இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு மக்களவையில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடந்து வருகிறது. இதில், அனைத்து கட்சி பிரதிநிதிகளும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று மக்களவையில் திமுக கொறடா ஆ.ராசா எம்.பி இந்திய அரசியலமைப்பு சட்டம் விவாதத்தில் பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய, ஆ.ராசா எம்.பி ”அரசியல் சாசனம் ஒரு கட்சியினருக்கானது அல்ல.ஒரு கட்சியினர் மட்டும் அதனை உரிமை கோர முடியாது. ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா அரசியல் சாசனத்துக்கு எந்த பங்களிப்பும் செய்யவில்லை.
தேர்தலுக்கு முன்பாக 400 இடங்களை பிடிப்போம் என்று பா.ஜ.க கூறியது. ஆனால் நடந்தது வேறு. மேலும், அரசியல் சாசனத்தை திருத்துவோம் என்று பேசினார்கள். தம் மீது உரிமை மீறல் பிரச்சினை கூட எழுப்பலாம். நான் ஆதாரத்தை தர தயாராக இருக்கிறேன். பாஜகவினர் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.