மு.க.ஸ்டாலின்

‘நீட்’  விலக்கு பெறாமல் மாணவர்கள் தற்கொலையை வேடிக்கை பார்க்கிறது அ.தி.மு.க - மு.க ஸ்டாலின்

நீட்டிலிருந்து தமிழகத்திற்கு விலக்குப் பெறுவதற்கு எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல் பதவியில் நீடிப்பதில் மட்டுமே அதிமுக அரசு காலத்தைக் கழிப்பதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

‘நீட்’  விலக்கு பெறாமல் மாணவர்கள் தற்கொலையை வேடிக்கை பார்க்கிறது அ.தி.மு.க - மு.க ஸ்டாலின்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள். இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மாதம் நடைபெற்ற நிலையில், இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் தமிழகத்தைச் சேர்ந்த 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையில் பதவியேற்ற மத்திய பா.ஜ.க அரசு, இன்னமும் தமிழ்நாட்டில் நடக்கும் “நீட்”தற்கொலைகளை அமைதியாகவும், அராஜக மனப்பான்மையுடனும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட திருப்பூர் மாணவி ரிதுஸ்ரீ, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மாணவி வைஷியா ஆகியோரின் அதிர்ச்சியளிக்கும் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களை இழந்து வாடும் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் என் அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இதயத்தை நொறுக்கும் அந்த இளம் மாணவிகளின் அகால மரணம் பெற்றோரை மட்டுமல்ல - தமிழக மக்கள் அனைவரையும் நீங்காத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 51 சதவீதத்திற்கு மேற்பட்ட - சுமார் 75 ஆயிரம் தமிழக மாணவ, மாணவியர் இந்தத் தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. அவர்களில் இரு மாணவியர் இப்படி அவசர முடிவெடுத்து தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக இளைஞர்களின் மருத்துவக் கல்விக் கனவை நீட் தேர்வு எவ்வளவு மோசமாகப் பாழ்படுத்தி, சிதைத்து- இளம் மாணவ, மாணவியர் வாழ்வில் சூறாவளியை ஏற்படுத்தியுள்ளது என்பதற்கு இதைவிட வேறு அபாயகரமான- அதிர்ச்சிதரவைக்கும் எடுத்துக்காட்டு தேவையில்லை. ஆனால் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசோ “கருணையை” க்கசக்கி எறிந்து விட்டு, “இதயத்தை தூக்கி ஒரு ஓரத்தில் வைத்து விட்டு” துவக்கத்திலிருந்தே மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதை துளிகூட எண்ணிப் பார்த்து உணர மறுக்கிறது.

இங்குள்ள அ.தி.மு.க அரசும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களின் அடிப்படையில் “நீட் தேர்விலிருந்து” தமிழகத்திற்கு விலக்குப் பெறுவதற்கு எவ்வித தொடர் நடவடிக்கையும் எடுக்காமல்- “எத்தனை உயிர்கள் போனால் நமக்கு என்ன?” என்று பதவியில் நீடிப்பதில் மட்டுமே கவனமாக காலத்தைக் கழிக்கிறது.

“கிராமப்புறங்களிலும், நகர்புறங்களிலும் உள்ள ஏழை மாணவர்கள் நீட் தேர்வால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்” என்று ஏற்கனவே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி “நீட் வழக்கில்” அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டது, தமிழ்நாட்டில் முதலில் நீட் தேர்வுக்குப் பலியான அனிதாவின் மரணத்திலிருந்து இன்றைக்கு நேர்ந்துள்ள ரிதுஸ்ரீ, வைஷியா துரதிருஷ்டவசமான மரணங்கள் வரை தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இனியும் இந்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான மாணவ மாணவியரின் உயிருடன் விளையாடாமல், “நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும்” என தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதியை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன்.கூட்டாட்சித் தத்துவத்தின் கீழ் செயல்படும் இந்தியாவில்,ஒரு மாநில அரசின் உணர்வுக்கு மதிப்பளிப்பது மத்திய அரசின் அரசியல் சட்டக் கடமை என்பதை பிரதமர் திரு நரேந்திரமோடி இப்போதாவது உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒவ்வொரு நீட் தேர்வின் போதும், தமிழக மாணவ- மாணவியர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதை ஆகிவருவது நாட்டிற்கும் நல்லதல்ல; தமிழகத்திற்கும் நல்லதல்ல என்பதை மத்திய ஆட்சியாளர்கள் உணர்ந்து திருத்திக் கொள்ளும் வகையில், எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் “நீட் பிரச்சினையை”நாடாளுமன்றத்தில் ஆணித்தரமாக எழுப்பி- உரிய தீர்வு காண முயற்சிக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories