ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க, ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI), தேசிய புலனாய்வு முகமை (NIA) உள்ளிட்டவற்றை பயன்படுத்தி தமது கட்சிக்கு நன்மை தரக்கூடிய அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதனை, நீதித்துறையும், எதிர்க்கட்சி தலைவர்களும், மக்களும் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவித்து வரும் வேளையிலும், தனது அதிகாரத்துவத்தால் தொடர்ந்து அரசியலமைப்பிற்கு எதிரான செயல்களை செய்து வருகிறது பா.ஜ.க.
இந்நிலையில், ஒன்றிய விசாரணை அமைப்புகளை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு மாற்றாக, அதிலிருந்து ஒரு படி மேல் சென்று, தற்போது மறைமுகமாக இந்திய மக்களாட்சியை உறுதி செய்யும் தேர்தல் ஆணையத்தையும் பா.ஜ.க ஆதரவு இயக்கமான மாற்றி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
அதற்கு, 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் நடந்த வாக்கு குளறுபடிகளே முக்கிய சான்றுகளாகவும் அமைந்தன. இதனைத் தொடர்ந்து தற்போது பீகார் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அங்கு புதிதாக வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR) என்ற முறையை அறிமுகப்படுத்தி, சுமார் 66 லட்சத்திற்கும் மேலான மக்களின் வாக்குரிமையை பறித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க.வின் B டீம் ஆக செயல்படும் தேர்தல் ஆணையம்.
இந்த வாக்குரிமை நீக்கத்திற்கு, ஆதார், நியாய விலைக் கடை அட்டை உள்ளிட்ட சான்றிதழ்கள் வாக்காளர் உரிமை பெற தகுதியானவை அல்ல, பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 11 ஆவணங்கள்தான் ஏற்கப்படும். அதுவும் அவற்றை குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என காரணம் தெரிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதனால், பிறப்பு சான்றிதழ் பெறாத எளிய மக்களுக்கும், வெளியூர்களில் பணிபுரியும் மக்களுக்கும் வாக்குரிமை பறிப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஆளும் பா.ஜ.க கூட்டணிக்கு சாதகமான நடவடிக்கையாக மாறியுள்ளது. இது குறித்து, நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும், நீதிமன்றங்களிலும் இந்தியா கூட்டணி கட்சிகள் கண்டனம் எழுப்பி, மேல்முறையீடு செய்து வரும் வேளையில், தேர்தல் ஆணையத்திற்கு மற்றொரு சிறந்த பதிலடியாக, பீகாரில் நாய் ஒன்றின் பெயரில் இருப்பிட சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
பீகாரில் வாக்குரிமை பெற பிறப்பு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்ட 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த ஆவணமாக பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், 11 ஆவணங்களிலும் போலியான சான்றிதழ்களை பெற முடியும். அவை ஒன்றும் நம்பகமான ஆவணங்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக நாய் ஒன்றின் பெயரில் இருப்பிட சான்றிதழ் பெறப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் கூறிய 11 ஆவணங்கள் எதுவும் ஆதார், நியாய விலைக் கடை அட்டைகளை விட உண்மையானவை அல்ல என்பது இதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.