மு.க.ஸ்டாலின்

எடப்பாடியின் விளம்பர மோகம் - தக்க பதிலடி கிடைக்கும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

அடக்குமுறை, ஆணவங்களை எதிர்கொண்டு, நேருக்கு நேர் சந்தித்து அவற்றை புறமுதுகிட்டு ஓடவிட்டு வெற்றிக்கண்ட இயக்கம் தி.மு.க என தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்

எடப்பாடியின் விளம்பர மோகம்  - தக்க பதிலடி கிடைக்கும் என  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை ஆங்காங்கே எடுத்திட வேண்டும் என தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற, நிர்வாகிகளுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:-

“கொரோனா நோய்த் தொற்றால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு- அனைவருடைய வாழ்வும் செய்வதறியாது ஸ்தம்பித்து நிற்கின்ற நெருக்கடி மிகுந்த நிலையிலே கூட, அ.தி.மு.க அரசும், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் “பேரிடரை” ஒரு வாய்ப்பாகக் கொண்டு, நாகரிக சமுதாயம் சிறிதும் ஏற்கவியலாதவாறு, “அரசியல்” செய்து வருவது கண்டு, நடுநிலையாளர்கள் மிகுந்த வேதனை கொண்டுள்ளனர்.

“ஊரடங்கு உத்தரவு, ஆளுங்கட்சியான அ.தி.மு.கவிற்கு மட்டுமே விதிவிலக்கு- மற்றவர்களுக்கு எல்லாம் கட்டாயம்” என்று அதிகார துஷ்பிரயோகம் செய்து, ஒரு முதலமைச்சர் மிகுந்த பாரபட்ச அணுகுமுறையுடன் செயல்படுவது, ஜனநாயகத்திற்கே கேடாய் அமைந்திருக்கிறது. பொதுமக்களுக்கான “நிவாரணத் தேரை” அனைவரும் ஒன்று கூடி இழுக்க வேண்டும் என்ற அடிப்படை ஒற்றுமை எண்ணமே இல்லாத இரக்கமற்ற மனப்பான்மை கொண்ட முதலமைச்சரை தமிழகம் பெற்றிருப்பது ஒரு கெட்ட வாய்ப்பாகும்.

எடப்பாடியின் விளம்பர மோகம்  - தக்க பதிலடி கிடைக்கும் என  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

பிரதமரின் அழைப்பின் பேரில் நாடு முழுவதும் “சுய ஊரடங்கு” மார்ச் 22 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு, அடுத்து 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகும்- தி.மு.க. சார்பில் எவ்வளவோ வலியுறுத்தியும், தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்திக் கொண்டிருந்தது முதலமைச்சர் பழனிச்சாமிதான். பெற்றோர், மாணவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே, 8.35 லட்சம் மாணவர்களை 24.3.2020 அன்று ப்ளஸ் டூ தேர்வு எழுத வைத்ததும் அவர்தான்!

“அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தை நடத்திட வேண்டும்” என்று தி.மு.க. சார்பில் மார்ச் 28 ஆம் தேதியே கோரிக்கை விடுத்தும்- அதை ஏற்க மறுத்த முதலமைச்சர், ஊரடங்கு நேரத்தில் தலைமைச் செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், சுகாதாரத் துறைச் செயலாளர் ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று 31.3.2020 அன்று ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதே தேதியில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவத் துறை அதிகாரிகளுடன் அமர்ந்து, தலைமைச் செயலாளரே ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

“அனைத்துக் கட்சிக் கூட்டம் அரசியல்” என்று, தி.மு.க.வின் கோரிக்கைக்கு “சுயநல நோக்குடன்” பதில் சொன்ன முதலமைச்சர், 3.4.2020 அன்று தலைமைச் செயலாளர் மூலம் அனைத்து மதத் தலைவர்களையும் அழைத்து தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தரவிட்டார். சுகாதாரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டவர்களுடன் அமர்ந்து 10.4.2020 அன்று மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தியவர் இதே முதலமைச்சர்தான்.

அமைச்சர்கள், அதிகாரிகள் என்று 40க்கும் மேற்பட்டவர்களை ஒரே அறையில் அமர வைத்து, 11.4.2020 அன்று அமைச்சரவைக் கூட்டத்தையே முதலமைச்சர் நடத்தியிருக்கிறார். இத்தனை கூட்டங்களையும் நடத்திய போது முதலமைச்சருக்கு தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு தெரியவில்லை. ஆலோசனைக் கூட்டம் நடத்துவதால், “யாருக்காவது நோய்த் தொற்று இருந்தால் மற்றவர்களுக்கும் பரவும்” என்பது தெரியவில்லை.

எடப்பாடியின் விளம்பர மோகம்  - தக்க பதிலடி கிடைக்கும் என  தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

மத்திய மாநில அரசுகளின் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவிக்கும் என்பதை உணரவில்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகம் “அனைத்துக் கட்சிக்கூட்டம்” என்று அறிவித்ததும், மேற்கண்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி, சென்னை மாநகரக் காவல்துறை மூலம் நோட்டீஸ் கொடுக்க வைத்து- அப்பட்டமான- அசிங்கமான- அநாகரிகமான அரசியலைச் செய்திருக்கிறார் முதலமைச்சர் திரு பழனிச்சாமி.

இந்த நோட்டீஸ் கிடைக்கப்பெற்றவுடன் “கூட்டத்தில் 11 தலைவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள். பத்திரிக்கையாளர் சந்திப்பு இல்லை. தனிமனித இடைவெளி உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் அனைத்தும் கூட்ட அரங்கில் கடைப்பிடிக்கப்படும். அரசின் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றெல்லாம் திமுக உறுதியளித்தும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற தாழ்வு மனப்பான்மையில், கொரோனா நோய்த் தடுப்பு குறித்த தி.மு.க.வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடை செய்தது - கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கை என்று எவரும் ஏற்க மாட்டார்; அதிமுக என்ற கட்சியின் அரசியல் ரீதியான நடவடிக்கை என்ற ஆணவத்தை எடப்பாடி வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஜனநாயகம் மிக வலிமையானது. இப்படி ஆணவத்திற்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும், பக்குவம் பெறாத அரசியலுக்கும் தக்க தருணத்தில் நிச்சயம் பதிலடி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. கொரோனா போன்ற கொடிய நோய்த் தொற்றில் கூட தன்னை மட்டுமே முன்னிறுத்தி- அதிமுக என்ற கட்சியை முன்னிறுத்தி- தமிழக அரசு என்ற மக்களுக்கான நடுநிலை அமைப்பை அரசியல்மயமாக்கிக் கொண்டிருக்கிறார் திரு எடப்பாடி பழனிச்சாமி.

mk stalin
mk stalin
twitter

சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் 1 கோடி ரூபாயை தன்னிச்சையாக எடுத்துக் கொள்வது, தி.மு.க. வின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தடுப்பது, பாதிக்கப்பட்டோருக்கு தி.மு.க. வழங்கும் உணவு மற்றும் நிவாரண உதவிகளை தடை செய்வது எல்லாமே, ஊரடங்கு நேரத்தில் தி.மு.க. ஆற்றி வரும்- பெரும் வரவேற்பைப் பெற்றுவரும்- மக்கள் பணியை எப்படியாவது தடுக்கும் உள்நோக்கம் கொண்டது. சீர்கெட்ட அந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மக்கள் நலன் சார்ந்த பேரிடரிலும், பொருளாதார இழப்பிலும் தமிழகம் தடுமாறிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில்- திராவிட முன்னேற்றக் கழகம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்வதில் மட்டுமே முனைப்பு காட்ட வேண்டும் என்றும், எக்காரணம் கொண்டும் திசை திருப்பும் பின்னடைவான எவ்வித காரியத்திலும் அதிமுகவைப் போல இறங்கிவிடக்கூடாது என்றும், முடிவு செய்திருக்கிறது. எனவேதான் தமிழக அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் நோக்கில் , நாளைய தினம் கானொலிக் காட்சி மூலம், அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.

“பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்” என்பது இதுதானோ என்ற கருதும் அளவிற்கு, பழனிச்சாமி “விளம்பர மோகத்திலும்” “தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவும்” ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அடக்குமுறைகளையும்- ஆணவங்களையும் எதிர்கொண்டு- நேருக்கு நேர் சந்தித்து- அவற்றை புறமுதுகிட்டு ஓடவிட்டு, வெற்றி கண்ட இயக்கம் இந்த மாபெரும் மக்கள் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம். ஆகவே கழக மாவட்டக் கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் அனைவரும் கொரோனா நோயின் கொடூரத் தாக்குதலில் இருந்து தமிழக மக்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆங்காங்கே எடுத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்!” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories