குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் AI171 லண்டனுக்கு நேற்று நண்பகல் நேரத்தில் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, திடீரென குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அப்போது, வானுயரத்திற்கு தீப்பிழம்பு எழுந்து விபத்துக்குள்ளான விமானம் போயிங் நிறுவனத்தின் 787 டிரீம் லைனர் ரக விமானம் ஆகும். இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்ததில் 241 பயணிகளும் உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பினார்.
இதற்கிடையில், விபத்து நடந்த பகுதிகளை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போது, ”அகமதாபாத்தில் நடந்திருப்பது ஒரு விபத்து; யாராலும் விபத்துகளை தடுக்க முடியாது” என கூறியுள்ளார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், " ’அகமதாபாத்தில் நடந்திருப்பது ஒரு விபத்து; யாராலும் விபத்துகளை தடுக்க முடியாது’ என ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். நாட்டின் உள்துறை அமைச்சர் இப்படி கூறலாமா?. விமான விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களின் துயரத்தை உணராமல் அமித்ஷா பேசுகிறார்” என கண்டித்துள்ளார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் பவன் கெரா,"அமித்ஷா கூறுவதை பார்த்தால் பாதுகாப்பு கட்டமைப்பு, விதிமுறைகளை நிறுத்திவிடலாம் என்பதுபோல் உள்ளது.விபத்து நடப்பதை விதி என்று விட்டுவிட வேண்டும் என்று அமித்ஷா கூறுகிறாரா?. விபத்து நடந்தால் விதி பற்றி போதனை செய்யக் கூடாது; தவறுக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிய வேண்டும். விபத்துக்கு விதியை காரணமாக கூறுவது பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும்” என கண்டித்துள்ளார்.