மு.க.ஸ்டாலின்

படைக்கலத் தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அபாயகரமானது - மு.க.ஸ்டாலின்

தனியார் மயத்தில் அதீத ஆர்வம் காட்டிவரும் பா.ஜ.க அரசு படைக்கலத் தொழிற்சாலைகளை தனியாருக்குத் தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அபாயகரமானது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

படைக்கலத் தொழிற்சாலைகளை தனியாருக்குத்  தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அபாயகரமானது - மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழகத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 6 படைக்கலத் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள மொத்தம் 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றியமைத்து, தனியாரிடம் தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின் முயற்சிக்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படைக்கலத் தொழிற்சாலைகள் இந்திய ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும், போர் வாகனங்கள், கனரக பீரங்கிகள், இலகு ரக- நடுத்தரத் துப்பாக்கிகள், வெடி பொருட்கள், பாராசூட் மற்றும் சிப்பாய்களுக்கான படை உடைகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட தரத்துடன் தொடர்ந்து தயாரித்து வழங்கி, சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன. 41 படைக்கலத் தொழிற்சாலைகளிலும், 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகிறார்கள் என்பதோடு, அவை 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் உபகரணங்களையும் உடைகளையும் உற்பத்தி செய்கின்றன.

படைக்கலத் தொழிற்சாலைகளை தனியாருக்குத்  தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு அபாயகரமானது - மு.க.ஸ்டாலின்

ஆனால் மத்திய அரசு அவ்வப்போது இந்த படைக்கலத் தொழிற்சாலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபடும் போதெல்லாம், இந்த திருச்சி படைக்கல தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும், கூட்டு நடவடிக்கைக் குழுக்களும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கின்றன. மத்திய இராணுவத்துறை அமைச்சர்களாக இருந்த மறைந்த திரு ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மற்றும் திரு மனோகர் பாரிக்கர் ஆகியோர் இந்த படைக்கலத் தொழிற்சாலைகள் தனியார் மயமாக்கப்படமாட்டா என்று எழுத்து பூர்வமான உத்தரவாதங்களை பாராளுமன்றத்தில் கொடுத்துள்ளார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் மீண்டும் இந்த 41 படைக்கலத் தொழிற்சாலைகளையும் கார்ப்பரேஷன்களாகவோ அல்லது வர்த்தக ரீதியிலான நிறுவனங்களாகவோ மாற்றிவிட முயற்சிகளை மேற்கொண்டுள்ளது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர்களே கொடுத்த வாக்குறுதிகளுக்கு முற்றிலும் எதிரானது.

தொடர்ந்து தனியார் மயத்தில் அதீத ஆர்வம் காட்டிவரும் மத்திய பாஜக அரசு, படைக்கலத் தொழிற்சாலைகளையும் தனியாருக்குத் தாரை வார்ப்பது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும் அபாயகரமான போக்கு என்பதையும், தமிழ்நாட்டிலும், நாடு முழுவதிலும் உள்ள 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் வேலை வாய்ப்பிற்கும், இந்த தொழிற்சாலைகளை மறைமுகமாக நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் மாறி விடும் என்பதையும் மத்திய பா.ஜ.க. அரசு உணர வேண்டும்.

ஆகவே படைக்கலத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலித்து- தமிழகத்திலும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள 41 படைக்கலத் தொழிற்சாலைகளை கார்ப்பரேஷன்களாக மாற்றும் முடிவினை மத்திய பா.ஜ.க. அரசு உடனே கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தொழிற்சாலைகளை மேம்படுத்திடத் தேவையான நவீன சீர்திருத்தங்களைச் செய்வதற்கு தொழிலாளர்களும், ஊழியர்களும் தயாராக இருப்பதால் - அவர்களுடன் கலந்து பேசி, நியாயமான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, 41 தொழிற்சாலைகளும் மத்திய அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் தொடர்ந்து செயல்பட்டிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறுக் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories