தெலங்கானா மாநிலம், பசாமயிலாரம் என்ற பகுதியில் சிகாச்சி என்ற கெமிக்கல் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் இன்று (ஜூன் 30) அந்த தொழிற்சாலையில் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தீ மளமளவென வேகமாக பரவியது.
தீ விபத்து ஏற்பட்டவுடனே அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறை, தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கவே, விரைந்து வந்த அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்தனர். இதனிடையே வெடி விபத்து நடந்த தொழிற்சாலைக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் தொழிற்சாலைக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், 14 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வெடி விபத்து தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.