மு.க.ஸ்டாலின்

ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்களுக்கு இனிப்பையும் வழங்கியுள்ள பட்ஜெட் : மு.க.ஸ்டாலின்

மத்திய பட்ஜெட், ஏழை எளிய மக்களுக்கு கசப்பையும் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்களுக்கு இனிப்பையும் வழங்கியுள்ள பட்ஜெட் : மு.க.ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

2019-20ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில், மக்கள் நலன் சார்ந்த எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பட்ஜெட் ஏழைகளுக்கு கசப்பையும், கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பையும் வழங்கியிருப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய பா.ஜ.க அரசின் நிதிநிலை அறிக்கை, வழக்கம் போல் “அலங்கார வார்த்தைகளும்” “அறிவிப்புகளும்” நிறைந்த அணிவகுப்பாகக் காட்சியளிக்கிறதே தவிர- கூட்டுறவுக் கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் வகையில், மாநிலங்களின் உணர்வுகளும் எதிர்பார்ப்புகளும் பிரதிபலிக்கப்படவில்லை. இது காதுக்கு விருந்தே தவிர, கருத்துக்கு விருந்தில்லை.சாமான்ய மக்கள் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு அளிக்கப்படும் குறைந்தபட்ச மான்யத்தையும் பறிக்கும் முழக்கமே பட்ஜெட் உரையில் இடம்பெற்றுள்ளது.

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, போக்குவரத்துக் கட்டண உயர்வு- அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு என்பதில்தான் முடியும். “50 லட்சம் கோடி நிதி திரட்டும் வகையில் ரயில்வே தனியார் மயமாக்கப்படும்” என்ற அறிவிப்பு, சாதாரண மக்கள் அதிகம் பயன்படுத்தும் மிக முக்கியமான ரயில் போக்குவரத்தை பொது மக்களிடமிருந்து தட்டிப் பறித்து, செல்வந்தர்களுக்குத் தாரை வார்ப்பதைப் போல் இருக்கிறது.

பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வைத்துள்ள 51 சதவீதப் பங்கையும் கூட, குறைத்துக் கொள்ளலாம் என்று கொள்கை முடிவை அறிவித்து- நீண்ட காலமாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பா.ஜ.க. ஆட்சியில் முழுவதுமாக மூடு விழா நடத்திவிடுவார்கள் போலிருக்கிறது. 2019-20- நிதியாண்டில் மட்டும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் கோடி பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் திரட்டிட வேண்டும் என்று வரிந்து கட்டிக் கொண்டு மத்திய அரசு நிற்பது பெரும் கவலையளிக்கிறது.

தமிழகத்திற்கென்று எந்த பிரத்தியேகத் திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. நதிகள் இணைப்புத் திட்டம் பற்றி நிதி நிலை அறிக்கையில் எந்த அறிவிப்பும் இல்லை- குறிப்பாக கோதாவரி-கிருஷ்ணா- காவேரி நதிகள் இணைப்புக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. கடுமையான குடிநீர்ப் பஞ்சத்தில் தவிக்கும் தமிழ்நாட்டிற்கு- தமிழக அரசு கோரிக்கை விடுத்த 1000 கோடி ரூபாய் நிதியைக் கூட இந்த நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கவில்லை.

தனி நபரின் வருமான வரி விலக்கு வரம்பை உயர்த்தாத பா.ஜ.க. அரசு, தங்களுக்காகத் தேர்தலில் பாடுபட்டு, வெற்றிக்கு வழி அமைத்துக் கொடுத்த கார்ப்பரேட்டுகளுக்குக் கரிசனத்துடன், 250 கோடி ரூபாய் “டேர்ன்ஓவர்” உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகையை – இந்த நிதி நிலை அறிக்கையில் 400 கோடி ரூபாய் வரை “டேர்ன் ஓவர்” உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும் நீட்டித்து- 99 சதவீத கார்ப்பரேட் கம்பெனிகள் வரிச்சலுகை பெறும் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு விட்டது. அதுவும் போதாது என்று, வருமான வரியிலிருந்தும் கார்ப்பரேட்டுகளுக்கு, 5 சதவீத கூடுதல் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி மற்றும் ஏழை மாணவர்களின் கல்விக்கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு எதுவும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது; மத்திய அரசுக்கு, அவர்களெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதை உணர்த்துகிறது. பத்திரிக்கைகள் அச்சடிக்கத் தேவையான “நியூஸ் பிரின்ட்” இறக்குமதிக்கு, புதிதாக பத்து சதவீதம் “கஸ்டம்ஸ் டூட்டி” விதித்திருப்பது “பிரின்ட் மீடியாக்களை” அடியோடு முடக்கி, செய்திப் பரவலையும் கருத்துச் சுதந்திரத்தையும் தகர்த்திடும் தந்திரமாக இருக்கிறது. ஜனநாயகத்தின் தூண்களான பத்திரிக்கைத் துறையை நசுக்கும் வகையில் இப்படியொரு வரிச்சுமையை ஏற்றி இருப்பது, ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றை பலவீனப் படுத்துவதாக இருக்கிறது.

வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்துவோர், 2 லட்சம் ரூபாய் செலவில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வோர் வருமான வரிக் கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும் என்பது சுற்றுலா ஆசையுள்ள நடுத்தர மக்களைப் பாதிக்கும் நடவடிக்கை ஆகும்.குறிப்பாக மின் கட்டணங்கள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான குடும்பங்களில் மின் கட்டணம் அதிகமாகவே செலுத்தும் நிலை உள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடர்பு இல்லாமல், அதைப்பற்றிய கவலையே இல்லாமல், மேல்தட்டு மனப்பான்மையுடன், உப்பரிகையிலிருந்து இந்த நிதி நிலை அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான் இந்த அறிவிப்புகள் வெளிக்காட்டுகின்றன.

ஆகவே பா.ஜ.க. அரசுக்கு மக்கள் அளித்த வாக்குகளுக்கு அர்த்தமில்லாமல்- அவர்களை வஞ்சிக்கும் வகையில்-மீண்டும் கார்ப்பரேட்டுகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த நிதி நிலை அறிக்கை; ஒரே நாடு-ஒரே தேர்தல், ஒரே ரேஷன் அட்டை, ஒரே மின்விநியோகம், ஒரே கல்விமுறை என்று மாநில அரசுகளைச் சிறிதும் சட்டை செய்யாத, மாநில உரிமைகளை மதிக்காத, அனைத்தையும் மையப்படுத்திடும் முயற்சிக்கு முன்னோட்டமாகவே தெரிகிறது. இந்த நிதிநிலை அறிக்கை ஏழை எளிய நடுத்தர மக்களைக் கணக்கில் கொள்ளவில்லை, கசப்பைத் தந்திருக்கிறது. ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு இனிப்பை வழங்கியிருக்கிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் சாதாரண சாமான்யர்களுக்கு மத்திய பாஜக அரசின் இந்த நிதி நிலை அறிக்கை, எட்டாத தூரத்தில் நட்டுவைக்கப் பட்டிருக்கிறது! '' இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories