
மகாராஷ்டிர மாநிலம் மும்பையிலிருந்து சோலாப்பூர் நோக்கிச் வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் புனே ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது.
அப்போது ரயிலின் 4-வது பெட்டியின் ஒரு சக்கரம் மட்டும் தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. இதை உணர்ந்த ரயில் ஓட்டுநர் உடனே ரயிலை நிறுத்தினார்.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விபத்தைத் தொடர்ந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டு, மாற்று ரயில் மூலம் அவர்களின் பயணத்தைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த விபத்து குறித்து ரயில்வே போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தியா முழுவதும் வந்தே பாரத் ரயில் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
கடந்த 6 ஆண்டுகளில் தற்போதுதான் முதல் முறையாக வந்தே பாரத் ரயில் தடம் புரண்டுள்ளது. இதற்கு முன்பு, தண்டவாளத்தைக் கடந்த மாடுகள் மீது ரயில் மோதியதால் அதன் முன்பகுதி சேதமடைந்தது. இத்தகைய தொடர் சம்பவங்களால் வந்தே பாரத் ரயிலின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.






