது. உடனடியாக மேடை போடுவதற்கான கால அவகாசம் இல்லை. உடனே, ''ஏதாவது ஒரு திண்ணையை ஏற்பாடு செய்யுங்கள். அனைவரும் என்னை சுற்றி உட்காருங்கள், நான் பேசுகிறேன்'' என்று சொல்லிவிட்டுப் பேசிவந்தவர் கலைஞர் அவர்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இன்னும் வித்தியாசம் ஆனவர். அவர் ஓர் ஊரில் தங்கியிருந்தார். அப்போது ஒரு பெண் வந்து பெரியாரைச் சந்தித்தார். “அய்யா.. என் கணவர் 16 நாட்களுக்கு முன்னால் இறந்து போனார். இன்று அவருக்கு 16-வது நாள் விசேஷம். அதனால் எங்கள் வீட்டுக்கு உறவினர்கள் பலரும் வந்திருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் நீங்கள் வந்து பேச வேண்டும்” என்று அந்தப் பெண் பெரியாரை அழைத்துள்ளார். பெரியாரும் சரி என்று புறப்பட்டுவிட்டார். அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளார்கள். ''அந்தப் பெண்ணை யாரென்றே தெரியாது, கணவர் இறந்த வீட்டு நிகழ்ச்சிக்கு பேசக் கூப்பிடுகிறார். அதற்கெல்லாம் அய்யா போக வேண்டுமா?' என்று தடுத்துள்ளார்கள். “எங்கே போய்ப் பேசினாலும் என் கொள்கையைத் தானே பேசப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு ஒன்றரை மணிநேரம் அந்த வீட்டில் போய் தனது கொள்கைகளைப் பேசிவிட்டு வந்தார் தந்தை பெரியார் அவர்கள்.

இதையெல்லாம் சொல்லக் காரணம்; எந்தச் சூழலிலும் நாம் நம்முடைய கொள்கைப் பிரச்சாரத்தை நிறுத்த மாட்டோம், கடமையில் இருந்து நழுவ மாட்டோம் என்பதற்கு உதாரணம்தான் இந்த கொரோனா காலத்திலும் காணொலி மூலமாக முப்பெரும் விழாவைக் கழகம் நடத்தி வருவது என்பதைப் பெருமையாக மட்டுமல்ல, கர்வத்தோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கள்ளக்குறிச்சி என்பது புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாக இருக்கலாம். ஆனால் கள்ளக்குறிச்சி என்பது புதிதல்ல. அது கள்ளக்குறிச்சி அல்ல, கழகக் குறிச்சி!

அந்தளவுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றில் இரண்டறக் கலந்த ஊராகக் கள்ளக்குறிச்சி இருக்கிறது.

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

1952-ஆம் ஆண்டில் 'பராசக்தி' திரைப்படம் வெளியானது. தலைவர் கலைஞரின் வாழ்க்கையில் மட்டுமல்ல, தமிழகத் திரையுலக வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தியது பராசக்தி. அந்தப் படத்தின் வசனங்களைக் கேட்ட பிறகு தலைவர் கலைஞரின் புகழ் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலித்தது.

அந்தக் காலக்கட்டத்தில், ‘பராசக்தியைச் செதுக்கிய செல்வன் வருகிறார்’ என முதன் முதலாக பதாகை தாங்கி தலைவர் கலைஞரை வரவேற்ற இடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு உட்பட்ட தேவபந்தலம் என்ற ஊர் என்பதைப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பராசக்தியைச் செதுக்கிய செல்வனான கலைஞர் அவர்கள் இந்த வட்டாரத்துக்கு வந்த பிறகுதான் திராவிட முன்னேற்றக் கழகம் அதிக முன்னேற்றம் கண்டது.

1957-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தென் ஆற்காடு மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் அதிகளவு சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றார்கள்.

1967 தேர்தலுக்கு முன்னதாக ‘காகிதப்பூ’ தேர்தல் பிரச்சார நாடகத்தை கலைஞர் அவர்கள் ஊர் ஊராகப் போய் நடித்து வாக்குகளையும் திரட்டினார்; நிதியையும் திரட்டினார். அப்போது கள்ளக்குறிச்சியிலும் ‘காகிதப்பூ’ நாடகம் போட்டார் கலைஞர் அவர்கள்.

ஒருபக்கம் கல்வராயன் மலையும் - இன்னொரு பக்கம் கோமுகி அணையும் கொண்ட ஊர் இந்தக் கள்ளக்குறிச்சி. மண்ணைப் பொன்னாக்கும் விவசாயம் செழித்த பூமி. உழைத்துப் பிழைக்கும் உத்தம மக்கள் அதிகம் வாழும் பகுதி.

எந்தவிதத் தொழிற்சாலைகளும் இல்லாத இந்த வட்டாரத்துக்கு என்ன மாதிரியான தொழிற்சாலையைக் கொண்டு வருவது என்று முதலமைச்சர் கலைஞர் அவர்கள் சிந்தித்தார்கள். 1990-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, கள்ளக்குறிச்சியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைக்க உத்தரவிட்டிருந்தார். ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அடுத்து வந்த ஆட்சி அதனைச் செய்யவில்லை. கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

மீண்டும் 1996-ஆம் ஆண்டு ஆட்சியமைத்த கலைஞர் அவர்கள், ஒரே ஆண்டில் அந்தச் சர்க்கரை ஆலையைக் கட்டி முடித்தார்கள். 1997-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சிக்கு நேரடியாக வந்து திறந்து வைத்தார்கள். அது கரும்பு விவசாயிகள் வாழ்வில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

நான் இளைஞரணிச் செயலாளராக இருந்தபோது, இந்தப் பகுதி முழுவதும் வந்து அதிக இடங்களில் கழகக் கொடியை ஏற்றியிருக்கிறேன்.

செம்மரக் கடத்தல் வழக்கில் இந்தப் பகுதி மக்கள் மீது ஆந்திராவில் பொய் வழக்குத் தொடரப்பட்டிருந்த நேரத்தில், ஆந்திர மாநிலத்திற்கு கழக வழக்கறிஞர்களை அனுப்பி, அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர ஏற்பாடு செய்தேன்.

கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விளிம்பு நிலையில் வாழும் நாடோடி மக்களான நரிக்குறவர்கள், பூம்பூம் மாட்டுக்கார சமூக மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரை அடையாளம் கண்டு, அவர்களுக்கு சுழற்சி முறையில் மூன்றுவேளை உணவுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், காய்கறிகள் இப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டப் பொறுப்பாளர்கள் உதயசூரியனாக இருந்தாலும், வசந்தம் கார்த்திகேயனாக இருந்தாலும் போட்டி போட்டுக் கொண்டு ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாகப் பொதுமக்களுக்கு உதவிகள் செய்தார்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிமித்தமாக கோவா, குஜராத், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும், மும்பை, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களுக்கும் சென்று, திடீர் ஊரடங்கால் ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களைச் சொந்த ஊர்களுக்கு அழைத்துவரும் பொருட்டு, தனது சொந்தச் செலவில் பேருந்துகளை ஏற்பாடு செய்து அனுப்பிவைத்து, அந்தந்த மாநில அரசுகளிடம் பேசி ஒப்புதல் பெற்று கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அழைத்து வந்தார் நம்முடைய வசந்தம் கார்த்திகேயன்.

அதேபோல், உதயசூரியன் அவர்களுடைய ஏற்பாட்டின் பேரில் கர்நாடக மாநிலத்தில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் பேருந்துகள் மூலம் தமிழகம் அழைத்துவரப்பட்டனர்.

இப்படி இந்த வட்டாரத்து மக்களுக்காக நாம் ஆற்றிய பணிகள் ஏராளம்!

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

ஆனால் இன்றைய தினம் தமிழகத்தை ஆளும் அரசு, இந்த மாவட்டத்துக்கு மட்டுமல்ல; எந்த மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை!

இது விவசாயிகள் அதிகமாக வாழும் பகுதியாகும். அதிலும் குறிப்பாக கரும்பு விவசாயிகள் அதிகம் வாழும் பகுதி. கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை, மூங்கில்துறைப்பட்டு சர்க்கரை ஆலை - ஆகிய இரண்டு ஆலைகள் இருக்கின்றன.

கரும்பு விவசாயிகளிடம் இருந்து கரும்பு பெறும் சர்க்கரை ஆலைகள், அதற்கான விலையை முறையாக - ஒழுங்காக உரிய நேரத்தில் தருகிறார்களா என்றால், இல்லை!

இத்தொகையை வாங்கித் தருவதற்கான போராட்டத்தை நாம்தான் நடத்தினோம். சட்டமன்றத்தில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து பேசினோம். விவசாயிகள் கைக்கு ஓரளவு பணம் வந்து சேர போராடினோம். ஆனால் முழுமையாக இன்னமும் வரவில்லை.

தமிழகத்தில் மட்டும் 46 சர்க்கரை ஆலைகள் மூலமாக விவசாயிகளுக்கு சுமார் 2000 கோடி ரூபாய் தரப்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். இதில் அரசு சர்க்கரை ஆலைகளும் உள்ளன; தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. இருவருமே முழுமையாகத் தரவில்லை. பாக்கி வைத்துள்ளார்கள் என்றால் அந்தக் தொகையை வாங்கித் தர வேண்டியது அரசாங்கத்தின் கடமை அல்லவா?

இந்த இலட்சணத்தில் மத்திய அரசு வேளாண்மைச் சட்டம் வந்தால் என்ன ஆகும்?

மத்திய அரசு தான் கொண்டுவரும் வேளாண் சட்டங்களை ஆதரித்து ஒரு விளம்பரத்தைப் பத்திரிகைகளில் கொடுத்தார்கள். அதில் பருத்தி, காபி, தேயிலை, கரும்பு ஆகியவை போலவே கார்ப்பரேட் நிறுவனங்களோடு சேர்ந்து விவசாயிகள் தொழில் செய்யலாம், அதிக லாபம் பெறலாம் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

இந்த விளம்பரம் தயாரித்தவர்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்து கரும்பு விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வேண்டும்.

அவர்கள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா - இல்லையா என்பதைக் கேட்க வேண்டும்.

கரும்பு விவசாயிகளுக்கு வாரக்கணக்கில் அல்ல; மாதக் கணக்கில், ஆண்டுக் கணக்கில் பாக்கி வைத்துள்ளார்கள்.

பிறகு அவர்களால் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்?

கரும்பு விவசாயியின் வாழ்க்கை, ஆலையில் அரைக்கப்படும் கரும்பாக ஆகிவிட்டது. அதே போல் மற்ற விவசாயிகளின் வாழ்வையும் நசுக்க நினைக்கிறார்கள். அதற்காகத்தான் வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாகச் சட்டம் கொண்டு வந்துவிட்டு, அதனை விவசாயிகள் ஆதரிக்க வேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கிறது.

அந்தச் சட்டத்தை ‘நானும் விவசாயி தான்’ என்று சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார்.

அந்த மூன்று சட்டங்களும் நிறைவேறினால் வேளாண்மை சிதைந்து போகும்! விவசாயி வாழ்க்கை இருண்டு போகும்! அதனால் நாங்கள் எதிர்க்கிறோம்.

எல்லா விவசாயிகளுக்கும் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு, தான் விளைவிக்கும் பொருளுக்கு உரிய குறைந்தபட்ச விலை வேண்டும் என்பதுதான்.

அதுவே இந்த மூன்று சட்டத்திலும் இல்லை.

இது ஒன்றே போதாதா இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு?

ஆனால் எல்லாம் தெரிந்தவரைப் போல ஆதரிக்கிறார் பழனிசாமி.

“ஸ்டாலினுக்கு விவசாயம் தெரியுமா?” என்று கேட்கிறார் பழனிசாமி.

நான் விவசாயி என்றோ, விவசாயம் செய்வதாகவோ சொன்னேனா? இல்லையே!

விவசாயிகளின் கஷ்டம் தெரிவதற்கு விவசாயியாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை.

விவசாயத்தின் மீது, விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருந்தால் போதும். அது என்னிடம் இருக்கிறது.

விவசாயிகள் மீது உண்மையான அக்கறை இருப்பதால் தான் அந்த மூன்று சட்டங்களுக்கும் எதிராக நாடாளுமன்ற மாநிலங்களவையிலும் - மக்களவையிலும் பேசினோம். கண்டித்தோம். எதிர்ப்புத் தெரிவித்தோம்.

உடனடியாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டுள்ளோம்.

மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிடவேண்டும், சட்டமன்றத்தை உடனே கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

வேளாண்மை நாட்டின் முதுகெலும்பு என்றால், விவசாயிகள் நம் மாநிலத்தின் உயிரோட்டமானதும் விலைமதிப்பற்றதுமான அரிய சொத்துகள்! அவர்களின் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றிடும் கடமை உணர்ச்சி மாநில அரசுக்கு இருக்க வேண்டும். அத்தகைய உணர்ச்சி எடப்பாடி பழனிசாமிக்கு இருந்தால் அவரை விவசாயி என்று ஒப்புக்கொள்ளலாம்!

அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் இருக்கும் பொருள் 14-ல் இருக்கும் வேளாண்மை தொடர்பான சட்டங்களை நிறைவேற்றும் முழு அதிகாரமும் மாநில அரசுக்குத்தான் இருக்கிறது.

அதேபோல் நிலம் - நிலம் சார்ந்த உடன்படிக்கை ஆகியவை மாநிலப் பட்டியல் 18-ல் இருக்கிறது.

இந்த அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக் கொள்கிறது. இதனைத் தடுக்க முடியாத பழனிசாமிக்கு தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்ளத் தகுதி நிச்சயமாக கிடையாது?

இந்த மூன்று சட்டத்தையும் அவர் எதிர்த்தால், விவசாயி என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டு நானும் விவசாயி தான் என்பது ஊரை ஏமாற்றும் காரியம்!

வேளாண்மைச் சட்டங்களால் விவசாயிகள் அடையும் நன்மை என்ன என்று சென்னைக்கு வந்து வகுப்பு எடுக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பொருளாதாரத்தை மொத்தமாகத் தரை மட்டத்துக்கு இறக்கிய பிறகு இப்போது வேளாண்மைத் துறை பற்றி விளக்கங்கள் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்.

“கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றுவோம்” - தி.மு.க முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் சூளுரை!

விவசாயிகள் வெளிமாநிலத்தில் போய் விற்பனை செய்யலாம் என்று ஏதோ பெரிய கண்டுபிடிப்பைப் போல அவர் சொல்லி இருக்கிறார். தங்கள் ஊரைவிட்டு வெளியே போய் விற்பனை செய்யும் விவசாயிகள் சிலர்தான் இருப்பார்கள். மாவட்டத்தை விட்டு அடுத்த மாவட்டம் செல்பவர்கள் அதிலும் குறைவாகத்தான் இருப்பார்கள்.

ஆனால் மாநிலம் விட்டு மாநிலம் போகலாம் என்று சொல்கிறார் நிதியமைச்சர்.

அப்படி மாநிலம் விட்டு மாநிலம் எல்லாராலும் போய் வியாபாரம் செய்ய முடியுமா? அதற்கான செலவை விவசாயிகள் ஏற்க முடியுமா? இதுகூட ஒரு அமைச்சருக்குத் தெரியாதா?

''குறைந்தபட்ச ஆதார விலை தொடரும்'' என்று நிர்மலா சீதாராமன் சொல்கிறார். அவரது பேட்டியில்தான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே!

பிரதமர் பேசும்போதுதான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே!

மத்திய அரசு கொடுக்கும் விளம்பரத்தில்தான் குறைந்தபட்ச ஆதார விலை இருக்கிறதே தவிர; சட்டத்தில் இல்லையே!

பிரதமரோ, நிதியமைச்சரோ, குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயித்து சட்டத்தைத் திருத்தத் தயாரா என்று கேட்க விரும்புகிறேன்.

இதுவரை விவசாயிகள் அரசாங்கத்திடம் விற்றார்கள்.

உழவர் சந்தையில் விற்றார்கள். வேளாண் விற்பனை கூடங்களில் விற்றார்கள். ஆனால் இந்தச் சட்டம் மூலம் பண்ணை ஒப்பந்தம் என இடைத்தரகர்களை நுழைத்தது ஏன்?

விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வது மாநிலத்தின் அதிகாரம் என்று சொல்லும் மத்திய அரசு அவர்களின் விளை பொருட்களின் விற்பனைக்கு மத்திய அரசு சட்டம் இயற்ற எப்படி அதிகாரம் கிடைத்தது?

மாநில அதிகாரத்தில் உள்ள வேளாண்மையில் மத்திய அரசு சட்டம் இயற்ற அதிகாரம் அறவே இல்லை.

கடந்த நான்காண்டுக் காலமாக ஆட்சி நடக்கவில்லை. அ.தி.மு.க. என்ற கட்சியைக் கோட்டையில் வைத்து நடத்திக் கொண்டு இருந்தார்கள்.

முதலில் - பன்னீர்செல்வத்துக்கும் சசிகலாவுக்கும் சண்டை!

அடுத்து - பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் சண்டை!

பின்னர் - பழனிசாமிக்கும் சசிகலாவுக்கும் சண்டை!

அதற்கடுத்து - பன்னீர்செல்வத்துக்கும் பழனிசாமிக்கும் சண்டை!

- இதுதான் நான்காண்டு காலமாக தமிழ்நாட்டில் நடக்கிறது.

எப்போது யார் காலை வாருவார்கள் என்ற பயத்திலேயே ஆட்சி ஓடுகிறது.

பன்னீர்செல்வமாக இருந்தாலும் பழனிசாமியாக இருந்தாலும் காலில் விழுந்து பதவியை வாங்கியவர்கள் என்பதால் ஒருவர் காலை இன்னொருவர் வாருவது அவர்களது பிறவிக்குணமாக ஆகிவிட்டது.

'ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது, விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைக் கமிஷனில் முதல் ஆளாக அமைச்சர் விஜயபாஸ்கரை விசாரிக்க வேண்டும்' என்று சொன்னவர் பன்னீர்செல்வம். அவரே விசாரணைக் கமிஷனுக்கு போகவில்லை.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் என்ன சொன்னார்?

எப்போதும் நிறுத்தி நிதானமாகப் பேசக் கூடியவர். “பன்னீர்செல்வம் தன் மீதான ஊழல் புகார்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். சேகர் ரெட்டியை அறிமுகப்படுத்தியதே ஓ.பி.எஸ்.தான். ஜெயலலிதா சிறையில் இருக்கும் போது சேகர் ரெட்டிக்கு பதவி போட்டுக் கொடுத்தது பன்னீர்செல்வம்தான்'' என்று பேசியவர் அமைச்சர் சி.வி.சண்முகம்.

இப்படிப்பட்ட ஆட்கள் இன்று ஒன்று சேர்ந்துள்ளார்கள் என்றால் என்ன அர்த்தம்?

மக்களுக்காகவா? அல்ல! இன்னும் ஆட்சி முடிய ஆறுமாதம் இருக்கிறது. அதுவரைக்கும் ஒன்றாக இருந்து கொள்ளையடிப்போம் என்பதற்காக ஒன்றுசேர்ந்துள்ளார்கள்.

இன்று நடப்பது ஆட்சியல்ல; வீழ்ச்சி. இந்த வேதனையாட்சி விரைவில் முடிவுக்கு வரவேண்டும். இந்த வீழ்ச்சி விரைந்து தடுக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சாரப் பணியை நீங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும்.

எனக்கு முன்னால் பேசிய எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் இந்த கொரோனா காலத்திலும் அ.தி.மு.க அரசு எப்படியெல்லாம் கொள்ளையடித்து வருகிறது என்பதைப் பட்டியலிட்டார்.

இத்தகைய கொள்ளைக் கூட்டத்தைக் கோட்டையை விட்டு வெளியேற்றும் ஜனநாயகப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுப்போம். நன்றி. வணக்கம்!"

இவ்வாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

banner

Related Stories

Related Stories