பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில் கொண்டு வரப்படும் விவசாய விரோத சட்டங்களால் விவசாயிகள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்து வருகிறார்கள். மூன்று வேளாண் விரோத நடங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் ஒருவருடம் நடத்திய போராட்டத்தில் நாடே அதிர்ந்தது.
இந்த மூன்று வேளாண் விரோத சட்டங்களை ஒன்றிய அரசு நிறுத்தினாலும் இதுவரை விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிக்கொடுக்காமல் இருந்து வருகிறது. இயற்கை பேரிடர்கள் ஒருபுறம் தாக்கினால் மற்றொரு புறம் ஒன்றிய அரசு நயவஞ்சகமாக வஞ்சிப்பதால் விவசாயிகளின் தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக NCRB அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு வஞ்சித்து வந்தாலும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் உதவியுடன் விவசாயிகள் தங்களது பாசனங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.
தற்போது கொஞ்ச நஞ்ச விவசாயத்தையும் அழிக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. விவசாயிகள் பாசனத்துக்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் பாசன நீருக்கு வரிவிதிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு ரூ.1600 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மாநில அரசுகளுடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. 239.16 பில்லியன் கன மீட்டர் நிலத்தடி நீர் பிரித்தெடுத்தலில் 87% விவசாயத்துறையில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலத்தடி நீரை முறையாக பயன்படுத்துவதற்கே வரி விதிக்கப்போவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் விவசாயிகள் பயன்படுத்தப்படும் நீரின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்கப்படும் என ஒன்றிய ஜல் சக்தி அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்துள்ளார்.