மெட்ரோ நிறுவனத்தில் பணிபுரியும் 8 ஊழியர்கள் சங்கம் ஒன்று தொடங்கியதாக அவர்களை கடந்த டிசம்பர் மாதம் பணிநீக்கம் செய்தனர்.
இந்த பணி நீக்க நடவடிக்கையை எதிர்த்து பலகட்ட போராட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றும் தீர்வு எட்டப்படாததால், நேற்று சென்னை கோயம்பேடு அலுவலகத்தில் மெட்ரோ பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டத்தில், அவர்களது குடும்பத்தினரும் பங்கேற்று, மெட்ரோ ரயில் நிலையம் முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலபடுத்தப்பட்டது.
இதனையடுத்து, மெட்ரோ நிர்வாகம், ஊழியர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையிலும் தீர்வு காணப்படாதால் ஊழியர்கள் ஏமாற்றத்தையே சந்தித்தனர்.
இந்நிலையில், மெட்ரோ ரயில் ஊழியர்களின் உள்ளிருப்பு போராட்டத்தை பொருட்படுத்தாமல் இருக்கும் மெட்ரோ நிர்வாகத்தில் செயல்பாடு கவலையளிக்கிறது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணியாளர்களின் நியாமான கோரிக்கைகளுக்கு சுமுக தீர்வு காண வேண்டும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.