
மேற்குவங்கத்தை திருடர்கள் என்று விமர்சித்தது உள்ள பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் பர்தமானில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி,"மேற்குவங்கத்தை திருடர்கள் என்று விமர்சித்தது மூலம், பிரதமர் மோடி ஒட்டு மொத்த மேற்குவங்க மக்களையும் அவமதித்து இருக்கிறார்.
ஒன்றிய அரசு நிதியை தராததால்தான், மாநில கருவூலத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. ஊழல் உச்சத்தில் இருக்கும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, பீகார் ஆகிய மாநிலங்களின் இரட்டை என்ஜின் பா.ஜ.க. அரசுகளின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை.
ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது பிரதமர் மோடி, மேற்கு வங்கத்துக்கு பயணம் செய்கிறார். ஆனால், மேற்குவங்க மாநிலத்துக்கு தரவேண்டிய வளர்ச்சி நிதியை மட்டும் தராமல் இருக்கிறது.
மேற்குவங்கத்தின் ஆட்சியை பிடிப்போம் என அமித்ஷாவும், மோடியும் காணும் கனவு, பகல் கனவாகவே போய்விடும்” என தெரிவித்துள்ளார்.








