பீகார் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்க்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்டுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி ”பீகாரில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சி செய்கிறார். தேர்தல் ஆணையம் ஒரு கைப்பாவையாக மாறிவிட்டது. வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து அரசியல் கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தவில்லை. இதில் நீதி எங்கே?. பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் மீது தேர்தல் ஆணையம் ஒருபோதும் எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது” என எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதேபோல் CPM நாடாளுமன்ற உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ”ஜனநாயக செயல்முறையின் அடிப்படை தூண் வாக்காளர்கள். பீகாரில் 4 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். 3 வாரங்களில் வாக்காளர் சிறப்பு திருத்தம் செய்ய முடியும் என்பதை கற்பனை செய்தும் பார்க்க முடியுமா?. போலி வாக்காளர்கள் இருந்தால் அதை நீக்க வேண்டும். ஆனால் அதை குறுகிய காலத்திற்குள் செய்ய முடியாது. இவர்களது நோக்கம் எங்களுக்கு அச்சமாக உள்ளது. எனவே தேர்தல் சிறப்பு திருத்தத்தை ஒத்திவைக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, ”ஒன்றிய அரசாங்கத்தின் முதுகெலும்பற்ற கைப்பாவையாக தேர்தல் ஆணையம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயகத்தை காப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் தேர்தல் ஆணையம்; ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்க அல்ல! கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் வாக்குரிமையை பறிக்கும் உங்களின் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரும். காத்திருங்கள்" என தெரிவித்துள்ளார்.