பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமைந்த நாள் முதலே நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிரான இந்துத்வா கும்பலின் அராஜக செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது. அதனை பேரறிஞர் அண்ணாவின் பெயரை கொண்டுள்ள பா.ஜ.கவின் கூட்டணி கட்சியான அ.தி.மு.க எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆதரித்து வருவது மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், இந்து தீவிரவாதம் உருவாவதை யாராலும் தடுக்க முடியாது என தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அ.தி.மு.க அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,“பா.ஜ.கவுக்கு அ.தி.மு.க பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திர பாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது கண்டனத்துக்குரியது.”
“அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவி நீக்கம் செய்வதோடு சட்டரீதியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.