மு.க.ஸ்டாலின்

“மேகதாது அணையால் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணைத்திட்டம் விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும்

“மேகதாது அணையால் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவிரி நடுவர் மன்ற மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிராக, கர்நாடகாவில் மேகதாது அணை அமைப்பது தொடர்பாக – கர்நாடக அரசு அளித்துள்ள திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது மற்றும் அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

“கர்நாடக மாநில முதலமைச்சர் தங்களைச் சந்தித்த போது, தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, மேகதாது அணை உள்ளிட்ட நீர்ப்பாசன மற்றும் குடிநீர்த் திட்டங்களுக்கு முன்கூட்டியே அனுமதி வழங்குமாறு வலியுறுத்தி இருப்பது எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது.

மேகதாது அணைத் திட்டம், 05.02.2007 அன்று காவிரி நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பையும், 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் முற்றிலும் மீறுவதாகும். மேலும், இது விவசாயிகளின் நலனுக்கும், பொதுமக்களின் குடிநீர்த் தேவைகளுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக விவசாயிகளும், பொதுமக்களும் தொடர்ந்து உறுதியாக தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.

“மேகதாது அணையால் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு அச்சுறுத்தல் ஏற்படும்” - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

மேலும், மேகதாது அணைத் திட்டம் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர்ப் பங்கீட்டு விதிமுறைகளுக்கு எதிரானது என்பதால் அதனை ஏற்க முடியாது என நிராகரித்து, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, மேகதாது அணை கட்ட அனுமதி வழங்கும் விவகாரம் தற்போது நீதிமன்றம் தீர்மானிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது.

குடிநீர்த் திட்டம் என்ற போர்வையில் முன்மொழியப்படும் மேகதாது அணைத் திட்டம் காவிரியின் தாழ்வான வடிநிலப் பகுதிகளாக உள்ள மாநிலங்களுக்கு – குறிப்பாக தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வருவதில், எப்போதுமே சரிசெய்யவோ, மாற்றியமைக்கவோ முடியாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், பல லட்சம் மக்களின் தேவையை நிறைவு செய்யும் கூட்டுக்குடிநீர்த் திட்டங்களுக்கும் இது பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மிக முக்கியமாக, அரசு இதழில் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்திற்கான நீர்ப்பங்கீட்டை இது கடுமையாகப் பாதிக்கும்.

எனவே, தமிழக விவசாயிகள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கைக்கோ அல்லது கட்டுமானப் பணிக்கோ, கர்நாடக முதலமைச்சர் கோரியபடி ஒப்புதல் வழங்கக் கூடாது எனச் சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்துமாறு, தி.மு.கழகம் சார்பாக தங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories